உதாரணமாக , நம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டல். சட்டென கோபப்பட்டு நாம் பல தீர்மானங்களை அறிவிப்போம். எதிரிலிருப்பவர்க்கு பதில் சொல்லும் முனைப்பில் பல பதில் கேள்விகளை குற்றச்சாட்டல்களாக முன்வைப்போம். அலுவலகம் எனில் "இது ஒரு பழி வாங்கும் நடவடிக்கை." என்று அறிவிப்போம். வீடு எனில் "என்னை குறை சொல்ல உனக்கு எந்த தகுதியும் கிடையாது" என்று மட்டம் தட்ட முயற்சிப்போம். அலுவலகத்தின் எதிர் நடவடிக்கையாக இன்னும் நம்மை குற்றவாளியாக்க முனைப்பு காட்டப்படும். உயர்பதவியில் இருப்பவர்கள் இதை செய்வதும் எளிது. நம்மிடம் தவறு இல்லை எனும்போது வார்த்தைகள் அக்க்னி ஏவல்களாக வெளிவரும். சரிதான், நம்மை சுற்றி இருப்பவர்கள் கூட நம் நியாயத்தை புரிந்து கொள்ளமுடியும். ஒரு தவிர்க்கமுடியாத கட்டத்தில் குற்றம் சாட்டியவர் ஒப்புக்கொள்ளும் நிலை வரும். இந்த பிரச்சினை இருவிதமாக வழிபடுத்தும். நாம் ஆர்பாட்டமாக கருத்துக்களை முன்வைத்து போராடும்போது வெற்றிபெற்றாலும் தோல்வியடைந்தவர் ஆவோம். ஏனெனில் எதிரணியில் ஒருவரை - நமக்கு எதிராக - நாமாகவே சேர்த்துவிடுகிறோம். தோல்வியின் கங்குகள் பொத்திவைக்கப்பட்டு ஒரு பெரிய அழிவை ஏற்படுத்த காத்திருக்கும். அந்த சூழலில் நாம் வெளிப்படுத்திய எதிர்மறையான உணர்வு வெளிப்பாடுகள் - கோபமாக பேசுதல், தவறான வார்த்தை பிரயோகங்கள்- பார்வையாளர்களில் சிலரையும் எதிர்மறையாக எண்ணவைக்கும். நட்புகளை இழக்கலாம், வேலைகூட இழக்க நேரிடும் - நம் விருப்பம் இல்லாமல்.
இதுவே குடும்ப சூழல் எனில், நம் எதிரே இருப்பவர் - இன்பத்திலும் துன்பத்திலும் நம்முடன் பங்கேற்கும்- நம் உறவினர்தான் என்று எண்ணாமல் வார்த்தைகள் வெளிப்பட்டு, புயல்வேகத்தில் அவர்களை தூக்கி எறிந்து பிரபஞ்சத்தில் தொலைத்துவிடும். பிறகு எல்லாம் முடிந்தபின் எஞ்சியிருப்பது எலும்பு மற்றும் சதையாலான ஒரு பிண்டம்தான். சில சமயம் வெறித்து பார்த்து புழுவென மாற்றும், சில வேளைகளில் கூட்டுபுழுவென மாறி ஒரு திரையிட்டு மறைந்து கொள்ளும். இதுவே நெருங்கிய உறவுகள் இல்லையெனில் மதியாதார் வாசல் மிதியாதே என்று வசனம் பேசிவிட்டு, உறவை மறுத்து துவேசம் கிளப்பிச் செல்லும். பிற்காலத்தில் நாமே சொல்லிக்கொள்வோம் " நான் நல்லாயிருக்கேன் என்று பொறாமை" . ஒருவருடைய முன்னேற்றத்தில் சந்தோசப்படாத உறவுகளுக்கு நாம் தந்த உள்ளீடுகளே காரணமாக இருக்கும். சமயத்தில், நம்மை சார்ந்தவர்கள் தந்தவற்றிகான பலனும்கூட நமக்கும் கிட்டும். இது போன்ற சிக்கல்களுக்கு காரணம் கண நேரத்தில் நாம் செயல்பட்டவிதம்தான். - வெகு சிலர் மட்டுமே இதுபோன்ற சூழலில் கட்டுப்பாடில்லாமல் செயல்பட்டுவிட்டு, பிறகு எப்பாடு பட்டாவது அந்த சிக்கலை சரிசெய்வர் - அது போன்ற தந்திரங்களை பயன்படுத்துவதில் பெரும்பாலானோருக்கு உடன்பாடு இருக்காது. .
- மகளுக்கான கடிதம் இடையிடயே தொடரும். அம்மா கடிதம் போட வேண்டிய தேவை அவ்வப்போதுதான் வருகிறது -சாகம்பரி.
உணர்வுகள் என்னும் ஆயுதம் -2