மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

    இது பிரச்சினைகளை கையாளுவதன் தொடர். உறவுகளுக்கும், நட்புகளுக்குமிடையேயான பிரச்சினைகளை பேசித் தீர்க்க முயற்சிக்கலாம். நாமும் நிறைய சமயம் முயற்சி செய்திருப்போம், சில சமயம் வெள்ளை கொடி பறக்கவிடப்பட்டு இருக்கும். சில சமயம் ஒட்டாமல் உடைந்துவிடும். ஏதோ ஒரு நோக்கத்தில் ஆரம்பிக்க அது வேறு மாதிரி முடிவது சங்கடத்தில் ஆழ்த்திவிடும். எல்லாவற்றிற்கும் ஒரு வெற்றி குறிப்புகள் இருக்கும். அதனை கையாண்டால் வெற்றி அடையலாம். சிலருக்கு இது பிறவிக்கலை.  பேச்சு வார்த்தையில் கடைசி வார்த்தை அவர்களுடையதாகவே இருக்கும். பேச்சு நடக்கும் போது என்ன செய்ய வேண்டும்?

    பிரச்சினை ஆரம்பித்த உடனேயே சம்பந்தப்பட்டவரிடம் நேரிடையாகவே பேசி விளக்கம் கேட்பது நல்லது. பிரச்சினையின் ஆரம்பம் நம்மிடம் இருந்து - அவர்கள் மேல் சந்தேகமோ, கோபமோ இருந்தால் உடனேயே பிரச்சினையை பற்றி பேச வேண்டாம். கொஞ்சம் இடைவெளி தந்து சுமுகமான முறையில் ஆரம்பிக்க வேண்டும். 
   அப்படி உணர்ச்சிவசப்படாமல் பேச முடியாது என்றால், வேறு வழியில் முயற்சிக்கலாம். கடிதம் எழுதுதல்.. ஒரு கடிதமாக உங்களுடைய நியாயமான எண்ணங்களை பதிவு செய்வது நல்லது. வீட்டிற்குள்ளேயே கடிதமா என்று கேட்க வேண்டாம். சம்பந்தப்பட்ட இருவரும் உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை கொட்டி முறித்துக் கொள்வதைவிட எழுதும்போது ஒருவித கட்டுப்பாடு வரும். நம் பங்களிப்பை சரிவர செய்துவிட்டால் அடுத்தவரை சரி செய்யும் தெளிவு கிட்டும். ஒரு முறை எழுதி மட்டும் பாருங்கள், அழகாக உணர்வுகளை வெளிப்படுத்தும் கலை கை வசம் வந்துவிடும். உங்களுடைய வருத்தம், கோபம், எதிர்பார்ப்பு, விட்டு கொடுக்க விரும்பும் விசயம் அனைத்தையும் எழுதுங்கள். படித்து புரிந்து கொள்ளும்போது "ரிப்பீட்டு" போட முடிவதால் பிடித்தமான வரிகளுக்கு விரிவான விளக்கங்கள் கிட்டும். பேசுவதில் இல்லாத கூடுதல் ப்ளஸ் ...ப்ளஸ் இது. எழுதி முடித்தபின் கோபம்  குறைந்த உணர்வு வரும். அடுத்தவர் பக்க நியாயம்கூட தெளிவாகும். சரி, நாம் பேசுவதற்கு வரலாம். பேச்சு வார்த்தைக்கு ஒப்புக் கொண்டால் ,
 
மற்றவர் பேசும்போது செய்ய வேண்டியவை:  மற்றவர் பேசுவதை காது கொடுத்து கேட்க வேண்டும். அவர்களின் சொற்களை சரியாக மொழிபெயர்ப்பு செய்து இதயத்திற்கு தர மூளையின் ஒத்துழைப்பு வேண்டும். அதற்கு ஒரு பதட்டமில்லாத மன நிலை அவசியம்.  சரியான இடம், நேரம் ஆகியவற்றையும் கவனியுங்கள். எனக்குத் தெரிந்த ஒருவர் பேச ஆரம்பிக்கும் முன் அலைபேசி அழைப்பு வந்துவிடும்.  இது போன்ற தடங்கல்களை தவிர்த்திடுங்கள். மற்றவர் பேசுவதை அமைதியாக கவனியுங்கள். பாதியில் குறுக்கிட்டாலோ, தவறான முகபாவனைகளோ பேச்சு வார்த்தையை திசை மாற்றிவிடும்.

