மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

    அணு உலையில் ஒரு அணு பிளந்து இரண்டாகி, நாலாகி, எட்டாகி பல்கி பெருகுவது போல பெண் எழுத்து தொடர் பதிவு, பெண் பதிவர்களின் சக்தியை பல மடங்கு பெருக்கி இருக்கிறது. இந்தத் தொடரில் என்னையும் எழுத அழைத்திருப்பதற்கு பிரியத்திற்குரிய ராஜிக்கு நன்றி. உண்மையில் பெண் எழுத்து என்று ஒன்று உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்ளவில்லை. இந்த விசயத்தில் நான் லட்சுமி மேடம் கட்சி. ஆண், பெண் பேதமை உடலுக்குத்தான் உண்டு , ஆத்மாவிற்கு கிடையாது. எல்லா கலைகளைப் போல் எழுத்துக் கலையும் ஆத்மார்த்தமானது. இதில் பெண் என்று பேதம் பிரிப்பது ஏன்?.

       ஒருவேளை பெண்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி எழுத பெண் எழுத்தரால்தான் முடியும் என்றும் பெண் எழுத்திற்கு முகவுரை கூறுகிறார்களோ? பெண் மனதின் மென்மையை எழுத்தால் தெரிவிக்க முடியுமா என்ன? குடும்பத்தின் அச்சாணியாய் திகழும் பெண்ணின் எண்ணங்களை தனிப்பட பிரித்து பேசமுடியாது. கணவனுக்காய் சிந்திக்கும்போது ஆணின் மனமும், குழந்தைகளுக்காய் சிந்திக்கும்போது குழந்தையின் பார்வையும் கொண்டு அவரவர்க்கு உரியதை முழுமையாக தந்து தன்னையும் சிறப்பாக பார்த்துக் கொள்ளும் பெண்ணை பற்றி ஆண்களுக்கும் தெரியாது. எப்போதும் தன்னுடைய எண்ணங்களை மனதிற்குள் வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்பதை தனக்குள்ளேயே முடிவெடுத்து அதனை மற்றவர்க்கும் புரியவைத்து அவர்களின் முடிவுபோல் செயல்பட வைக்கும் குடும்பத்தலைவியின் திறமை ரகசியம்தானே. கலாச்சாரத்தின் அச்சாணியாய் திகழும் பெண்ணின் ஆழ்மனம் மூடி வைக்கப்பட்டுத்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால், பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என்று நான் கருதுகிறேன். அகத்தியனின் 'விடுகதை' படம் பார்த்துவிட்டு மகள் வயதிலுள்ள சின்னப் பெண்களிடம் தவறான பார்வை பார்த்த ஆண்கள் எத்தனை பேர்? ஒரு நுணுக்கமான உளவியல் பிரச்சினை தவறான விளைவுகளை ஏற்படுத்தியது. இது போல்தானே மற்றவைகளும் தவறாக கையாளப்படுகின்றன.

          ஆண்கள், பெண்ணை பற்றி எழுதும் செய்திகள் உறுதியாக்கபட்ட செய்திகள் கிடையாது. செயல் படுத்துவதில் ஒரு சந்தேகம் இருக்கும். ஆனால் ஒரு பெண் நுணுக்கமான உணர்வுகளை பற்றி எழுதுவது, எலியை பிடிக்க பூனைக்கு வரைபடம் போட்டுத்தருவது போலாகிவிடும். ஒரு திறமையான பெண் எழுத்தாளர் இது போன்ற விசயங்களை உள்ளங்கை நெல்லிக்கனி போல எழுத முடியும். இதுபோன்ற எழுத்துகளினால், கல்வியறிவில் அடி மட்டத்தில் இருக்கும் பெண்களின் வாழ்க்கையையே குலைத்துவிடாதா. இது போன்ற ஒரு பார்வைதான் 'இரண்டு பேர்' கதையிலும் அன்றைக்குப் பார்க்கப்பட்டது.

           ஏன் ஆண்களை பற்றி தவறாகவே நினைக்கிறீர்கள். என் நண்பன் என்னை பற்றித் தெரிந்து கொள்வது தவறா என்று எண்ணலாம். நண்பனின் நண்பனுக்கு யார் நன்னடத்தை சான்றிதழ் தருவார்களாம். ஒரு ஊடகத்தில் எழுதப்படும் எழுத்துக்கள் பரவலாக பலரை சென்று அடையும். இங்கு ஒரு சமுதாய பொறுப்பு இருக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். படித்த தெளிவான பெண்கள், மற்ற பெண்களின் பாதுகாப்பு பற்றி கவலைப்பட வேண்டும். மாதவிடாய் சமயத்தில் பெண்ணின் உணர்வுகளை நுணுக்கமாக எழுதிய பெண் எழுத்தரின் எழுத்து பெரிய அளவில் பேசப்பட்டது, ஆனால் அதன் பாதிப்பு மிக மோசமானது. (எழுத்தாளரின் பெயரையும், சொன்ன விசயத்தையும் எழுத விரும்பவில்லை நான்.). இருபது வருசத்திற்கு முந்தைய வாசிப்பாளினிகளுக்கு புரியும்.

