அவர்கள் அனைவரும் இரண்டிலிருந்து ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள். பெரும்பாலும் அவர்கள் சுட்டித்தனமான குழந்தைகள். துருதுருவென இருக்கிறார்கள். பளுமிக்க பொருளை இழுப்பதை பார்க்கும்போது அதிக வலு இருக்கிறதும் தெரிகிறது. ஒரு பட்டாம் பூச்சியின் பரபரப்பு தெரிகிறது. அறிவு கூர்மையும் கவனிக்கத் தக்கது - ஒரு செயலை நாம் செய்வதை பார்த்துவிட்டால் கூர்ந்து கவனித்து செய்ய முயற்சிக்கின்றனர். இதெல்லாம் நேர்மறையான விவரங்கள்.
ஆனால் எதிர்மறையாக, சிறிய விசயத்திற்கும் மூட் அவுட் ஆவது. அடம் பிடிப்பது. பெருங்குரலெடுத்து அழுவது. ஒல்லியான தேகம். எரிச்சலுற்ற முகபாவங்கள்... இதெல்லாம் சாதாரணமாகவே குழந்தைகளிடம் இருப்பதுதானே என்று சொல்கிறீர்கள். ரொம்பவும் சாதாரணம்தான். ஆனால் அடிக்கடி நிகழ்வது என்பதும் குழந்தைக்குரிய மனோபாவம் மாறுவதும் கவனிக்க வேண்டிய விசயமல்லவா? இன்றைய அவசர காலகட்டத்தில் இவற்றை நாம் கூர்ந்து நோக்குவது இல்லை.
இன்னும் கூர்ந்து கவனித்தால் அவர்களிடம் கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறனும் குறைவாக உள்ளது புரிகிறது. அடிக்கடி சளி பிடித்துக் கொள்ளுகிறது. மருத்துவரின் கவனிப்பு அடிக்கடி தேவைப்படுகிறது. ஒரு விசயத்திற்காக அடம்பிடிக்கும்போது வேறு போக்கு காட்டி மாற்ற முடிவதில்லை. ஞாபகமாக மீண்டும் அடம் பிடிப்பதை தொடர்கின்றனர்.
வினு மூன்று வயது குழந்தை. படு சுட்டி. நிறைய பேசுகிறாள். எழுத முயற்சிக்கிறாள். பாடல்களுக்கு அழகாக நடனமாடுகிறாள். ஆனால், அவள் சொன்னதை நாம் செய்யவில்லை எனில் - கவனியுங்கள் நாம் சொல்வதை அவள் கேட்க வேண்டும் என்பதல்ல விசயம் - எரிச்சலூட்டும் செயல்களை செய்கிறாள். பொருட்களை வீசி எறிவது. கத்துவது. தரையில் படுத்து உருள்வது. (விறுவிறுவென்று பூஜை அறைக்குள் சென்று குங்குமத்தை கொட்டுவது). அவளுடைய பெற்றோர் பயந்து போய் அவள் சொல்வதை செய்கின்றனர். உடனயே சமாதானம் ஆகி சிரித்து கொஞ்சுகிறாள்.
நான்கு வயது அர்சுன் இதே போலத்தான். கோபம் வந்தால் கத்துவதில் எங்கள் காலனியே அதிரும். கூடவே புரியாத வார்த்தைகளில் அவன் அம்மாவை திட்டவேறு செய்வான். என்னுடைய இந்த வயது நண்பர்கள் ஓரிருவர் தவிர பெரும்பாலும் இப்படித்தான். ஆனால், என்னிடம் விளையாடும்போது இத்தனை கலாட்டா இல்லை. அவர்களுடைய பெற்றோர் ஆச்சரியமுடன் 'உங்களிடம்தான் அடக்கமாக இருக்கிறான்" என்று கூறுகின்றனர். ஏன்? ஒரு விசயம் புலப்பட்டது இதனை என்னுடைய ஹோமியோ மருத்துவரும் உறுதிபடுத்தினார். அவை,
1. சொல்லத்தெரியாத பிரச்சினைகள் அவர்களுக்கு உள்ளன. இந்த பொம்மை வேண்டும், இந்த பாட்டு போடுங்கள் என்று சொல்ல முடிந்த அவர்களால், சிலவற்றை உணர முடிவதில்லை. முக்கியமாக பசி,உறக்கம் மற்றும் சத்து குறைவு. (இவர்கள் பொருளாதார வசதிமிக்க குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான்)
2. கிட்டதட்ட அனைவருமே குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பானம் குடிக்கிறார்கள். அந்த பானம் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கும் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. (பாலின் விலையைவிட அதிகம். உபயோகிப்பதும் அதிகரிக்கிறது.)
