மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்


தன்னுடைய சம்பாத்தியத்திலோ அல்லது சொத்துக்களினால் வரும் வருவாயைக் கொண்டோ தன்னை பராமரித்துக் கொள்ள முடியாத மூத்தகுடி மக்கள்(60 வயதிற்கு மேற்பட்டவர்) அல்லது பெற்றோர் (60 வயதிற்குட்பட்டவராக இருந்தாலும்) மாவட்ட அளவிலான தீர்ப்பாயத்தை அணுகி மனு தாக்கல் செய்து இந்த சட்டத்தின் மூலம் பயன்பெற முடியும்.

மேற்படி மனுதாரர்கள், தங்களின் பராமரிப்பு செலவை ஏற்றுக்கொள்ளும்படி , தங்களின் பிள்ளைகள் அல்லது வாரிசுதாரர்கள் ( 18 வயதிற்கு மேற்பட்டவர்கள்) மீது மனு தாக்கல் செய்யலாம்.

மனுதாரர் அல்லது அவர் சார்பாக நியமிக்கப்பட்ட நபர் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மனுதாக்கல் செய்யலாம்.

பிள்ளைகள் எனப்படுபவர் மகன், மகள், பேரன், பேத்தியாக அல்லது தத்து பிள்ளைகளாக இருக்கலாம். வாரிசுதாரர் எனப்படுபவர் குழந்தை இல்லாத மூத்தகுடி மக்களின் சொத்துக்களின் மேல் உரிமை அனுபவிப்பவர் அல்லது உரிமை பெறப்போகின்ற உறவினராக இருக்கலாம்.

பராமரிப்பு செலவுத்தொகையானது ஒருவரது உணவு, உடை தங்குமிடம் மற்றும் மருத்துவ செலவுகள் ஆகியன அடங்கும்.

மனுதாரரின் வசிப்பிடத்திற்கு உட்பட்ட மாவட்டத்தீர்ப்பாயத்திலோ , யார்மீது மனுதாக்கல் செய்யப்படுகிறதோ அவருடைய வசிப்பிடத்திற்கு உட்பட்ட மாவட்டத்தீர்ப்பாயத்திலோ முறையிடலாம். பிள்ளைகள் வெளி நாட்டில் வசித்தால் அதற்குரிய அதிகாரிகள் மூலம் தீர்ப்பாயம் ஆணை வழங்கும்.

மனுதாரரின் கோரிக்கை சரியானதாக இருந்தால், அவர்களது பிள்ளைகள் அல்லது வாரிசுதாரர்களுக்கு மனுதாரரின் பராமரிப்பிற்கான தொகையை மாதாமாதம் தரும்படி தீர்ப்பாயம் ஆணையிடும். இதனை செயல்படுத்தாத பட்சத்தில் பிள்ளைகள் அல்லது வாரிசுதாரர்கள் கைது செய்யப்படலாம்.

மனுதாரருக்கு தரவேண்டிய தொகையினை தண்டத்தொகையுடன் சேர்த்து கட்டவேண்டி வரும். அல்லது சிறைசெல்ல நேரிடும்.

மூத்தகுடிமக்களின் உயில் மூலம் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை பராமரிக்காமல் கைவிட்டால், தீர்ப்பாயத்தினை அணுகி சொத்துக்களை
(தானமாக தந்திருந்தாலும்) திரும்ப பெறமுடியும். ( மேற்படி சட்டம் நடைமுறைக்கு வந்தபின் -2007ற்கு பிறகு சொத்து மாற்றப்பட்டிருக்க வேண்டும்.)

முழு விவரங்களை அறிய
www.india.gov.in/allimpfrms/allacts/2180.pdf 

1 comments:

அன்பின் சாகம்பரி - முதியோர் பராமரிப்பெல்லாம் சட்டத்தின் மூலம் செயல் படுத்த இயலாது. மனமிருந்தால் தான் மார்க்கம் வரும். இருப்பினும் சட்டமென்று ஒன்றிருத்தல் நல்லதுதான். வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா