மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

 அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள். 





 எங்கும் மகிழ்ச்சி பொங்க... 
        இல்லத்தில் நலமும் வளமும் பொங்க... 
             உள்ளம் என்றும் நிறைந்திருக்க.. 
                   உலகம் ஒளி பெற..    
அல்லதை அழிக்கும் சூரியனின் கதிர்கள் பரவுவதுபோல  
நல்லதை வாழ்விக்கும் நம் எண்ணங்கள் எங்கும் பரவட்டும்.  



       

அடுத்ததாக நெறிசார் போராட்டம் மற்றறும் நெறிசார் இரண்டக நிலை (ethical dilemma) பற்றி பார்க்கலாம். இதுமுற்றிலும் உணர்வுசார் போராட்டமாக இருக்காது.

                                                                                                                                                                                                                                                                                                                                                  
 நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் பின்னனியில் இயல்பாகவே ஒரு நெறிமுறை வழிகாட்டுதல் இருக்கும். அந்த வழிகாட்டுதலின்படி நாம் முடிவெடுத்து செயல்படும்போது முழு மன திருப்தி கிட்டும்.  இதயபூர்வமாக என்ற வார்த்தையின் பின்விளைவு உடல் மற்றும் மனதின் ஆரோக்கியம்.  திருக்குறள் போன்ற  நீதி நெறி நூல்கள் நாம் நெறிமுறைப்படி வாழ வழி காட்டுகின்றன.  நாடோடிகளாக திரிந்த மனித இனம் ஒரு சமூகமாக அடையாளம் காணப்பட்டபோது எளியாருக்கு வலியோர் தீங்கு விளைவிக்காமல் நடந்து கொள்வதற்காக இவை ஏற்படுத்தப்பட்டன.  இந்த நெறிமுறைகள் - Ethics எப்போதும் பொதுவான  பின்புலத்தை சார்ந்ததாகவே இருக்கும். பல கிளை வாய்ப்புகளை கொண்டதாகவும் இருக்கும். உதாரணமாக,  உயிர் கொல்லாமை பொதுவான  நெறிமுறை. ஆனால் இது யுத்தகளத்தில் செல்லாது. உயிரை காப்பாற்றும் தற்காப்பு நடவடிக்கைகளில் இது அநீதியாக கருதப்படாது.

 நம்மை வழி நடத்தும் மற்றொரு விசயம், நாம் கடைபிடிக்கும் தர்மமாகும் (dharma). தர்மம் என்பது கடமை என்று கொள்ள வேண்டும். ‘என் குடும்பத்தின் நலன் என்னுடைய தர்மமாக இருக்கலாம். என்னுடைய முடிவுகள் அனைத்தும் இதனை கருத்தில் கொண்டே எடுக்கப்படும். சில சமயம் நான் பின்பற்றும் தர்மம் அறநெறியிலிருந்து பிறழ வாய்ப்பளிக்கும். அந்த சமயத்தில் நான் சார்ந்த சமூகத்தின் நெறிமுறைகள்- Ethics – எனக்கு வழிகாட்டும்’. ‘.  ‘ஈன்றாள் பசி காண்பான் ஆயினும்….’ என்ற குறளில் சொல்லப்படும் நியதி இதுதான். பெற்ற தாயை பேணிக்காப்பது ஒரு மகனின் கடமையென்றாலும், அதற்காக அவன்  நெறிதவறிய வழியில் பொருளீட்டக்கூடாது – கொலை,கொள்ளை, சூது போன்றவை கூடாது.

சில சந்தர்ப்பங்களில் நம்முன் வைக்கப்படும் பல்வகையான தீர்வுகளில் ஏதேனும் ஒன்றினை தேர்வு செய்ய முற்படும்போது நாம் இந்த நெறிமுறைகளை பின்பற்றியே செயல்படுவோம் - சாலைகளில் செல்லும்போது சாலைபாதுகாப்பு விதிகளை பின்பற்றி செல்வதுபோல். மிக சில சமயங்களில் நம்முன் உள்ள தீர்வுகள் சமமான தார்மீக பலம் கொண்டவையாக இருக்கும். முடிவெடுக்க முடியாமல் குழம்பி நிற்போம் நாம் பின்பற்றும் தர்மத்திற்கும் பொதுவான நெறிமுறைகளுக்கும் இடையே வரும் சிக்கலே  நெறிசார் போராட்டம் ethical conflict எனப்படும். 

