மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

நிம்மதியை மனதிற்குள்ளே தேடு என்ற சொற்றொடரிலிருந்து நான் மாறுபடுகிறேன். நம்மை சுற்றிலும் மகிழ்ச்சியையும் இனிமையையும் விதைப்போம், அந்த தோட்டத்திலிருந்துதான் நிம்மதி என்ற தென்றல் வரும் என்பதுதான் இந்த பதிவின் நோக்கம். ஆக, நிம்மதி மனதிற்கு வெளியேதான் என்பதும் உள்ளே வரவைப்பது நம் கையில்தான் உள்ளது.

ஒரு ஆங்கில நாளிதழில் வந்த செய்தி இது. முப்பது வருடங்களுக்கு முன்பு 25 சதவிகிதமாக இருந்த மன அழுத்தம் இப்போது 75 சதவிகிதமாக மாறிவிட்டது. குறிப்பாக தமிழ் நாட்டில் இதுபோன்ற மாற்றம் இருபது வருடங்களுக்கு முன் ஆரம்பித்தது.   கடவுள், குடும்பம், சத்தியம் போன்றவற்றின் மீது  வைத்திருந்த பற்று இப்போது சுயநலம், தனி மனித முன்னேற்றம் என்று மாறிவிட்டதுதான் காரணமாம்.

கவனிக்க வேண்டியது தனி மனித முன்னேற்றம் என்ற வார்த்தையைதான். இந்த வார்த்தை உச்சரிக்கப்பட ஆரம்பித்ததுதான், நிறைய பொருளாதார மாற்றங்களை கொண்டு வந்தது. "ஓடு ஓடு முதலிடத்தை அடையும் வரை ஓடு, அருகில் வருபவர்களை பார்க்கத் தேவையில்லை. யார் உடன் வருகிறார்கள் என்றுகூட நிதானிக்க வேண்டாம். வெற்றி பெறுவதற்குரிய அத்தனை வழிமுறைகளையும் தொடர்ந்து ஓடு". இதுதான் தாரக மந்திரமாக மாறியது.

அந்த ஓட்டத்தில் தேசத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. வெளி நாட்டு வேலை வாய்ப்புகள் குவிந்தன. அன்னிய செலாவணி அதிகரித்தது. இரவில் கூட வேலை பார்த்து, டாலரில் பணம் சம்பாதிக்கின்றனர். மக்களுக்கு - செலவு செய்யும்  சக்தி அதிகரித்தது.  இருபது வருடங்களுக்கு முன் பத்தாயிரம் ரூபாய் கடன் தரவே வங்கியில் வீட்டை அடமானம் வைக்க வேண்டியதாக இருந்தது. இப்போது அப்படியில்லை. பணம் புரள்கிறது. அரசாங்க வேலைக்காக காத்து இருந்து வாழ்க்கையை தொலைத்த கதையெல்லாம் முடிவுற்று, தனியார் நிறுவனங்களிலேயே அதிக சம்பளம் கிட்டுகிறது. திறமை இருக்கும் எவரும் முதல்படியை அடைய முடியும். நல்ல விசயம்தானே!

நல்லது, அப்படியானால் மன அழுத்தம் ஏன் அதிகரித்துள்ளது? பொதுவாக நகர்புறத்தில் நல்ல வசதியுடன் இருப்பவர்களுக்குதான் இது அதிகரித்துள்ளது. தனி மனித முன்னேற்றம் என்ற தாரக மந்திரம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதோ? " நான் நன்றாக சம்பாதித்து என் குடும்பத்தை முன்னேற்றுவேன், என்னுடைய முன்னேற்றம்தான் குடும்ப முன்னேற்றம்" என்பது தவறிப்போய் , " நான் நன்றாக சம்பாதிக்கிறேன் " என்ற வாக்கியத்துடன் முடிந்துவிட்டது.

அளவிற்கு அதிகமான வருமானமே ஆயுதமாகிவிட்டது. அது அத்தனைபேரையும் மனதளவில் அழித்து தொலைத்து விட்டது. என்ன இப்படி ஒரு காட்டமான விமர்சனம் என்கிறீர்களா? இன்னும் கொஞ்சம் பேசலாமா?

சாலையில் ஒரு விபத்து. அலுவலகத்திற்கு இரு சக்கர வாகனங்களில் பறப்பவர்கள், மறுக்கவே முடியாமல் மனிதாபிமானத்தையும் தொலைத்துதான் போகிறார்கள். முடிந்தவர்கள் உதவினாலும், அன்று முழுவதும் வேலையில் மனம் ஈடுபட்டாலும் உள்ளே ஒரு அழுத்தமான குரல் கோபமாக பேசிக் கொண்டேயிருக்கிறது. அப்போது மட்டுமல்ல வீட்டில் உடல் நலம் சரியில்லாத அம்மாவை தனியாக விட்டு வந்தது பற்றி, பரிட்சைக்கு படிக்கும் குழந்தைக்கு தைரியம் கொடுக்கும் வகையில் மனம் விட்டு பேச நேரமின்மை ( இது போல பரிட்சை நேரங்களில் பேப்பர், பென்சில், ரப்பருக்கான பணத்திற்கு தடுமாறினாலும் பரிட்சை நேரத்து கெடுபிடியை குறைக்கும் வகையில் அப்பா, அம்மா பெரியவர்களின் கனிவான கவனிப்பும் நமக்கு இருந்ததே, இரவில் தேநீர், தேர்வு சமயத்தில் தெம்பான உணவு வகைகள்) இந்த இடத்தில் நாம்தான் தொலைந்து போயிருக்கிறோம். நம் உதவியின்றி அவர்கள் சமாளித்துக் கொண்டாலும் அந்த இடத்தில் அவர்களை தொலைத்துவிடுகிறோம். இப்போது பத்தாவது வகுப்பு தேர்வு எழுதிய மகனின் மதிப்பெண் எது வந்தாலும் நாம் ஒன்றும் பேச முடிவதில்லை. ஏனென்றால், நாற்று நட்டாயா? களை பறித்தாயா? என்கிற ரீதியில் கேள்விகள் எழும்.  ட்யூசன் வகுப்பு ஏற்பாடு செய்வதுடன் நம் கடமை முடிந்து இருக்கும். புத்திசாலிக் குழந்தைகள் பற்றி கவலைப்படத் தேவையில்லை. சிறு வயதிலிருந்தே அருகில் அமர்ந்து வீட்டுப்பாடம் சொல்லித் தந்து பழக்கப்பட்ட பிள்ளைகள்தா தனித்துவிடப்படும். ( அப்போது நாமும் நம் மொத்த நேரத்தையும் விலை பேசும் வேலையில் இருந்திருக்க மாட்டோம். அனுபவம் கூடக்கூட வருமானம் அதிகரித்து நம்முடைய பர்சனல் டைம்கூட பணமாகிவிடும்)

வாழ்க்கையின் ஓட்டத்தில் வருமானத்தை துரத்துவதில் எதிலேயே கவனம் இல்லாமல் முக்கியமான சிலவற்றை தொலைத்துவிட்டு மன அழுத்ததில் வாழ்க்கையின் பாதியிலேயே களைத்து விடுகிறோம். அந்த அழுத்தத்தை திருத்தக்கூடிய சில விசயங்கள் பற்றி பேசலாமா?

21 comments:

சிந்திக்கத் தூண்டுகிற விஷயம்தான்.தொடருங்கள்.

நான் எனது கட்டுரைகளில் "நிம்மதியை மனதிலிருந்தே தேடு" என்பேன். நீங்கள் மாறுபட்டு சிந்தித்திருக்கிறிர்கள். வாழ்த்துகள்.

வித்தியாசமான பார்வை.விதைக்கப் பட வேண்டிய கருத்துக்கள்.
பகிர்விற்கு நன்றி.தொடரவும்.

*****************
//சிறு வயதிலிருந்தே அருகில் அமர்ந்து வீட்டுப்பாடம் சொல்லித் தந்து பழக்கப்பட்ட பிள்ளைகள்தா தனித்துவிடப்படும்.//

இந்த இடத்தில் தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை என்னால்
அறிந்து கொள்ள இயலவில்லை.அருகில் அமர்ந்து சொல்லித் தருவது சரியல்ல என
குறிப்பிடுகிறீர்களா.ஆம் எனில் எவ்விதம் அல்லது இல்லையெனில் வேறு என்ன குறிப்பிடுகிறீர்கள்
என்று விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

கண்களை விற்று சித்திரம் வாங்குகிறோம்.

