மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

நொடிக்கொரு முறை எந்தன்
கண்ணிமைகள் துடிக்கும்போது
ஒரு நிழற்படம் பதியப்பட்டது...
என்னுடைய தொகுப்பாக நீயும்,
உந்தன் பதிவுகளில் நானுமாக
கணக்கின்றி சேமித்தோமே....!

சூரியபிரகாசமான தாய்மையில்
என்னை நீ அழகாக பதிந்தாய்
விழிகளின் ஓரத்தின் கண்ணீரில்
உன் சிரிப்பைத் தவிர வேறேது?
நெஞ்சில் வைத்துக் கொண்டாடி
தோளில் சாய்த்து வருடினேன்
உறக்கம் வந்த வேளையில்கூட
கண் சிமிட்டலின் புன்னகையில்
முத்தத்துடன் ஒரு அன்புப்பதிவு.

வளர்ந்தபின் மறந்துவிட்டாய்
என்னைத் தேடும் உன் தேடுதல்
மெல்ல மெல்ல பழங்கதையாக,
இருளுக்குள் ஓடி ஒளிந்திட்டாய்.
சாளரத்தின் வெளியே ஒளியில்
உன் மழலை முகத்தின் சாயல்
உன்னைதான் நான் தேடுகிறேன்!

வயிற்றிலிருந்து மடியிலும் ...
மடியிலிருந்து ஏந்தி கைக்கும்....
கையிலிருந்து தோள்களுக்கும்,
மாற்றியே உன்னை சுமந்தேனே
உயிரை உருவி வேற்று பூமிக்கு 
அனுப்பித் தொலைத்தேனா?
ஆனால் நீ மட்டும்.......?


பிரச்சினை இருப்பதை புரிந்து கொண்டாயிற்று. இனி, என்ன செய்வது என்பதை இரண்டு விதமாக அணுகலாம். பிரச்சினை நமக்கு என்றால் என்ன செய்வது?. நம்முடைய நெருங்கிய உறவினருக்கு என்றால் என்ன செய்வது? என்று பார்க்கலாம்.

நமக்குத்தான் பிரச்சினை:
 1.  தொழில், வேலை அல்லது குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சினகளுக்கு உடனடி முடிவு எதுவும் எடுக்க வேண்டாம். மாற்றி யோசிக்கும் மனோபாவத்தினை செயல்படுத்தும் நம்முடைய ஆழ்மனது தற்சமயம் குழம்பி உள்ளதால் சரியான தீர்வு கிட்டாது. எளிதாக முடிக்கவேண்டிய விசயங்கள் சிக்கலாகிவிடலாம், எனவே, அமைதியாக இருக்க முயற்சியுங்கள்.

2.  யோகாசனம் செய்யலாமே என்று நினைத்தால் புதிதாக ஆரம்பிக்க முயற்சிக்க வேண்டாம். உண்மையில் யோகா போன்றவற்றை பழக்கத்தில் வைத்திருப்பவர்க்கு இது போன்ற பிரச்சினை வராது.  புதிதாக ஆரம்பிக்க நினைத்தால் முயற்சி இந்த சமயத்தில் கைகூடாது.

3.  உடல் சோரும் போது என்ன செய்வோம்? தற்காலிக ஓய்வு தருவோம். உடலுக்கு சிரமத்தை விளைவிக்கக்கூடியவற்றை தவிர்ப்போம். தெம்பாக இருப்பதற்குத் தேவையான உணவினை உட்கொள்வோம். தொல்லை இல்லாத உறக்கத்தை நாடுவோம். இது அத்தனையும் மனதிற்குத் தரவேண்டும்.

4. மனதை தெளிவுபடுத்த எங்கேயாவது சுற்றுலா செல்லலாம். கிளம்புமுன் உங்களை  குழப்பத்தில் ஆழ்த்திய முக்கிய பிரச்சினையை ஒரு தாளில் எழுதி பூஜை அறையில் வைத்துவிடுங்கள். அல்லது ஒரு சிறிய பெட்டியில் வைத்து மானசீகமாக அதனை அங்கேயே விட்டுச் செல்வதாக மனதிற்குள் சொல்லிக் கொள்ளுங்கள். சுற்றுலா செல்லுமிடத்தில் போய் எந்த யோசனையும் செய்யாமல் சுற்றிலும் நடப்பதை ரசித்து உணர்ந்து நேரத்தை அனுபவியுங்கள். சுற்றுலா செல்லுமிடம் மலை பகுதியாக இருக்கலாம் அல்லது கடல் சார்ந்த பகுதியாக இருக்கலாம். கண்ணுக்குத் தெரிந்தவரை ஒரே வண்ணம் இருப்பது மனதை அமைதிபடுத்தும் -ஹீலிங் செய்யும். புதிய மனிதர்கள், புதிய இடங்கள் மற்றும் புதிய காட்சிகள் ரசனையை தூண்டிவிட்டு மனதிற்கு தெம்பூட்டும். நமக்கு சம்பந்தமில்லாத காட்சிகளில் பார்வையாளராக மட்டுமே இருப்பதால் சிந்திக்கத் தேவையில்லாமல் மனம் உறக்கம் நாடும்.

