மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்


       நம்முடைய உணர்வுகளை புரிந்து கொள்வது, அவற்றை கையாள்வது, சரியான  செயல்பாட்டிற்காக நம்மை உந்திச்செல்வது, மற்றவர்களுடைய உணர்வுகளை புரிந்து  கொள்வது, உறவுகளுக்கு     மதிப்பு தருவது   போன்றவை முக்கியமானவையாகும். இவற்றை தெளிவாக பார்க்கலாமா? 

     விளக்க எளிதாக இருக்கும் என்பதால், இந்த பதிவில் கோபம் என்கிற உணர்வை எடுத்துக் காட்டாக கொள்கிறேன். 

     நம்முடைய உணர்வுகளை புரிந்து கொள்வது . நாம் எப்போது கோபப்படுவோம், வருத்தப்படுவோம், மகிழ்ச்சியாக உணர்வோம் என்பதை புரிந்து வைத்திருக்கவேண்டும். அப்போதுதான் அவற்றை சரிவர கையாள முடியும். பயன்படுத்துவது வேறு, கையாளுவது வேறு. கோபத்தை பயன்படுத்தி ஒரு விசயத்தை சாதித்துக் கொள்ளக்கூட முடியும், ஆனால் அது உருவாக்கிய எதிர்மறை விளைவுகளை சரி செய்ய முடியாது. கத்தியை கொலை செய்ய பயன்படுத்துவதற்கும், புற்று நோய் கட்டியை அகற்றுவதற்கும் உள்ள வித்தியாசம்தான். லாகவமாக கட்டுப்படுத்தும் தந்திரம் தெரிய வேண்டும். எல்லைகளை உணரும்போது கட்டுப்பாடும் புரிந்து விடும். ஒரு எலாஸ்டிக் நூலை அறுந்து போகாமல் இழுக்கக் கூடிய நீளம்தான் அதன் எல்லை. மீறினால் அறுந்து விடும். 

     உதாரணமாக , நம் நெருங்கிய உறவுகளிடம் கணவன்/மனைவி, மகன்/மகள் தவறு கண்டவிடத்து திருத்தும் வாய்ப்பாக - சரியான பாதைக்கு உந்திச் செல்லும்- கோபப்படலாம் - சமயத்தில் அதிர்ச்சி வைத்தியமாக கையாளலாம். அடுத்தடுத்த நிமிடங்களின் ஓட்டத்தில் கோபத்தை கரைத்துவிட வேண்டும். சற்று பொறுத்து , செய்த தவறினால் ஏற்படக்கூடிய தீமைகளை எடுத்துச் சொல்ல வேண்டும். சில சமயம் தவறுகளின் விளைவுகளை சரி செய்யவும் நாம் உதவவேண்டும். மணிக்கணக்கில் கோபத்தை இழுத்துபிடித்துக் கொண்டு இருந்தால், நம்மை மீறிய செயல்கள் வருங்காலத்தில் நடைபெற நேரிடும். கவனிக்க வேண்டியது, அப்போதைய தவறு மட்டும் அவர்களிடம் நமக்கு பிடிக்கவில்லை என்று துல்லிமாக காட்டவேண்டும். சில சமயம் ஒரேயடியாக பிடிக்காமல் போய்விட்டதோ என்று நினைத்து விடக்கூடும். தவறு செய்து சிலரிடம் சிக்கி விட்டால், நினைவு தெரிந்த நாள் முதல் நாம் செய்த தவறுகளை மறுபடியும் மெகா சைஸில் மனக்கண்முன் ஓடவிட்டு, முத்தாய்ப்பாக "நீ எதுக்குமே லாயக்கில்லை: என்று முடிப்பார்கள். எதிரிலிருப்பவர்கள், மட்டமான திரைப்படம் ஆரம்பிக்கும் முன் உறங்கிவிடுவது போல், கவனத்தை வேறு எதிலாவது திசை திருப்பி மாய உலகத்திற்குள் நுழைந்துவிடுவார்கள். இந்த கோபத்தினால் பயனில்லை. நமக்குத்தான் சக்தி, நேரம் அத்தனையும் விரையம். 