நன்றி திரு.சண்முகவேல்.

கொஞ்ச நாட்களுக்கு முன்புவரை நானும் அப்படித்தான் நினைத்தேன். மாற்றம் வந்துவிட்டதை சொல்லவே இந்த பதிவு. நன்றி திரு.தமிழ் உதயம்.

சரி, தப்பு என்று இல்லை ராஜி. உங்கள் கேள்விக்கான பதில் அடுத்த பதிவின் முடிவில் உங்களுக்கே புரிந்துவிடும்.

இந்த கருத்தும் உண்மைதான் , விலை அதிகமாகிவிட்டதுதான். நன்றி ராஜேஸ்வரி.

இன்றைய யதார்த்த நிலை. பணத்தின் பின்னால் ஓடி , நம் வாழ்வின் சின்ன சின்ன சந்தோசங்களை இழந்து வருகிறோம் .

என் மகளை மதிப்பெனை அளவு வைத்து வளர்ப்பது இல்லை என்றே நானும் என் மனைவியும் முடிவு செய்திருக்கிறோம்.

நல்ல முடிவு, எல்.கே சார். இதைதான் எங்கள் பிள்ளைகள் விசயத்திலும் பின்பற்றினோம். பொறியியல், மருத்துவர் படிப்பு என்று கட்டாயப்படுத்தாமல் விருப்பப்படி படிக்க அனுமதித்தோம். இன்று சிறப்பாகவும் இருக்கிறார்கள். வீட்டை பொறுத்தவரை மன அழுத்தம் என்பது கிடையாது.

வாழ்க்கையை அதன் போக்கில் இயல்பாய் வாழ்ந்தால் மன அழுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தொடருங்கள் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

வாழ்க்கையை அதன் போக்கில் இயல்பாய் வாழ்ந்தால் மன அழுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தொடருங்கள் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

நாம் நமது நமக்கு என்கிற எண்ணம் போய்
இப்போது வெற்றி என்பது
நான் எனது எனக்கு எனமாறிப் போனதாலும்
பணத்தால் எதையும் வாங்கிவிடமுடியும் என்பதால்
எதைச் செய்தும் சம்பாதிக்கலாம் என்கிற மனோபாவம்
வளர்ந்து போனதும் அமைதியின்மைக்கு ஒரு காரணம்
தங்கள் பதிவின் அடி நாதமாய் இக்கருத்து விளங்குகிறது
நல்ல தொடர் தொடர வாழ்த்துக்கள்

பதிவு மிக் ந்ன்றாகப்போகிறது.

வாழ்க்கையை அதன் போக்கில் போக விட்டால் அமைதியின்மை குறையக்கூடும் என்பதில் ஐயம் இல்லை.

போட்டி பொறாமைகள் நிறைந்த உலகில் அதுபோல பலராலும் இருக்க முடிவதில்லை. பிரச்சனைகளை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.

தொடருங்கள்.

தொடருங்கள். வாழ்வின் உந்துசக்தியான மனநிம்மதிக்கு வழிவகுக்கும் அற்புதமானக் கருத்துகளை அள்ளி வழங்கும் தங்கள் முயற்சிக்கு என் வந்தனமும் பாராட்டும், சாகம்பரி!

கருத்துரைக்கு நன்றி கடம்பனக்குயில்

உண்மைதான் ரமணி சார். அதை சரி செய்ய முயற்சிப்போம்.

//வாழ்க்கையை அதன் போக்கில் போக விட்டால் அமைதியின்மை குறையக்கூடும் என்பதில் ஐயம் இல்லை.// இது போன்ற சிந்தனைகள் மறைந்து கொண்டிவருகிறதே. நன்றி VGK சார்.

இது போன்ற பதிவுகளுக்கு கருத்துரைகள்தான் சரியான உந்து சக்தி. நன்றி கீதா.

எவ்ளோ பெரிய தத்துவங்களை மிக எளிதாக
என்ட மரமண்டைக்கு கூட புரிவது போல சொல்லி இருக்கீங்க அக்கா.
வாசிக்கவும் இன்னும் அடுத்த பதிவு எப்போ என்று தோன்றுகிறது

அருமையான பதிவு
வாழ்த்துக்கள் அம்மா