மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

ஒவ்வொரு திருமணமும் எப்படி சில கனவுகளை விதைக்கிறதோ அதேபோல விவாகரத்தும் சில கனவுகளை கலைத்துப் போடுகிறது.
---------------------------------------------------------

முதலில் திருமணம் என்ற சடங்கின் தோற்றம் பற்றி ஆராய்வோம்:


ஆதிகாலத்தில் மனிதர்களிடம், மிருகங்கள் போல வெறும் இச்சைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தரப்பட்டு வந்தது.  அந்த நொடியின் தேவைகள்தான் முன்னின்றன. வாழ்தலின் தேவைகளுக்கான தற்காப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வந்தது.  மிருகங்களுக்கும் மனிதனுக்கும் வேறுபாடு இல்லாத நிலையானது அடுத்த கட்டத்திற்கு முன்னேற குழுக்களாக வாழ்தல் என்ற கொள்கை கொண்டுவரப்பட்டது. 

பகிர்தல் என்ற வார்த்தைதான் மனிதனை அடுத்த முன்னேற்றத்திற்கு  கடத்தியது. அறிவு, வீரம், தொழில்செய் தந்திரம் போன்றவை அளவீடுகளாக கொள்ளப்பட்டு பல மட்டங்களாக குழுக்கள் உருவாகின. அதாவது சமூகம் உருவாது.  சற்று பொறுத்து மிருகங்களுடன் இட்ட சண்டைகள் மனிதர்களிடம் தோன்றி அழித்தொழித்தல் ஆரம்பித்தது. அதிலும் பெண்ணுக்காக நடந்த சண்டைகள் பிரசித்தி பெற்றவை.

காட்டிற்கு சென்று வேட்டையாடிவிட்டு திரும்பும் வரை அவன் மனம் கவர்ந்த பெண் அவனுடைய இருப்பிடத்தில் இருப்பாளா என்பதே சந்தேகமாகிவிட்டது. பெண் ஒரு போகப்பொருளாக பார்க்கப்பட்ட அதே வேளையில் இன்னொன்றும் புரிந்தது. அவளுடைய நுட்பமான அறிவு, விவேகமான சிந்தனைகள், வலிமையான மனோதிடம். அந்த சமயத்தில் பெண்ணுக்கும் ஒரு சமூக அங்கீகாரம் தேவைப்பட்டது.  இதன் விளைவாக ஒரு ஒப்பந்தம் போல  திருமணம் என்ற புதிய சடங்கு உருவாக்கப்பட்டது.

பெண்ணை காப்பாற்றும் பொறுப்பு ஆணுக்கும், ஆணுக்கு பாதுகாப்பு தரும் பொறுப்பு பெண்ணுக்கும் பகிரப்பட்டது. ஆண் காட்டிற்கு சென்றுவிட்டு திரும்புமுன் பெண் வீட்டை பாதுகாத்தாள். அவளுடைய நுட்பமான உணர்வுகள் மிருகங்களிடமிருந்தும் எதி
ரிகளிடமிருந்து ஆணை காத்தன. இவனுடய பொறுப்பு இவள் என்ற அங்கீகாரமும் பெண்ணை ஒருபடி உயர்த்தியது. நிம்மதி என்ற வார்த்தையை இருவரும் உணர்ந்தனர். அமைதியான சூழல் தாய்மையை உணர வைத்தது. குடும்பம் உருவானது. முதியவர்களை பராமரித்தல் என்பது பிற்பாடு உருவானதுதான். பிள்ளைகளின் பராமரிப்புதான் முதலில் முக்கியத்துவம் பெற்றது. ஆனாலும் பழங்காலத்தில் காதலுக்கே முக்கியத்துவம் தரப்பட்டது. அதற்கு அடுத்த இடம் நட்பு. இலக்கியங்களில்கூட இவ்விரண்டிற்கும் தரப்பட்ட முக்கியத்துவம் தாய்மைக்கு தரப்படவில்லை. ஏன்?. 