      சரி நெருங்கிய உறவுகள் அல்லாதவரிடம் கோபப்படலாமா? அதற்கு மிக குறுகிய எல்லை மட்டுமே உண்டு. எல்லோரிடமும் கோபப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. வெளியுலகத்தை பொறுத்தவரை ஒருவரை திருத்தும் கடமை நமக்கு குறைவு. அவருடைய தவறுகளை சுட்டிக் காட்டலாம். அவர்களின் தவறுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் - நமக்கு கீழ் வேலை பார்ப்பவர்கள்- இருந்தால், கண்டிப்பாக பேசலாம் - வார்த்தையோ முகமோ மாறக்கூடாது. அந்த தவறினை சரி செய்ய அவருக்கு உள்ள பொறுப்பையும், தார்மீக கடமையையும் கண்டிப்பாக சொல்ல வேண்டும். தலைமை அதிகாரிக்கும் வேலை பார்ப்பவருக்கும் அப்பா மகன் உறவு நிலவுவது நல்ல முன்னேற்றத்தை தரும் என்பார்கள். மேலாண்மை கோட்பாடானது , பெண் தலைமை அதிகாரிகள் ஒரு பாலமாக நின்று கற்றத்தருவதாகவும், ஆண் அதிகாரிகள் தண்டனை தருவதிலும் வெகுமதி தருவதிலும் வேலையை கற்பிப்பதாகவும் சொல்கிறது. வீட்டிலும் இதுதானே நடைபெறுகிறது. பொதுவாக கோப வீச்சின் நீளம் எதற்காக கோபப்படுகிறோம் என்பதையும், கோபத்தின் பின் விளைவுகளையும் தெளிவாக உணர்ந்து கொண்டால் குறைந்து விடுமாம்.

        சமயத்தில் உணர்ச்சிகரமான சூழல் முடிந்து பொறுமையாக ஆராயும் போது தவறாக வெளிப்படுத்தியிருப்பது புரியும். இதேபோலவே சம்பந்தப்பட்ட மற்றவரும் நினைத்து பார்ப்பார்கள். வெகு சிலரை தவிர்த்து மற்றவர்கள் பொதுவான உணர்வுகளின் பாதையில் பயணிப்பவர்தான். அந்த மற்றவரும் நாம் புரிந்து கொண்டவராக இருந்தால் இணக்கமான தருணத்திற்காக காத்து இருக்கலாமே. பேசி தீர்த்துக்கொள்ள முடியாதா என்ன? பொதுவாக என்னிடம் குடும்ப கவுன்சிலிங்கிற்கு வருபவர்கள் கோபமாக பேச ஆரம்பித்தால், பேச விட்டு விட்டு மறு நாள் வரச்சொல்வேன். மறுபடி மறு நாளும் கொட்டித் தீர்ப்பார்கள். இப்படி சில முறை வந்து சென்றபின் நியாய தர்மங்களுடன் பேச ஆரம்பிப்பார்கள். அவர்களாகவே தன்னுடைய தவறை ஒப்புக்கொள்வார்கள். மற்றவர்கள் செயலுக்கும் நியாயம் கற்பிப்பார்கள். ஏன் அப்படி மாறிப்போகிறார்கள்? உணர்வுகளை சரிவர கையாளத் தேவையான மற்ற குணங்கள் என்னென்ன? மீண்டும் அடுத்த பதிவில் தொடர்வோம். 

உணர்வுகள் என்னும் ஆயுதம - 4

16 comments:

நீங்கள் குடும்ப கவுன்சலிங் செய்கிறீர்களா? என்ன ?சேவையாகவா? தொழிலா ? நல்ல பதிவு.

//கத்தியை கொலை செய்ய பயன்படுத்துவதற்கும், புற்று நோய் கட்டியை அகற்றுவதற்கும் உள்ள வித்தியாசம்தான். லாகவமாக கட்டுப்படுத்தும் தந்திரம் தெரிய வேண்டும். எல்லைகளை உணரும்போது கட்டுப்பாடும் புரிந்து விடும். ஒரு எலாஸ்டிக் நூலை அறுந்து போகாமல் இழுக்கக் கூடிய நீளம்தான் அதன் எல்லை. மீறினால் அறுந்து விடும். //

அருமையான வரிகள். இதிலேயே எல்லாம் அடங்கி விட்டது. பாராட்டுக்கள்.

சேவையாகத்தான். இளையவர்களை நல்வழிப்படுத்த குடும்பப் பெரியவர்களின் ஒத்துழைப்பும் வேண்டுமல்லவா? பெரியவர்களின் ஒற்றுமையின்மை சிறியவர்களை வழி தவற செய்துவிடும். வீடு நன்று எனில் நாடும் நன்றல்லவா? நன்றி திரு.சண்முகவேல்.

//அருமையான வரிகள். இதிலேயே எல்லாம் அடங்கி விட்டது. பாராட்டுக்கள்.
//உற்சாகமூட்டும் பாரட்டுக்களுக்கு நன்றி சார்.

