மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

அன்புள்ள அப்பாவிற்கு,
          நான் எழுதிக் கொண்டது. பிரியமுடன் என்றுதான் எழுத வேண்டும் , அந்த வார்த்தை மேல் நம்பிக்கை எனக்கே இல்லை. உண்மையில் பிரியமிருந்தால் இப்படி செய்திருக்க மாட்டேன். ஏன் நமக்குள் ஒத்துப் போகவில்லை? இங்கே பனியில் இரவில் தனித்திருக்கும் வேளையில் திரும்ப திரும்ப இதே கேள்விதான் நினைவிற்கு வருகிறது.

    என் சிறிய வயது கனவு, தேவதைக் கதைகளைவிட வீரக்கதைகளால் நிறைந்தது. நம் வீட்டிற்கு இரு சக்கர வண்டி முதன்முதலாக வந்த போது, உங்களுக்கு முன் அமர்ந்து  முடி பறக்க பயணித்த போது,  தேசிங்கு ராஜாவின் குதிரையை நினைத்துக் கொள்வேன்.  தலைக்கு மேல் தூக்கச் சொல்லி உலகக்தினை கீழ் நோக்கிய அலட்சிய பார்வை பார்த்திருக்கிறேன். அலுவலகம் முடிந்து நீங்கள் வரும்போது எனக்கென ஒரு தீனிப் பொட்டலம் இருக்கும். நீங்கள் வெளியூர் சென்று திரும்பும்போது இரவானாலும் காத்திருந்து எதிர் கொள்வேன். உறங்கிவிட்டாலும் உங்கள் குரல் கேட்டவுடன் விழித்துக் கொள்வேன். நீங்கள் வாங்கி வந்திருக்கும் விளையாட்டு பொருளை- பெரும்பாலும் கார் அல்லது குட்டி விமானமாக இருக்கும் -  என்னிடம் தந்துவிட்டு " காலைல எழுந்துக்கணும்ல சீக்கிரம் படு" என்று வாய் சொன்னாலும் கைகள் என்னை வருடிக் கொண்டே இருக்கும். அம்மாபோல கதைகள் சொல்லாமல் , பளிச்சென்று நீங்கள் பேசும் வார்த்தைகள் வேதவாக்காய் தோன்றியிருக்கிறன. நம் இருவருக்கும் இடையில் யாருக்கும் அனுமதியில்லாத அந்த உறவு எங்கே மாறிப் போனது?

        மாறி வரும் உலகத்தின் புதிதாக பின்னப்பட்ட  புதிய சிந்தனைகளின் சிலந்தி வலைக்குள் நான் சிக்கிக் கொண்டு ஒரு மலையுச்சியை நோக்கி ஓடுவதாக நினைத்து உங்கள் கைகளை உதறிவிட்டு விலகினேன். நான் வளர்வதாகவும் நீங்கள் வளராமல் நின்று விட்டதாகவும் தோன்றியது. என்னுடைய முடிவுகளை உங்களிடம் கலந்துரையாடக் கூட தோன்றவில்லை. நிறைய விசயங்கள் நீங்கள் புரிந்து கொள்ளமுடியாதவை , என்னுடைய பார்வை உங்களுக்கு இல்லையென்றும் நான் நினைத்தேன். அது ஒரு ஓட்டம். பொருளாதாரக் குதிரையை போர் குதிரையாக பாவித்து துரத்தி பிடித்து எப்பாடு பட்டாவது பிடித்து கொட்டிலில் அடைப்பதுதான் முக்கிய கொள்கை என்று தோன்றியது. ஓடி ஓடி படித்தேன், ஓடி ஓடி வேலை தேடினேன். உண்மையிலேயே என் ஓட்டம் பல நூறு மைல்கள் கடந்தது.

     இதனால் நீங்கள் வருத்தப்பட்டதுபோல அப்போது எனக்குத் தோன்றவில்லை. நான் அருகில் இருக்க வேண்டும் என்பது அம்மாவின் விருப்பம் மட்டுமே என்று நினைத்தேன். என்னவோ, முதலில் இருந்த பிரிவின் வலி சற்று நாட்கள் கழித்து மறைந்துவிட்டது. பிறகு அம்மாவிடம் பேசிய அளவு நான் உங்களிடம் பேசியதில்லை. எதையுமே அம்மாவின் வழியாகவே உங்களிடம் தொடர்பு கொண்டேன். இப்போது வாழ் நாளின் பாதி கழிந்தபின் நான் நிற்கும் இடம் சற்று உயரமானதுதான். வெயிலை உணராமல், மழையில் நனையாமல், யாருக்கும் தலை குனிந்து பதில் சொல்லாமல், பவ்வியமாக பேச வேண்டிய தேவை -உங்களைப் போல-  இல்லாமல் சௌகரியமான இடம். கண் விழித்த நொடியில் இருந்து உறங்கும்வரை வழுக்கிக் கொண்டே செல்லும் நொடிகள் எனக்கு சொந்தமானவை. சாதிச்சாச்சு...?