     -- மனதின் உறக்கம் ஒரு அருமையான புத்துணர்வினை தரும். நாம் உடல் ரீதியாக விழித்துக் கொண்டுதான் இருப்போம்.. ஆனால் நமக்கு தொடர்பில்லாத சூழ்நிலைக்குள் செல்லும்போது நம்முடைய கட்டுபாட்டை சூழ்நிலை எடுத்துக் கொள்வதால் சிந்திக்கத் தூண்டும் மூளையின் செல்கள் சற்று ஓய்வெடுத்துக் கொள்ளும். சுற்றுலா செல்லுமிடத்தில் பொறுப்பை யாரிடமாவது தந்துவிட்டு அவர்கள் போக்கில் போக வேண்டும். அலையை எதிர்த்து நீச்சல் அடிப்பது ஒருவகை என்றால், கடல் ஓரமாக முழங்கால் அளவு தண்ணீரில் அமர்ந்து கொண்டு அலையின் போக்கிற்கு ஆடிகொண்டேயிருப்பது ஒரு வகை. பின்னதில் மனதிற்கு வேலையில்லை, அனுபவிக்க மட்டுமே செய்தால் போதும். இவையெல்லாம் மனதிற்கு ஓய்வு தரும் வேலைகள்.

   - சிலர் சுற்றுலா திட்டமிட்டு குடும்பத்தையே அழைத்துக்கொண்டுபோய், வழக்கம்போல தலைமை பொறுப்பை தன் கையில் வைத்துக் கொண்டு கர்னல் ஒரு மிலிட்டரி படையினை வழி நடத்தி செல்வதுபோல நடந்து  கொண்டு கத்தி குவித்து இன்னும் சிக்கலாக்கிக் கொண்டு வந்து சேருவார்கள். எனவே இதனை கவனமாக செய்ய வேண்டும்.

5.  புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைவது, இசை கருவிகள் வாசிக்க கற்றுக் கொள்வது போன்ற புதிய கலை முயற்சியில் ஈடுபடலாம். இவை வெற்றி பெற்றால் நாம் உள்ளுக்குள்ளேயே பாராட்டி மெச்சிக் கொள்வோம். சரியாக வராமல் தவறாகி விட்டாலும் ஒரு சுவைமிக்க அனுபவம் கிட்டும்.
 
6. எல்லாவற்றிற்கும் மேலாக நமக்கென்று ஒருவர் இருக்க வேண்டும். நம்முடைய தனித்துவம் உணர்ந்து நமக்காக சிந்திக்கும் ஒருவரை இத்தனை நீண்ட வாழ்க்கையில் தேடுவது கடினம் அல்லவே. அவர்களை மதிப்பதும் பெருமைபடுத்துவதும் நமக்கு நல்லது. அப்படி ஒருவர் உங்களுக்கு ஏற்கனவே இருந்தால், கவனித்துப் பாருங்கள் அவரிடம் நமக்கான நேர்மறை சிந்தனைகள் அதிகம் இருக்கும். 
 
7. இது போன்ற மனக்கொந்தளிப்புகள் ஆண்களுக்குத்தான் அதிகம் வரும். பெண்களுக்கு மிகக்குறைவுதான். ஏன் என்றால், கட்டுப்படாத சூழ் நிலையினை உணர்ந்து பெண்கள் கட்டுப்பாட்டு விசையினை ஆண்களிடம் விட்டுவிடுவார்கள். "ஏன், ஒரு கருத்தும் கூறாமல் இருக்கிறாய்?" என்றும், "நீங்களே சொல்லுங்களேன் என்னவென்றாலும் சரிதான்" என்ற  கழண்டு கொள்ளும் பதில் உரையாடலும் நடக்கும் நிலையது. ஆண்களுக்கு இயல்பான ஈகோ இருப்பதால் புலிவாலை பிடித்து விடுவார்கள் (புலியினை அடக்கவும் தெரியாது, புலி வாலைவிடும் தைரியமும் வராது.) ஆக நம்பிக்கைக்குரிய ஒருவர் நம்முடன் இருப்பது நல்லதுதானே, இது போன்ற சமயங்களில் பயன்படும் (மனைவி, தந்தை மற்ற பெரியவர்கள்). குறைந்தபட்சம் ஆலோசனை கேட்கவாவது குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களை நாடலாம்.
                        