செய்யக்கூடாதவை:  குறுக்கிட்டு குழப்ப வேண்டாம். உங்கள் மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டை உடனேயே மறுத்து பேச வேண்டாம். ஏன் அவ்வாறு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று நமக்குத் தெரியாமலேயே போய்விடும். பிறகு கொஞ்ச நாள் கழித்து இதுவே திரும்ப நடைபெறும். ஒருவரின் வார்த்தைகளின் உண்மைக்கு மதிப்பு கொடுங்கள். "நீ எந்த விசயத்தையுமே பெரிதுபடுத்திதான் பேசுகிறாய்" என்று வாயை அடைக்காதீர்கள். இதுவும் மன வருத்ததிற்கு 'தொடரும்' போட்டுவிடும். நீங்கள் நினைப்பதுதான் சரி மற்றவர் நினைப்பது தவறு என்று முடிவு செய்ய வேண்டாம். சிலரிடம் நம்முடைய மனவருத்தத்தை சொல்லும்போதே "நீ மட்டும் யோக்கியமா?" என்று பதில் பழி வந்து சேரும்.  அதன் பிறகு பேசி தீ......ர்க்கத்தான் முடியும். சிலரிடம் பேசும்போதே ஒருவித சோர்வு வந்துவிடும், நம்மை பேச விடாமல் "நீ அதை பற்றித்தானே வருத்தப்படுகிறாய். எனக்கு புரிந்துவிட்டது நான் பார்த்துக் கொள்கிறேன்" என்பார்கள். மருத்துவரிடம் சென்றால்கூட  நம்முடைய பிரச்சினைகளை  காது கொடுத்துக் கேட்டு ஆறுதல் கூறியபின் கொடுக்கப்படும் மருந்திற்குதான் வியாதி கட்டுப்படும். சரிதானே, அதேதான் இங்கேயும் கடைபிடிக்கப்பட விரும்புவோம். நாமும் மற்றவரிடம் பேசும்போது இது போன்று 'மனதை படிக்கும் வித்தையை' கைவிட்டு நேர்மையாக அணுக வேண்டும். "என்னவோ சொல், கேட்டுத் தொலைக்கிறேன்' என்பது போன்ற இறுக்கத்தை தவிர்க்க வேண்டும்.

நாம் பேசும்போது செய்ய வேண்டியவை:
     பிரச்சினையின் பாதிப்புகள், மாற்றிக் கொள்ளவேண்டிய கருத்துக்கள், ஏன் அவற்றை ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி தெளிவாக அமைதியாக சொல்ல வேண்டும். அவர்கள் குறுக்கிட்டால் , மிகவும் நிதானமாக பதில் சொல்லிவிட்டு மீண்டும் உங்களுடைய விளக்கத்தை தொடருங்கள். ஏனெனில் சமாதனப் பேச்சிற்கு அழைத்தது நீங்கள்தான். " குறுக்கிட்டு பேசாதே" என்று அதட்டுவது, கோபம் கொள்வது போன்றவை ' தடங்கலுக்கு வருத்துகிறோம்' போட வைத்துவிடும். பேச்சு வார்த்தையின் முழு கட்டுப்பாடும் உங்களிடம் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.  ஒரு சமாதானமான முடிவிற்கு வந்தே தீர வேண்டும் என்ற உறுதி மிக முக்கியம். 

செய்யக்கூடாதவை: அவர்களுடைய குண நலன்களை விமர்சிக்க வேண்டாம். "அப்பவே அவன் சொன்னான் நீ சரியான முசுடு என்று. இப்ப புரிஞ்சுகிட்டேன்" இது போன்ற வார்த்தைகள் மற்றவரை காயப்படுத்தும். சில நேரங்களில், தனிமையில் நம்மையும் காயப்படுத்தும். அப்புறம் , மத்தியஸ்த்தம் பேச வேறு யாராவது வர வேண்டும். எப்போதுமே நாம்தான் வெற்றி பெற வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்காதீர்கள். விட்டுக் கொடுத்தல்கள் வாழ்க்கையை விலை மதிப்பற்றதாக்கும். கணவன் மனைவி சண்டையில் தோல்வியை ஒப்புக்கொண்டவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள் என்பார்கள்.   ஆகவே வார்த்தைக்கு வார்த்தை மல்லுகட்டி கடைசி வார்த்தையை நூல் பிடித்து திருப்பி என வளர்த்துக் கொண்டே போக வேண்டாம்.