    சிறிய வயதில்  உங்களுடன் பூஜை அறையில் மந்திரம் சொல்லி  "எல்லாரையும் நல்லா வச்சிக்க"  வேண்டிக்  கொண்டது நினைவிற்கு வருகிறது. நன்றாக இருப்பது என்பது இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால்தானா? சாமி நமக்கு மட்டும் வேறுவிதமாக வரம் தந்துவிட்டதோ?. 
      என் மகன் என்னை எதிர்த்து '"நோ டாடி யூ காண்ட் அண்டர்ஸ்டாண்ட்"  என்று சொல்லும் இரவுகளில்,  செம்மண் சாலையில் உங்களுடன் கைகோர்த்து சிறுவனாக நான் நடக்கும் கனவு வந்து உறக்கம் கலைக்கிறது. வீடு மாற்றி வெளியூர் செல்லும்போது முக்கியமான ஏதோ ஒன்றை மறந்துவிட்டு செல்வது போன்ற உணர்வு வருமே, அது இப்போது வருகிறது. உங்களை நான் தொலைத்து விட்டேனோ? நான் தொலைத்த திரும்பப் பெறமுடியாத விலைமதிப்பில்லாத ஒன்று நீங்கள்தான்.

     உங்களை தொலைத்து நான் தேடியதை தொலைத்து என் மகன் திரும்பவும் உங்களை தேட வைக்கின்றான். என்னுடைய விருப்பம் ஒன்றுதான், உங்கள் நினைவு எனக்கு வரும் அந்த வேளையிலேயே  உங்கள் முன் என்னை நிறுத்தக்கூடிய ஒரு மந்திரம் வேண்டும். சற்று தாமதித்தித்தாலும் ஏதோவொரு தயக்கம், கழிவிரக்கம், உங்களை நேரில் சந்திக்கும் வேளையில் எப்படி நடந்து கொள்வது என்ற ஒப்பனைகள் - நம்முடைய பழைய சில சந்திப்புகள் அப்படித்தான் நாடகத்தனமாக முடிந்தன- இவை பிரவாகமாக எழுந்து என்னை தடுத்து விடுகின்றன. நான் தொலைத்த என் அப்பா காலங்களின் இருண்ட குகைக்குள் கரைந்து மறைந்து அவரைப் போன்ற ஒரு தோற்றம் மட்டுமே எனக்குக் கிட்டுகிறதோ என்று எனக்கு சந்தேகம் வந்துவிடுகிறது. ஒன்று புரிகிறது அப்பா, ஒரு நாள் குட்டி வயதில் கால் பந்து விளையாடுகிறேன் என்று ஓடி கீழே விழுந்து அடிபட்டு போது உலகம் தெரியவில்லை உங்களை மட்டுமே தேடியது அது போல்  - தேற்றும் வழியறியாத சிறுவனாக உங்களை கட்டிக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. இன்றைய 'நான்'ஐ கழற்றி வைக்கும்  அப்படி ஒரு அடிக்காகவும் வலிக்காகவும் காத்திருக்கிறேன்.

    என்றாவது ஒரு நாள் உங்கள் அருகில் அமர்ந்து இதனை வாசித்து உங்களுடைய 'குட்டி ராஸ்கலாக' மாறுவேன். அதுவரை இந்த கடிதத்தை நான் மட்டுமே படிக்க முடியும்.

                                            இருளும் ஒளியுமான உலகத்தின் ஒரு மூலையிலிருந்து
                                                            உங்களுடைய குட்டி ராஸ்கல்

17 comments:

அப்பா சில காலங்களில் அப்படித்தான் ஆகிவிடுகிறார்.கடித இலக்கியம் உங்களிடம் வளர்ந்தொகொண்டிருக்கிறது.வாழ்த்துக்கள்.

என் அப்பாவுக்கு கடிதம் எழுத விரும்பினால் இப்படி தான் இருக்கக்கூடும்.

நெகிழ்ச்சியன பகிர்வு.

//நான் தொலைத்த திரும்பப் பெறமுடியாத விலைமதிப்பில்லாத ஒன்று நீங்கள்தான். //

நாம் ஒரு குழந்தைக்கு அப்பாவான பிறகே, நம் அப்பாவைப்பற்றி முழுமையாக உணர முடிகிறது.

நல்ல அருமையான கட்டுரை. பராட்டுக்கள். வாழ்த்துக்கள்.