           நாசுக்கான விசயங்களை பெண்கள் கையாள வேண்டும் என்பது கட்டாயமில்லை. அது தேவையும் இல்லை. இது போன்ற விசயங்கள் ஒரு சிறந்த எழுத்தாளரை வேண்டுமானால் அடையாளம் காட்டலாம். ஆனால், ஒரு நல்ல எழுத்தாளரை தொலைத்துவிடும். வெறும் புகழுக்காக எழுதுவதாக புகார் வேறு எழும். காதல்,பாசம்,அன்பு,குடும்பப் பின்னணி, சமூகப் பார்வை, மருத்துவம்,மன வளம் இவற்றுடன் ஒரு சக்கர வியூகத்திலிருந்து வெளி வரும் நுட்பமான அறிவினை வளர்க்கும் பெண்களின் தன்மானம், வீரம், நெஞ்சுரம், முன் யோசனை போன்றவற்றை எழுதலாமே. எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது உங்கள் பதிலானால் பெண் எழுத்து என்கிற வார்த்தையே தேவையில்லை என்றுதான் பொருள்.

     என் பார்வையை பதிலாக தந்துள்ளேன், நிறைய திட்டு விழுந்தாலும் ஒன்றிரண்டு மயிலிறகு வருடல்கள் கிட்டும் என்று நம்புகிறேன். இந்த தொடரினை தொடர அமைதியான அழகான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் ஆன பதிவர் இராஜராஜேஸ்வரியையும், அருமையான மன வளக்கட்டுரைகள் எழுதும் சக பதிவர் சண்முகவேலையும்     அழைக்கிறேன்.

12 comments:

//எப்போதும் தன்னுடைய எண்ணங்களை மனதிற்குள் வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்பதை தனக்குள்ளேயே முடிவெடுத்து அதனை மற்றவர்க்கும் புரியவைத்து அவர்களின் முடிவுபோல் செயல்பட வைக்கும் குடும்பத்தலைவியின் திறமை ரகசியம்தானே//

மன்னிக்க வேண்டும் மேடம்.எல்லா பெண்களுக்கும், தனக்குள் முடிவெடுத்து
மற்றவருக்கு புரிய வைத்து அவர்கள் முடிவு போல் செயல் பட வைக்கும் சந்தர்ப்பங்கள் வாய்ப்பதில்லை.

மேலும் எலியை பிடிக்க பூனைகளுக்கு புதிதாக வரைபடம் தேவை இல்லை.
நுணுக்கமான உணர்வுகளை பெண் எழுத்தாளர்கள் எழுதுவதால்
கல்வியறிவில் அடி மட்டத்தில் இருக்கும் பெண்கள் வாழ்க்கை எப்படி குலைய முடியும்?கல்வியறிவில்
அடி மட்டத்தில் இருப்பவர்கள் இப்படி பட்ட எழுத்துக்களை படிப்பதே இல்லை.

"இரண்டு பேர்" கதையில் பார்க்கப்பட்ட பார்வைகளும் விமர்சன கண்டனங்களும் ஆண்களுடையதுதான்.பெண்களுடையது அல்ல.

பெண் எழுத்தாளர்களுக்கு சமுதாயப் பொறுப்பும், பெண்களின் பாதுகாப்பு பற்றிய அக்கறையும் இருத்தல் அவசியம் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்,ஆனால் அதற்காக அவர்கள் பிற தளங்களை அடிப்படியாக வைத்து எழுதுதல்
அவசியமற்றது என கூற முடியாதே.

சக்கர வ்யூகத்திலிருந்து வெளி வந்து எழுதுகிறவர்கள், ஆண் எழுத்தாளர்கள் போல் அல்லாமல்
கண்டனங்களுக்கும் கடும் விமர்சனங்களுக்கும் ஆளாகாமல் இருக்கின்றனரா என்பது முக்கியம்.

எனது இக்கருத்தையும் மயிலிறகாகவே எடுத்துக் கொள்வீர்கள்
என்ற நம்பிக்கையில் பின்னூட்டம் அளித்துள்ளேன்.
நன்றி

என்னையும் கேட்டு விட்டீர்கள் சகோதரி! ஓரிரு நாட்கள் தேவைப்படும்.நன்றி.

