மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

தியானம் செய்தால்
குப்பையான நினைவுகள்
வழித்தெறியப்படுமாம்
எனவேதான் .....
கண் மூடி தியானம்!

அந்த நொடியிலேயே
அவனின் உருவம்.....
தொடர்ந்து வந்த நினைவில்
- அவனுக்கும் எனக்குமான
விரிசல்(?) ஆரம்பித்தது
கேள்விக்குறி ஏன் என்றால்
அது சரி செய்ய முடியாத
பூகம்பப் பிளவானது
இனி ஒட்டாது என்றாகியது
சிறு குழந்தையாய்   கையில் ஏந்தி
தோளில் சுமந்து .....
அவனுக்காய் நடந்து ....
அவனுக்காய் படித்து .....
இதயத்தில் சுமந்து ......
துரோகி! என்னை புரிந்து
கொள்ள வில்லையே !



முதலில் அவன் பேசியவை
குப்பையாக தோன்றியது
நினைவின் வாலாக
நான் பேசியதும் வந்தது
அது தந்த செய்தியின் சாரம்
இரண்டாவது நிமிடத்திலேயே
எனக்கு புரிந்து போனது
வாலிப வயதில் இருந்தாலும்
என் மகனது குழந்தை பேச்சு
" என்னை புரிந்து கொள்" என்றது
மக்கிப் போகக்கூடிய குப்பை.
என் வார்த்தைகள் .....
என்றும் சபிக்கப்பட்டதாய்...
மக்காத குப்பையாய் எனக்குள்ளே...
தியானம் நிம்மதியை மட்டுமல்ல
நீதிபதியாய் நியாயமும் செய்யும்.

4 comments:

எவ்வளவு பெரிய செய்தி இந்தச் சிறிய கவிதைக்குள்.... அருமை..

நன்றி திரு.கருன்

தியானம் நிம்மதியை மட்டுமல்ல
நீதிபதியாய் நியாயமும் செய்யும்.//
உண்மை போதிக்கும் அருமையான
என்னைக் கவர்ந்த வரிகள்.

அருமையான புரிந்து கொள்ளல். மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.