[கடந்த ஒரு வாரத்திற்கு மேல் வெளியூர் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாலும், வீட்டில் இண்டெர்நெட் கனெக்‌ஷனில் நிறைய தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதாலும், இதற்கிடையில் தங்களின் ஒரு சில பதிவுகளைப் பொறுமையாக ரஸித்துப்படித்து உடனுக்குடன் பின்னூட்டம் இடமுடியாமல் போய் விட்டது, என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். vgk]

அருமையான கடிதம்...

அருமையான கடிதம்
ஐந்து இலக்க சம்பளம் பெற்றவுடனேயே
தான் அதிகம் வளர்ந்துவிட்டதைப்போலவும்
அந்த அளவு தாய் தந்தையர் வளரவில்லை என எண்ணுகிற
ஒரு புதிய தலைமுறை வளர்ந்து வருகிற சூழலை மிகத் தெளிவாக
புரிந்து கொண்டு மிக அழகாக கடிதம் எழுதி இருக்கிறீர்கள்
தான் எவ்வளவு இழந்துவிட்டோம் என்பதை அல்லது
எவ்வளவு மோசமாக நடந்து கொண்டோம் என்பதை
தான் தந்தையாகி உணரும்போது அதிகம்பேர்
மீண்டும் நெருங்கமுடியாதபடி பெற்றோரைவிட்டு
மிக அதிகம் விலகிவிடுகிறார்கள் அல்லது
அவர்களை இழந்துவிடுகிறார்கள்
அந்த நிலையை மிக அழகாக தங்கள் கடிதம்
விளக்கிப்போகிறது.சூப்பர் பதிவு
தொடர வாழ்த்துக்கள்

நன்றி திரு.சண்முகவேல். நிறைய பிரச்சினைகள் கடிதம் எழுதுவதன் மூலம் தீர்கின்றன.

அப்பா எப்போதும் silent spectator போல தோன்றுகிறார். அவருடைய உணர்வுகளை புரிந்து கொள்வதும் கடினமாகிவிடுகிறது. நன்றி திரு.தமிழ் உதயம்.

நெகிழ்ச்சியன பகிர்வு.//நன்றி ராஜேஸ்வரி

பாராட்டுக்களுக்கு நன்றி சார். ஏற்கனவே நான் யூகித்திருந்தேன். இது போன்ற சிக்கல்களில் நானும் சிக்கியிருக்கிறேன்.

Thank you Prakash

இது போன்ற மனச்சுழலில் சிக்கிக் கொண்ட மகனுக்கு ஒரு ஆலோசனையாக கடிதம் எழுதச்சொல்லி தீர்வு கண்டேன். ஆனால் பிரச்சினை வேறு. தபால்காரர் வேலையை நான் செய்தேன். எல்லாம் சரியாகிவிட்டது. இது போன்ற முறைகள் இறுக்கத்தை குறைத்து உறவுகளை சரி செய்யும். நன்றி ரமணி சார்.

மனதின் உணர்வுகளையும் பிரச்சனைகளையும்
அதற்கான தீர்வுகளையும் மிகத் தெளிவாக
சரியான விதத்தில் நீங்கள் எடுத்துரைப்பது எனக்கு
உங்கள் மேல் மிகுந்த மரியாதையையும் பிரமிப்பையும் ஏற்படுத்துகிறது

(தங்கள் மெயில் ஐடியை நீங்கள் விரும்பினால் தர இயலுமா?
ஒருவேளை தர விரும்பினால்,என் பதிவில் கமென்ட் மாடரேஷன்
இருப்பதால் நீங்கள் என் பதிவில் அளித்தால் பப்ளிஷ் ஆகாமல் இருக்கும்)

தந்தைக்கும் மகனுக்குமான உறவில் விரிசல் கண்ட பல இல்லங்களைப் பார்த்திருக்கிறேன். மகனின் பதின்ம வயதுகளின்போது சில வீடுகளில் அவர்களுக்குள் பேச்சுவார்த்தை கூட நின்றுபோய்விடுகிறது. தலைமுறை இடைவெளி என்றாலும், இடையில் அம்மாக்கள் மீடியேட்டர்களாக செயல்படுவதைத் தவிர்த்தாலே பிரச்சனைகள் முளையிலேயே தவிர்க்கப்படக்கூடும். வழக்கம்போலவே தரமான பதிவு, பாராட்டுகிறேன் சாகம்பரி.

Thanks Raji

பாராட்டிற்கு நன்றி கீதா.

கடிதங்கள் மிகவும் அருமை. சாகம்பரி அவர்களே! என்னுடைய தளத்திலும் இணைப்பு கொடுத்திருக்கிறேன். தவறில்லையே!