                               
                                               - அடுத்து,  தொடரின் கடைசி பகுதியில் சந்திப்போம்


        இது போன்ற சூழ்நிலை எப்போது? ஏன் உருவாகிறது?  குறிப்பிட்ட  உடல் நலக் கோளாறு ஏற்படும்போது - உதாரணமாக பித்தப்பை பாதிப்பு, வயிற்றுப் புண், மூளையில் சுரக்கும் திரவத்தில் (ஆனந்தமைடு) ஏற்படும் மாற்றங்கள் போன்ற வெளிப்படையாக தெரியாத கோளாறுகள் - சிந்திக்கும் திறனை பாதிக்கும். இவை நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தும்போது வெளிப்படையாகவே உடல் நலமில்லை என்று நமக்குப் புரிந்துவிடும். மருத்துவ ஆலோசனை பெறுவோம். ஆனால் ஏதோ ஒரு சிறிய நெருக்கடியில் சட்டென ஏற்படும் ரசாயன மாற்றங்கள் பெரிய பாதிப்புகளாக தெரிய வராது. இது ஒரு குறுகிய கால பாதிப்புதான். சில நாட்களில் தானாகவே சரியாகிவிடும். ஆனால் அந்த குறுகிய காலத்திற்குள் நாம் அடுத்தடுத்த தவறுகளை செய்து  இடியாப்ப சிக்கலை உருவாக்கிவிடுவோம். இதனால் குடும்பத்திற்குள் ஏற்படும் குழப்பங்கள் வரையறுக்க முடியாது.

      சரி,  இது போன்ற சந்தர்ப்பங்கள் எல்லோருக்கும்  ஏற்படக்கூடியதுதான், மற்ற வீடுகளிலும் இது போன்ற குழப்பங்கள் இருப்பதில்லையே என்று கேட்பீர்கள். உண்மைதான், மனதை பாதிக்கும் ஒரு சம்பவம் நடந்தால், உடன் இருப்பவர்கள் அவருக்கு தகுந்த ஆலோசனை கூறி சமன் செய்துவிடுவார்கள்.  உதாரணத்திற்காக சொல்கிறேன், எங்கள் வீட்டில்  ஏதோ ஒரு விசயத்திற்காக சிறியவர்கள் பயந்துவிட்டால் அல்லது அதிர்ச்சியடைந்தால் கொழுமோர் செய்து சட்டென குடிக்கத்தருவார்கள் அல்லது ஒரு ஸ்பூன் சீனியை வாயில் போடுவார்கள்.  இது உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களை  சீர் செய்துவிடும். உடல் நலம் பாதிக்காது. ஆனால், குடும்பத்தினை முன்னேடுத்து  நடத்திச் செல்லும் முக்கிய பொறுப்பில் நாம் இருக்கும்போது நமக்கு அடுத்தவர் ஆலோசனை சொன்னாலும் பிடிக்காது, நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாக  சொல்லவும் அவர்களுக்குத் தோன்றாது. . எனவே சூழ இருப்பவர்கள் உணர்ந்த  "சம்திங் ராங்" என்கிற விசயம் நமக்கு தெரியாமல் போய்விடும். இந்த நிலை கண்டிப்பாக மற்றவர்களையும் பாதிக்கும். ஒரு சறுக்குப்பாதையில் நாம் பயணிப்பதையும் அதன் முடிவு மூச்சு திணறவைக்கும் ஒரு இருள் குகை என்பதும் பயணத்தின் ஆரம்பத்தில் தெரியாது. உடன் இருப்பவர்களுக்கும் இது பற்றி புரிந்து கொள்ளமுடியாது.