பொருளும் அதைச் சொல்லும் விதமும்
தங்கள் பதிவில் மிகச் சரியாக
இணைந்து போகிறது
அதற்குக் காரணம் விஷயங்களில்
தெளிவு என்பதைவிட
அதிக ஈடுபாடுதான்
காரணமாய் இருக்கமுடியும் என நினைக்கிறேன்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

அருமையான தொடர்பதிவு. என்ன சொல்லி அல்லது எப்படி உங்களை பாராட்டுவது எனத் தெரியவில்லை. ஏதோ சொல்ல வேண்டும் என்று இதை எழுதவில்லை உண்மையாகத்தான் சொல்லிகின்றேன் நீங்கள் மிகவும் நன்றாக எழுதிவருகிறிர்கள் மிஷினைப் பற்றி பாடம் எடுக்கும் பேராசிரியருக்கு எப்படி இந்த மனித உணர்வைப் பற்றி இவ்வளவு தெள்ளத் தெளிவாக புரிந்து எழுத முடிகிறது என்பதுதான் என்னுடைய ஆச்சிரியம்

//பெண் தலைமை அதிகாரிகள் ஒரு பாலமாக நின்று கற்றத்தருவதாகவும், ஆண் அதிகாரிகள் தண்டனை தருவதிலும் வெகுமதி தருவதிலும் வேலையை கற்பிப்பதாகவும் சொல்கிறது//

இந்த இடத்தில வேறுபடுகிறேன். பொதுவாய் பெண்கள் உயரதிகாரியை இருந்தால் அவர்களை அனுகவது கடினம் என்று சொல்பவர்களைதான் நான் கண்டுள்ளேன் (ஆண் பெண் இருபாலரும் சொல்லியுள்ளனர்)

ஈடுபாடு......! கால ஓட்டத்தில் மனிதர்களுக்கு உள்ளிருந்த மிருகங்களை வெளியில் இழுத்து வந்து விட்டனர். நான் மிருகங்களின் இடையில் ஒளிந்திருக்கும் மனிதர்களை வெளியே எடுக்கப்பார்க்கிறேன் - அன்பு ஒன்றே ஆயுதமாகக் கருதுகிறேன். இது அனைவர் கையிலும் இருக்கவேண்டும். நன்றி ரமணி சார்.

இயந்திரம் பற்றி மனிதர்களுக்குத்தானே பாடம் எடுக்கிறேன். பாடம் சரியாக போய்ச்சேரவேண்டுமெனில் சைக்காலஜியும் தெரிந்திருக்க வேண்டும். நன்றி.

அலுவலகத்தில் தலைமை அதிகாரிகளின் நடவடிக்கையை புரிந்து கொள்ளவே , அந்த கருத்தை பதிவு செய்தேன். கற்றுத்தருவது என்பது நம் நலன் சம்பந்தப்பட்ட விசயம்தானே. emotioalஆகத் தேவையில்லை என்று புரியும். ஆனால் supend, LOP, dismiss இது போன்ற கடினமான முடிவுகளை பெண்கள் அதிகமாக எடுக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன். யாரையாவது அழைத்து " அந்த புது பையனுக்கு கற்று கொடுங்கள் சார்" என்றுதான் redirect செய்து பார்த்திருக்கிறேன். நன்றி திரு.எல்.கே

ஆழமான எண்ணத்தில் உணர்வுகள் பற்றி எழுதியுள்ளீர்கள்..

You got the perseverance any Capricorn has.:)

வாழ்த்துகள்.

Thank you very much madam.

இல்லை மேடம். பெண்கள் இந்த விஷயங்களில் பொதுவாக கருணை காட்டுவது இல்லை.

ஆண்களில் ஒரு சிலர் டிஸ்மிஸ் பண்ணும் அளவுக்கு போனாலும், குறிப்பா இந்த LOP , யாருக்கும் வர விட மாட்டோம் . அதே போல் தான் வருடா வருடம் நடைபெறும் அப்ரைசலும்

கோப வீச்சின் நீளம் எதற்காக கோபப்படுகிறோம் என்பதையும், கோபத்தின் பின் விளைவுகளையும் தெளிவாக உணர்ந்து கொண்டால் குறைந்து விடுமாம்.//
Nice description.

அப்ரைஸல் அதைவிட்டு விட்டேனே. கண்டிப்பாக இதில் பெண்கள் கடினமாகதான் இருக்கிறார்கள். ISO ஆடிட்டிங்கில் follow-up சொல்வதற்குள் ஒரு பாடாகிவிடுகிறது. மிகஇவ்வளவு உறுதியாக நீங்கள் சொல்லும்போது ஒப்புக் கொள்கிறேன். மற்றபடி பரிவும், அக்கறையும்தானே பெண்மை. இயல்பு மாறுகிறது. அலசிப்பார்க்க வேண்டிய விசயம்.

ஒத்த கருத்திற்கு நன்றி ராஜேஸ்வரி.