குடும்பம் குடும்பமாக வாழும் நம்முடைய கலாச்சாரத்தின் அடிப்படை எது? அன்பு.... சரிதான். பாசம், நேசம்,பரிவு, நட்பு,கருணை இவையனைத்திற்கும் தாண்டி தலைவனும் தலைவியும் கொண்டிருந்த அன்புதான் - காதல், அனைத்து உறவு பிணைப்புகளையும் பலப்படுத்தியது. இதுதான் ஆரம்பகால சிந்தனை. ஒரு நாகரிகமான சமுதாயத்தில், உறவுகளை பிணைக்கும் அடிப்படை அன்பு காதல் என்றும் சமுதாய பிணைப்புகளை பலப்படுத்துவது நட்பு என்றும் உறுதியாக நம்பப்பட்ட காலம். அதனாலேயே இலக்கியங்கள் இவை இரண்டிற்கும் முக்கியத்துவம் தந்தன என்று கொள்வோமா?.


இன்னும் ஆழமாக பார்க்கப்போனால் இரத்த பந்தங்களுக்கு இடையிலான பிணைப்பு தானாகவே வலிமைபடும், ஆனால் ஒரு சமுதாயம் என்று வரும்போது மனிதர் மனிதருடன் ஏற்படுத்திக் கொள்ளும் சங்கிலிப் பிணைப்பு போன்ற தொடர்புகள்தான் முன்னேற்றமான ஒழுக்கமான கலாச்சாரத்தை உருவாக்கும் என்ற ரகசியம் தெரிந்திருந்தது. இதுபோன்ற பிணைப்புகளை இரண்டுவிதமாக பிரிக்கலாம். ஒன்று இரத்த சம்பந்தமான உறவுகளுக்கிடையேயான அன்பு -அம்மா,அப்பா,சகோதரர்..., மற்றது மாற்றாரிடம் உருவாவது. காதல்,நட்பு.. போன்றவை.  நட்பு ஒரு அழகான பிணைப்பை உண்டாக்கினாலும், முக்கியத்துவம் பெற சதவிகிதம் குறைவாகவே இருந்தது. இதே சமயத்தில் ஆணும் பெண்ணுமாக இணைந்து உருவாக்கிய உறவு உறுதியாக இருந்தது. சொல்லப்போனால் ஒருவருக்காக மற்றவர் எடுத்துக் கொண்ட முயற்சியும் உழைப்பும் சமுதாயத்தை முன்னேற வைத்தது. 

வீடு கட்டி வாழ மனிதன் கற்றுக் கொண்டதே தனக்கே உரிமையான பெண்ணிற்கு முழு பாதுகாப்பை தருவதற்காகத்தான் என்ற கருத்தும் உள்ளது. ஆண் பெண்ணின் மேல் வைத்த அன்பு வீரம், விவேகம்,புத்திசாலித்தனம், நாளைய  சிந்தனைகள் பொறுப்புகள் ஆகியவற்றை தந்தது.  எனவே திருமணம் என்பது உயர்திணையாக கருதப்படும் மனிதன் வாழ்வில் மேம்பாடு அடைய உதவிய வினை ஊக்கியாகவே இருந்தது.  தொடர்வோம்....
  

8 comments:

//ஒவ்வொரு திருமணமும் எப்படி சில கனவுகளை விதைக்கிறதோ அதேபோல விவாகரத்தும் சில கனவுகளை கலைத்துப் போடுகிறது.//

பதிவு விவரமாக செல்கிறது,தொடருங்கள்.

விலங்குகளாய்த் திரிந்த மனிதனின் போக்கின் மாற்றங்களை மிகவும் அழகாக படிப்படியாக காட்டுகிறது இந்தப்பதிவு.

ஒவ்வொன்றையும் மிகவும் நனறாகவே புரிந்து கொள்ள முடிகிறது.

கட்டுரையின் அளவும் கச்சிதமாக உள்ளது.

மிகவும் நாசூக்காகச் சொல்லிச்செல்லும் விதம் மிகுந்த பாராட்டுக்குரியது.

இதுபோலவே தொடர்ந்து சொல்லிக்கொண்டே போக வேண்டுகிறேன்.