     ஒரு மலை பாதையில் பயணிப்பவர் தனித்து செல்லும்போது ரொம்பவும் ஜாக்கிரதையான உணர்வுடன் காலடிகளை எடுத்து வைப்பார்கள். அதுவே ஒரு குழுவாக செல்லும்போது தலைமை ஏற்றிருப்பவர்மீது நம்பிக்கை வைத்து அவர் சொல்படி செய்வார்கள். தலைமை பொறுப்பில் உள்ளவர்களும், சரியான பாதையை தேர்வு செய்து வழி நடத்துவார்கள். முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று, தலைமைக்கு கட்டுப்பட்டு இயங்குவதால் அவர் வழிகாட்டுதலை மட்டுமே தொடர்வதால் தனக்கென்று ஒரு சிந்தனை இருக்காது. ஏதோ ஒரு இடத்தில் தலைமை பொறுப்பேற்றவர் தவறிவிட்டால், அதனை கவனித்து சரி செய்யவும் தோன்றாது. முடிவு மொத்த குழுவிற்கும் தோல்விதான் கிட்டும். இதேபோலத்தான், குடும்பத்தில் முக்கியமான பொறுப்புகளை தன்வசம் வைத்திருக்கும் ஒருவர் தவறாக சிந்திக்கும்போது அதன் பாதிப்பு மொத்த குடும்பத்திற்கும்தான். ஏன் தெளிவான முடிவுகளை நம்மால் எடுக்க முடியவில்லை என்று கேள்வி தோன்றினாலும் எடுத்து சொல்லத்தயங்குவார்கள். தப்பித்தவறி  சொன்னாலும் கடுமையான பதில்தான் கிட்டும் என்று அவர்களுக்குத் தெரியும்.  நாமும்தான் தவறான சிந்தனைகளினால் ஒரு இணக்கமான நிலையினை தவிர்த்து விலகி இருப்போம். நாம் சொல்வதை மறுத்துப்பேசிய தற்சமய சூழ்நிலையை கருத்தில் கொண்டு  கழிவிரக்கத்தினால் இன்னும் அவர்களைத் தவறாக நினைக்க ஆரம்பிப்போம். ஒரு சத்தியமான உண்மை என்னவென்றால், நம் மீது நம்பிக்கை வைத்து இருப்பவர்களை நாம் நம்பிக்கை வைத்து இருப்பவர்களையும் விலக்க ஆரம்பிக்கும்போதுதான் நம்முடைய தோல்விக் கதையின் முதல் வார்த்தை எழுதப்படுகிறது. 
 
    ஒரு வெற்றி பெற்ற தொழிலதிபர். சிறிய வயதில் வாழ்க்கையை வெறுங்கையுடன் ஆரம்பித்தவர். கடுமையான உழைப்பினால் உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டார். அருமையான மனைவி, வளர்ந்த பிள்ளைகள் என அத்தனை பேரும் அவர் சொல்லை தட்டமாட்டார்கள். வயதாகி விட்டது. அரசாங்கத்தின் கொள்கை மாற்றங்களின் காரணமாக ஒரு நெருக்கடி வந்தது. வெற்றியையே சந்தித்து பழகியவரால் இதனை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. உள்ளுக்குள்ளேயே சில மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதுகிறேன். தன் விசயத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத அவர் சிந்தனை குழப்பத்தால் தவறான முடிவுகளை எடுக்கிறார். ரொம்ப நாள் கழித்து முதல் தோல்வி. பிள்ளைகளுக்கு தந்தை மேல் இருக்கும் நம்பிக்கை ஆட்டம் காண்கிறது. அவரின் தவறான முடிவுகளை விமர்சிக்கின்றனர். இது மேலும் அவரின் உடல் நிலையினை பாதிக்கிறது. விட்டதை பிடிப்போம் என்கிற நம்பிக்கையில் அதிரடி முடிவுகளை எடுக்கிறார். அதுவும் சிக்கல்.  குடும்ப சிக்கல் மனதை ஓய்த்துவிட்டது. பொருளாதார சிக்கல் ஆரம்பிக்கிறது. மொத்த குடும்பத்தையும் பாதிக்கும் என்று நான் சொன்னது இதனைத்தான்.
 
                                                                          - மீதி அடுத்த பதிவில் தொடரலாமா?


என்னுடனேயே பிறந்தாய்..
       கைப் பிடித்து  நடந்து ஓடி
ஒன்றாய் கூடி  கதை பேசி
       ஒரு குடம் தண்ணி ஊற்றி
பூப்பூவாக  பூத்து குலுங்கி
       அன்னை தந்தை கொஞ்சி
குவித்த அத்தனை பாசமும்
     கிள்ளி வைத்து பங்கு பிரித்து
கள்ளமின்றி ஆடித் திரிந்தோம்!
இன்று....
ஏனடி பொய்யாக கதைக்கிறாய்?
    எதையோ அடிமனதில் மறைத்து
பார்வையிலிருந்து மறைகிறாய்!
    சிறு சிறு பழியினை சுமத்தி விட்டு
உன்னை தொலைத்து ஓடுகிறாய்!
     வெறுப்பை வலிந்து கேட்கிறாய்!



ஏனென்று எனக்குத் தெரியும்!
    உன் 'வீட்டு' தோல்விக் கதை
அத்தனையும் புரியும்... ...
     உயிரோடு உறவு தொலைத்த
என் வேதனையின் வலியை
    உனக்குத்தான் தெரியாது ..!
ஒன்று மட்டும் சொல்லுவேன்....
     என் வேண்டுதலின் பரிசாக
உன் தலை நிமிர்ந்து நிற்கும்
     வெற்றி நாள் ஒன்று வரும்
என்னை பார்த்து சிரிப்பாய்..
   

     அன்று ஓங்கியொரு அறைவிட்டு
தொலைந்த  கதை கேட்பேன்....
     அது வரை என் கேள்வியின்
எல்லைக்குள் வராமல்
      அந்தி வானத்தின் அடியில்
ஒளிந்து கொண்டு இருந்துவிடு.