கணவனை இழந்து ஆதரவற்ற நிலையில் இருக்கும் அவள் ஒரு கூலித்தொழிலாளி. ஒரு வயது குழந்தையான ஒரு மகன் மட்டும் உண்டு.  சில நாட்களாக சரியாக வேலை கிடைக்கவில்லை. இருவருமே சரிவர உண்ணவில்லை. உயிர் போகும் அபாயத்தில் இருவருமே உள்ளனர். பழைய கஞ்சி பாத்திரத்தில் நீரில் மிதக்கும் கைப்பிடி அளவு சோறு மட்டுமே உள்ளது. இருவரில் ஒருவருக்கு மட்டுமே போதும். மற்றவர் உணவு இல்லாமல் மரணத்தை தழுவ நேரிடலாம். இந்த நிலையில் யாருக்கு அதனை தரலாம்? அந்தப்பெண் அதனை உண்டு உயிர் வாழட்டும் என்ற முடிவினை அவளாலேயே ஒப்புக் கொள்ள முடியாது. குழந்தைக்கு தந்து தாய் உயிர் துறக்கட்டும் என்றாலும் சரியான தீர்வாக இருக்காது. இதுதான்  இரண்டக நிலை.  ஒரு முடிவிற்கு வரவேண்டுமல்லவா, அதனால் இன்னும் ஒரு செய்தியை சேர்த்துக் கொள்ளலாம். அவளுக்கு அன்று பார்த்து ஒரு வேலை கிடைக்கிறது. உணவு உட்கொண்டால் மட்டுமே அதனை செய்ய முடியும். இந்த நிலையில் அவள் அந்த உணவினை எடுத்துக் கொள்ள அனுமதிக்கலாமா? ஏனெனில் குழந்தைக்கும் உணவு கிட்டும் வாய்ப்பு கிட்டலாம். அல்லது அவள் கைக்கு பணம் கிட்டும் முன் பசியால் குழந்தை உயிர் துறக்கவும் நேரிடலாம். இது எழுத்தாளர் சமுத்திரம் அவர்களின் சிறுகதையில் வரும் ஒரு சூழ்நிலை. இது போன்ற குழப்பங்களுக்கு பதில் சொல்லாமல் அவர் தரும் முடிவுயாதெனில், மீதிருந்த கஞ்சியை அவள் குடித்துவிட்டு பசியால் கதறிழும் குழந்தையை தூக்கிக் கொண்டு வேலைக்கு விரைகிறாள், இந்த முடிவு தரும் கேள்விகள் நமக்குள் பல பதில்களை தந்தாலும் தவறு நடந்ததுபோன்ற உணர்வினை தருகிறதல்லவா? எந்த முடிவினை தேர்ந்தெடுத்தலும் குற்ற உணர்வால் பாதிக்கப்படுவது உறுதி. இதுவே நெறிசார் இரண்டக நிலை ethical dilemma  எனப்படுகிறது.

  நெறிசார் இரண்டக நிலையின் பின்விளைவு, செய்த தவறினை நினைத்து வருந்தும் நிலையாகும். இதன் அடிப்படை தர்ம நெறி தவறுதல் மற்றும் அதன் விளைவான உணர்வுகளின் பாதிப்புகள் – பெரும்பாலும் குற்ற உணர்வு முக்கிய பங்கு வகிக்கும். மனம் தவறுக்கான தண்டனை ஏற்பதை விரும்பும்.  முற்றிலும் நெறிசார் போராட்டமாக இல்லாமல் உணர்ச்சிகளின் தாக்குதலும் இருக்கும். தவறுக்கு சரியான பிராயசித்தம் தேடாமல் தப்பிக்க நினைக்கும் மனப்பான்மை வரும். தப்பிக்கும் வழியாக தற்கொலை முடிவினை எடுக்க நேரிடலாம்.

  இத்தகைய போராட்டத்தில் உள்ளவர்கள், உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. எனவே இத்தகைய நிலை தற்கொலை முடிவிற்கு உடனேயே கொண்டு செல்லாது. பொதுவாக, தர்ம வழியில் தாம் நடப்பதாக நம்புபவர்களுக்கு தன்னை பற்றி உயர்வான எண்ணம் – high self esteem-  இருக்கும். சிக்கலான சில தருணங்களில் தர்மத்தை மீறும் நிலை ஏற்படும்போது தங்களை பற்றிய உருவகம் உடைந்து போவதை உள்ளுக்குள்ளேயே உணர்வார்கள். இதுதான் குழப்பத்தின் ஆரம்பமாக இருக்கும். தர்மம் தவறிவிட்டோம் என்ற குற்ற உணர்விற்கு ஆளானால் தவறான முடிவிற்கு செல்ல வாய்ப்புள்ளது. அது மிக உறுதியான எண்ணமாகவும் இருக்கும். எனவே சாதாரண உரையாடல்கள் இங்கு பலன் தராது. மருத்துவர்களின் உதவியுடன் கவுன்சிலிங் செய்யப்பட வேண்டும். 