பேச்சு வார்த்தை என்பது மாசுபட்ட கண்ணாடியை துடைத்து , முகம் பார்த்தல் போல அழகாக இருக்க வேண்டும். அதே கண்ணாடியை கீழே போட்டு உடைத்து  சிதிலமடைந்த பல முகங்களாக நம்மை பார்ப்பதற்கல்ல. 


19 comments:

செய்யக் கூடாதவை....என நல்லா சொல்லியிருக்கிங்க.

பேசி தீர்த்தல் அருமையான கலை. அருமையா சொல்லி இருக்கீங்க.

//பேச்சு வார்த்தை என்பது மாசுபட்ட கண்ணாடியை துடைத்து , முகம் பார்த்தல் போல அழகாக இருக்க வேண்டும். அதே கண்ணாடியை கீழே போட்டு உடைத்து சிதிலமடைந்த பல முகங்களாக நம்மை பார்ப்பதற்கல்ல.//

மிக சரியாக சொன்னிர்கள்.....

நண்பர்களாகட்டும், தம்பதிகளாகட்டும், பெற்றொர்களாகட்டும், நிறுவனமாகட்டும்,கட்சிகளாகட்டும் அல்லது உலக தலைவர்களாகட்டும் பேசும் கலையில்தான் வெற்றி தோல்விகள் நிர்ணயிக்கபடுகின்றன.
அதை இந்த தலைமுறைக்கு வெகு அழகாக எளிதாக சொல்லியிருக்கும் உங்கள் எழுத்தை பாராட்டுகின்றேன். தொடருங்கள்

முழுவதும், பொறுமையாகப் படித்தேன்.
மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள். எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதற்கான உதாரணங்களும் நல்லா இருக்குது.

கடைசியாகச்சொன்ன
//பேச்சு வார்த்தை என்பது மாசுபட்ட கண்ணாடியை துடைத்து, முகம் பார்த்தல் போல அழகாக இருக்க வேண்டும். நழுவ விட்டு உடைத்துவிடக்கூடாது// என்ற உதாரணம் வெகுபொருத்தமாக உள்ளது.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

அருமை அருமை
குறிப்பாக இறுதயிில் சொன்ன கண்ணாடி
உவமை அழுத்தமானது
ஒருவகையில் தொடர்பு கொள்ளல் கூட
நம்மை பிறர்மூலம் மிகச் சரியாக
தெரிந்து கொள்ளுச் செய்ய்யும் முயற்சி தானே
பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்

நல்ல வழிமுறைகள். என்னைப் பொறுத்தவரை யாரிடமாவது சண்டை என்றால், கொஞ்ச நேரத்துக்கு /நாளுக்கு அவர்களிடம் பேசமாட்டேன். பிறகு பேசினால் எல்லாம் சரி ஆகி விடும்.

நன்றி திரு.பிரகாஷ்

நன்றி திரு.தமிழ் உதயம்

பேசத் தெரியாமல் தோல்வியில் முடிந்த உறவுகளை நபார்த்திருக்கிறேன். நன்றி Mr.Tamilguy

பாராட்டுக்களுக்கு நன்றி VGK சார்

//ஒருவகையில் தொடர்பு கொள்ளல் கூட நம்மை பிறர்மூலம் மிகச் சரியாக
தெரிந்து கொள்ளுச் செய்ய்யும் முயற்சி தானே//சரியாக சொன்னீர்கள். நன்றி ரமணி சார்.

வணக்கம் எல்.கே சார். இதுவும் ஒரு வழிமுறைதான். நம் மீது பிரியம் உள்ளவர்களை இந்த மௌனம் சிந்திக்க வைக்கும். ஆனால் பிரியமானவர்களை வருத்தினால், அவர்கள் பாவமில்லையா?. எங்கள் வீட்டில் பேசாமல் இருக்கவே மாட்டோம்.

பேசித் தீர்த்துக்கொள்ளும் கலை பற்றிய முழுமையான அலசல்.நன்று.பாரம்பரிய தீர்வும் இதுவே!

Thank you very much Mr.Shanmugavel

Great work to have explained in detail what should be done and what should not be. My sincere appreciations. I got your link from Mr. VaiKo's blog.

All these days I have missed lot of good things on your site. I have become your follower from today.

Welcome sir. Thank you very much. Reading your comment I am much pleasured.

பேசி தீர்த்தல் அருமையான கலை. அருமையா சொல்லி இருக்கீங்க.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_6115.html

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.பார்த்து, தங்கள் கருத்துரைகளைத் தெரியப்படுத்துங்கள். நன்றி.