மிகுந்த பாராட்டுக்களுடன், வாழ்த்துக்களுடன், நன்றிகளுடன் தங்கள் vgk [தமிழ்மணம்: 3]

””பகிர்தல் என்ற வார்த்தைதான் மனிதனை அடுத்த முன்னேற்றத்திற்கு கடத்தியது””

நிதர்சனமான உண்மை, உங்களின் பதிவு பகிரலே என்னை சிந்தைனையின் அடுத்தகட்டத்திற்கு நகர்த்தி செல்கிறது.

படிப்படியாக ஏற்பட்ட மனித மனங்களின் வளர்ச்சியும்,உறவுச் சங்கிலியும் விவரமாக பகிரப் பட்டமைக்கு நன்றி.எனக்குள்ளும் இந்த சந்தேகம் உண்டு , பண்டைய இலக்கியங்களில் காதல்,நட்பு வீரத்திற்குத் தரப் பட்ட முக்கியத்துவம் தாய்மைக்கு தரப்படாததன் காரணம் என்ன? என்று.

பகிர்தலுக்கு நன்றி.தொடரின் அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்

//இரத்த பந்தங்களுக்கு இடையிலான பிணைப்பு தானாகவே வலிமைபடும், ஆனால் ஒரு சமுதாயம் என்று வரும்போது மனிதர் மனிதருடன் ஏற்படுத்திக் கொள்ளும் சங்கிலிப் பிணைப்பு போன்ற தொடர்புகள்தான் முன்னேற்றமான ஒழுக்கமான கலாச்சாரத்தை உருவாக்கும்//

மறுக்கமுடியாத உண்மை.

பண்டைய இலக்கியங்களில் காதலுக்கும் நட்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதன் காரணத்தை மிக அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள்.இரண்டிலும் காதல் ஒரு படி மேலே நிற்பதற்கான காரணத்தையும் புரியவைத்துவிட்டீர்கள். தொடர்ந்துவரும் பதிவுகளுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

வீடு கட்டி வாழ மனிதன் கற்றுக் கொண்டதே தனக்கே உரிமையான பெண்ணிற்கு முழு பாதுகாப்பை தருவதற்காகத்தான் என்ற கருத்தும் உள்ளது.//

உண்மை தான், வீடு இல்லையேல் தெருவில் வாழ முடியாதே... வீடும் அவசியம். இன்றைய காலத்தில் சொந்த வீடு ரொம்ப அவசியம்.

நம்ம தளத்தில்:
அரசே, ஒரு பாக்கெட் அல்வா வேணாம்? ஒரு சொட்டு நெய்யாவது கிடைக்குமா?

மனிதனை மிருகங்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்ட மனிதனே கண்டுபிடித்த ஒரு மாபெரும் மகத்தான விஷயம் தான் குழுக்களாக வாழ்தல். பின்னர் அது கூட்டுக்குடும்பம் என ஆனது..
ஆஹா..பெண்ணுக்காக நடந்த அந்தக் கால சண்டைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை தான் சகோதரி...
மாபெரும் காவியம் இராமாயணம் கூட பங்காளிச் சண்டையில் ஆரம்பித்து அரசுக்காக தெரிந்தாலும்.. காவியத்தை விரிவுபடுத்தி மாபெரும் யுத்தகாண்டத்தை உண்டு பண்ணியது பெண்ணாசைதானே...
போகப்பொருளாய் பார்க்கப்பட்ட பெண்...இந்தும் இந்தநிலை நீடிப்பது மனதை வேதனைப்படுத்தத்தான் செய்கிறது சகோதரி..

குடும்பம் எனும் கட்டமைப்பும் அதைச் சுற்றி அரணாய் நிற்கும் உறவுகளும் பெண்ணுக்காய் படைக்கப் பட்டவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை சகோதரி..

அன்பு சகோதரி,
நான் எதிர்பார்த்ததை விட அழகாக அற்புதமாக எண்ணங்களில் விளைந்த விதைகளை நேர்த்தியாக விதைத்திருக்கிறீர்கள்..
அத்தனை கருத்துக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும்.. ஆழ்ந்து யோசிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளன..
தொடர்கிறேன்..