உதாரணமாக மகாபாரத்தில், பீஷ்மரை மரணப்படுக்கையில் பார்க்கும்போது அர்சுனனின் குற்ற உணர்வு அதிகரிக்கும். அவருடைய நிலைக்கு தானே காரணம் என்று ஒப்புக் கொண்டு தற்கொலைக்கு முயல்வான். அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் குறுக்கிட்டு தற்கொலைக்கு சமமான செயலை செய்து இந்த பாவத்திலிருந்து விடுதலை பெறலாம் என்று அறிவுறுத்துவார். அவர் சொல்லும் வழி, தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளுதல்.  தற்புகழ்ச்சி தற்கொலைக்கு சமம் என்பார்கள். ஆனால், மனோவியல்படி தர்ம நெறியிலிருக்கும் ஒருவன் தன்னை பற்றிய உயர்வான எண்ணம் கொள்ளும்போது குற்ற உணர்விலிருந்து விடுபட முடியும். ஏனெனில், தன்னெஞ்சறிவது பொய்யற்க என்பதன்படி முழு மனதோடு ஒருவன் தன்னை பற்றிய உயர்வான கருத்துக்களை சொல்லவேண்டும் எனில் உண்மையான உள்ளார்ந்த தேடுதல் தேவைப்படும். அது தன்னம்பிக்கையினை அதிகரிக்கும்  சில நல்ல விவரங்களைக்கூட தரக்கூடும்.

தர்ம நெறியினை பின்பற்றுபவர்கள் சட்டென உணர்ச்சி வசப்படமாட்டார்கள். ஆனால் தவறிழைத்துவிட்டால் ஏற்படும் குற்ற உணர்வு நீண்ட காலத்திற்கு நீடித்திருக்கும். ‘கரையான் அரிப்பதுபோல’ என்பார்களே... அதுபோல்  நம்முடைய எண்ணங்களை பாதிக்கும். சரிவர கையாளப்படாத  நெறிசார் போராட்டமானது,
-      நம்மைபற்றிய சுய மதிப்பீட்டை குறைத்து நம் நம்பிக்கைகளை மாற்றக்கூடும். – Low self esteem.
-     நெறிமுறைகளை பின்பற்ற முடியாமல் தவறான பாதைக்கு செல்ல நேரிடலாம் -  Ethical fading.
-    சில சமயங்களில் மனச்சிதைவிற்கு ஆளாகலாம்.

குற்ற உணர்விலிருந்து வெளிவர சரியான வழிகாட்டுதல்கள் தேவை – இரு கோடுகள் தத்துவம் போன்றவை.


 நாம் பார்க்கும் வெளி உலகத்தைவிட நமக்குள் இருக்கும் அகஉலகம் மிக பெரியது. மிக ஆழமானது. மிக அதிகமான தத்துவங்களும் தார்மீக கோட்பாடுகளும் அங்கு இருக்கும். மறைத்தலோ மறத்தலோ இல்லாத உலகம். அங்கு பிறக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் நாம் பதில் சொல்லியே ஆகவேண்டும். ‘தன் செயல் எண்ணி தவிப்பது ‘ தவிர்க்க முடியாது. நாம் பின்பற்றும் நெறிமுறைகளும் அதற்கான தேர்வுகளும் முக்கியத்துவம் பெற்றவை. முழுவதுமாக ஒரடிகூட வைக்காமல் பாதியடி பதித்து தாவிச்செல்லும் இந்த விரைந்த உலகத்தில் நம் உள்ளுணர்வை பாதிக்கும் செயல்களிருந்து தப்பிக்க நாம் பின்பற்றும் தர்மம் மற்றும் நெறிமுறைகள் பற்றிய தெளிவு இருக்க வேண்டியது அவசியம். அதற்கான சூழலை அமைத்துக் கொள்வதையும் கவனம் செலுத்த வேண்டும்.  

(  To read the articles related with Ethical conflicts please refer the articles published by Max H. Bazerman and Ann E. Tenbrunsel in Harvard Magazine.)