3. சில குழந்தைகள் சரிவர சாப்பிடுவதில்லை. அதற்கு பதிலாக இந்த பானத்தை ஒரு நாளைக்கு ஐந்து முறைகூட குடிக்கின்றனர். பெரியவர்களுக்கான ஆரோக்கிய பானத்திலேயே ஒரு நாளைக்கு இரு முறை என பரிந்துரைக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு எத்தனை முறை தருவது என்று குறிப்பிட வேண்டாமா?
4. உண்மை என்னவெனில், உணவை மறுக்கும் குழந்தையை சமாதானம் செய்து சாப்பிட வைக்கும் முயற்சியினை அம்மாக்கள் செய்வதில்லை. "அவன் சாப்பிடவே மாட்டேன் என்கிறான்" என்று கூறிவிடுகின்றனர். நாலுவயது பையன் அரை தோசை சாப்பிடுகிறான். இது எப்படி அவனுக்கு போதும்? மேலும் அவன் ஒரு துருதுரு குழந்தை. விசாரித்தால், ஊட்டசத்து பானத்தை தருவதாகவும் அது சக்தி தருவதாகவும் சொல்கின்றனர். இது சரியான கருத்தா?
5. போதுமான உணவு உட்கொள்வது அவசியம் என்றும், அதிலிருந்து ஊட்டச்சத்துகளை உடல் பெற வேண்டும் என்பதும் அவசியம், அதுதான் உள்ளுறுப்புகள் பலப்படுவதற்கு தேவையானது என்கிறார் மருத்துவர்.
6. சில அமைதியான குழந்தைகளின் பின்னனியில் குழந்தைக்கு பொறுமையாக ஊட்டுவது, முக்கியமாக குழந்தைக்கு ஏற்ற உணவை தயார் செய்வது, சரியான அளவில் உறங்கச்செய்வது , போதுமான விளையாட்டு , கனிவான கண்டிப்பு என்று கவனிப்புகள் இருக்கின்றன என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது.
7. சத்திற்கு ஊட்டச்சத்து பானமும் பசிக்கு பிஸ்கெட், கொறிப்பு தீனிகள் போன்றவை மட்டும் போதுமா? இந்த அரை தோசை, மூன்று ஸ்பூன் சாதம் போன்றவை போதாது என்பது என் கருத்து. கட்டாயப்படுத்தி ஊட்டக்கூடாது, சரிதான். ஆனால் விளையாட்டு காட்டியாவது ஊட்ட வேண்டாமா?
என்னிடம் மட்டும் அடம்பிடிப்பது இல்லை என்று சொன்னேனல்லவா, ஏன் என்றால் அவர்கள் வீட்டிற்குள் வரும்போதே குட்டி குட்டி தட்டுகளில் உணவுப் பொருட்களை நிரம்ப்பிவிடுவேன். சரியாக சாப்பிடவில்லை என்று தெரிந்தால் விளையாட்டாக கதை சொல்லி ஊட்டிவிடுவேன். வயிறு நிறைந்திருக்கும்போது கோபம் வராது என்பது அறிவியல் உண்மை.
இந்தப் பதிவு முடிந்த பின் விவாகரத்து பற்றிய தொடரை தொடர்கிறேன்.