ஈஸ்வர் சந்தர் வித்யாதர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். அவ்வப்போது நாட்டின் சுதந்திரத்தின் தேவையை தன் கருத்துக்களால் வலியுறுத்துவார். அவரை ஆங்கிலேயர்கள் பழிவாங்க எண்ணி விருந்திற்கு அழைத்தனர். விருந்து ஆரம்பிக்கும் முன் வெள்ளித்தட்டில் பட்டுத்துணி போர்த்தி பரிசளித்தனர். அதனை திறந்து பார்த்தால் அவருடைய ஒரே மகனின் தலை அதில் வைக்கப்பட்டு இருந்தது. உணர்ச்சிகளை வெளிக்காட்டாத அவர் பரிசிற்காக நன்றி கூறி அமைதியாக விருந்தை உண்டு கிளம்பினார். உடன் வந்தவர்களுக்கோ அதிர்ச்சி, எப்படி இவ்வாறு இருக்க முடிந்தது என்று. " என் மகனின் நிலை எனக்கு பெரும் துயர்தான். ஆனால் அதனை பார்த்து நான் துடித்து கதற வேண்டும், அந்த காட்சியை பார்த்து மனம் மகிழ வேண்டும் என்று காத்திருந்தனர். அப்படி ஒரு வெற்றியை நான் அவர்களுக்கு தரவிரும்பவில்லை. அதனால்தான் அமைதியாக இருந்தேன்" என்று கண்ணில் நீர் வழிய கூறினார். இங்கும் ஒரு அநீதீ நடந்தது அதற்கான வெளிப்பாடு மாறிப் போனது.
பொதுவாக உணர்ச்சி வசப்படக்கூடிய சூழ்நிலையில் ஒருவரது உணர்ச்சி வெளிப்பாடு, சுற்றி இருப்பவர்களின் பொருட்டு மாறுமா?. நமக்கென்று ஒரு வெளிப்பாடு இல்லையா?. நமக்கு நம்பிக்கையானவர்கள் முன்னிலையில் நாம் முழுவதுமாக நம்மை வெளிப்படுத்துவோம் என்பது மெய்யா? அப்படியெனில் நம் முன் சூழ் நிலைக்கு ஏற்ப முழுவதுமாக ரியாக்ட் செய்பவர்கள் நம்மை நம்புகிறார்கள் என்று பொருளா? கண்ணில் நீர் வழிய பேசுதல், கோபத்தின் ஒருவகை வெளிப்பாடா? அல்லது இயலாமையா? எனக்காக ஏதாவது செய்ய மாட்டாயா என்ற எதிர்பார்ப்பா? ஒரு வேளை இதனை ஆராய முடிந்தால் நம்மால் நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களுக்கும் நமக்குமான உறவினை சரியாக அளவிடமுடியுமா? இதனை புரிந்து கொண்டால் உறவுகளின் சிக்கலான முடிச்சுகளை அவிழ்க்க முடியுமா?