//எல்லா பெண்களுக்கும், தனக்குள் முடிவெடுத்து
மற்றவருக்கு புரிய வைத்து அவர்கள் முடிவு போல் செயல் பட வைக்கும் சந்தர்ப்பங்கள் வாய்ப்பதில்லை.//
மீன் குஞ்சிற்கு நீந்த கற்றுத்தர வேண்டுமா? சந்தர்ப்பங்களை உருவாக்கி தன் முடிவுகளை செயல்படுத்த பெண்களால் முடியும் ராஜி.

//கல்வியறிவில் அடி மட்டத்தில் இருக்கும் பெண்கள் வாழ்க்கை எப்படி குலைய முடியும்?கல்வியறிவில்
அடி மட்டத்தில் இருப்பவர்கள் இப்படி பட்ட எழுத்துக்களை படிப்பதே இல்லை.//
அவர்களை எக்ஸ்ப்ளாய்ட் செய்ய நினைப்பவர்கள் படிக்கலாமே. எங்கே தட்டினால் காலடியில் விழுவாள் என்று தெரிந்து கொள்ளலாமே ராஜி.

//அவர்கள் பிற தளங்களை அடிப்படியாக வைத்து எழுதுதல்
அவசியமற்றது என கூற முடியாதே.//
அது கத்திமேல் நடப்பது போன்றது, நாம் எழுதுவதின் வீச்சின் தாக்கம் எவ்வளவு என்பதை புரிந்து கொண்டு எழுதவேண்டும். அப்படியில்லையெனில் அது அவர்ககுல்லு அவசியமில்லாத வேலை.


//சக்கர வ்யூகத்திலிருந்து வெளி வந்து எழுதுகிறவர்கள், ஆண் எழுத்தாளர்கள் போல் அல்லாமல்
கண்டனங்களுக்கும் கடும் விமர்சனங்களுக்கும் ஆளாகாமல் இருக்கின்றனரா என்பது முக்கியம்.//
சக்கர் வியூகம் என்பது வாழ்க்கையின் சிக்கலான தருணங்கள் ஆகும்.

கலையில் எழுந்து கூடையில் சாப்பாடை எடுத்துக்கொண்டு, கம்பெனி அனுப்பும் வாகனத்தில் பயணித்து கூலிக்கு வேலை செய்யும் பெண்கள்தான் என்னுடைய கருத்தின் அடிப்படையாக நான் கொள்வது.

இன்றிலிருந்து ஒரு மாதத்திற்கு என்னால் எனது கணினியை
உபயோகிக்க இயலாத சூழ்நிலை.அதனால் உங்கள்
பதிவுகளை நான் மிகவும் மிஸ் செய்வேன்.முடியும் பொழுது
கணவரின் லேப்டாப் ஃப்ரீயாக இருந்தால் படித்து கருத்து
அளிப்பேன்.ஆனால் தமிழில் போட முடியாது.அதற்காக
மன்னிக்கவும்.ஒரு மாதம் கழித்து வந்து வழக்கம் போல் படிக்க இயலும்.
அதுவரை இந்த ராஜியை மறந்துடாதீங்க

கண்டிப்பாக ராஜி. I'll miss you. Thank you.

நாசுக்கான விசயங்களை பெண்கள் கையாள வேண்டும் என்பது கட்டாயமில்லை. அது தேவையும் இல்லை. இது போன்ற விசயங்கள் ஒரு சிறந்த எழுத்தாளரை வேண்டுமானால் அடையாளம் காட்டலாம். //
என் கருத்துத்தும் அது தான். கத்திமேல் நடக்கும் பயிற்சியும் திறமையும் பயிலாமல் அதற்கு முயற்சிப்பது சரியல்ல.
என்னையும் தொடர் பதிவுக்கு அழைத்துவிட்டீர்களே!
எழுதிவிட்டேன்,சரியா இல்லையா என்பதை நீங்கள் தான் தெரிவிக்க வேண்டும். எனக்குத் தெரிந்தது இவ்வளவுதான். மன்னிக்க வேண்டும்.

need ur comments

http://suharaji.blogspot.com/2011/04/blog-post_16.html

thank u

கருத்துரைக்கு நன்றி ராஜேஸ்வரி. உங்கள் பதிவின் கருத்துதான் நான் தினமும் பார்க்கும் பெண்களின் கருத்தும்.

நன்றாக இருக்கிறது தான்...எழுத்தில் ஆணென்ன..பெண்ணென்ன பேதம்?

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி திரு.நிவாஸ்.