அம்மாவின் ஆசை முத்தங்களுடன் கடிதம். நலமாக இருக்கிறாயா? இங்கு அனைவரும் நலம். ஊரில் மற்றவர்கள் அனைவரும் நலமா? அங்கு உனக்கு எப்படி உள்ளது?. உனக்கு என் மேல் கோபம் என்று நினைக்கிறேன். அழுத விழிகளுடன் நீ சென்றது எனக்கு இன்றைக்கும் விழித்திரையில் காட்சியாக படிந்துள்ளது. கண்ணை மூடினால் என் கண்மணி என்ன செய்கிறாளோ என்று கலங்குகிறேன். எதற்கும் கெடுபிடி செய்யும், அப்பாவின் சலுகைகளை தடை செய்யும், விருப்பமானதை வாங்கித்தர கணக்கு பார்க்கும் அம்மாவா இப்படி பேசுவது என்று நினைக்கிறாயா? ஆம், உன் அம்மாதான். நித்தம் உன்னுடன் சண்டை பிடித்து, உன் அண்ணன் போல் , உன்னை இயல்பாக இருக்கவிடாதவள்தான். வீட்டு வேலைகளை பார்க்க வேலையாட்கள் இருந்தாலும் உனக்கென்று சில வேலைகளை ஒதுக்கியதன் காரணம் புரியாது. உனக்கு உன் நிறுவனத்தில் தரப்பட்ட பயிற்சி உன்னை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். அது போல ஒரு வீட்டின் மகாராணியாய் நீ வாழ உனக்கு சில புரிந்து கொள்ளல்கள் வேண்டும்.
நாம் ஒருவரை புரிந்து கொள்ள முகம் பார்க்க வேண்டியதில்லை. செயல்களை வைத்து எடை போட வேண்டாம். நம்மை அவர்கள் ஒரு திசைக்கு திருப்ப முயற்சிப்பதை உணர்ந்து கொண்டு அவர்கள் நல்லவரா என்று புரிந்து கொள்ள வேண்டும். முகம் மறைக்கும் உணர்வுகள், செயல்கள் தாண்டிய எண்ணங்கள் இவற்றை நாம் புரிந்து கொண்டால், அடுத்தவரை எடை போட முடியும். அப்படி பார்க்கும்போது கெட்டவர்கள் நல்லது செய்வதும், நல்லவர்கள் கெட்டது செய்திருப்பதும் புரியும். அந்த ஏழாம் அறிவுதான் பெண்ணிற்கு தேவை.
நீ அருமையாக சமைப்பதாக சொன்னார்கள். அத்தனையும் புது வகைகளாமே. நீ கற்றுத்தந்ததை செய்யவில்லை என்கிறாயா. அடுப்பு பற்ற வைக்க நான்தானே உந்தித்தள்ளினேன். ஒரு தெரிந்த விசயத்தை கொண்டு புதிதாக ஒன்றை உருவாக்கும் நுட்பமான திறமை பெண்ணுக்கு உண்டு. இந்த திறமை அதீத கற்பனைகளுக்கும் வழி வகுக்கும். அவற்றின் பிடியிலிருந்து வெளிவர உனக்குத் தெரியும். ஏனெனில், கனவுலக தேவதையாக நித்தம் வானத்தில் சஞ்சரிக்க நான் விட்டதில்லை. யதார்த்தம்தான் சிறகுகளை மறைத்து பாதங்களை பதிய வைக்கும். உன் வாழ்க்கையிலும் ஊன்றி நிற்பாய்.
எதற்காக இத்தனை முன் ஏற்பாடுகள் என்கிறாயா?. இது வாழ்க்கைப்பாடம் மகளே. தண்ணீரில் விழுமுன் நீச்சல் தெரிய வேண்டும் அல்லது விழுந்தால் காப்பாற்றக்கூடியவர்களை சூழ வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டாவது நம்பிக்கையானது. மனிதர் மனதை படித்தால் கிட்டும். உன்னை நெருப்பில் நடக்க விட்டேன், நெருப்பை என் நெஞ்சிற்குள் புதைத்துக் கொண்டேன். இனி முழு நிலவில் உன் முகம் தெரியும். அது புன்னகை தவழும் முகமாக இருக்கும்.
மீண்டும் அடுத்த கடிதத்தில்
ஒரு மகளின் மகளான அன்னை.
ஒரு மகளின் மகளான அன்னை.-2