மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்



நடப்பதே வெற்றியென
நினைக்கும் வரையில்
காலடித்தடங்கள் மட்டும்
கவனப்படுத்தப்பட்டன
தடுமாறி விழுந்தபின்
ஊன்றி எழும்பிய போது
உள்ளங்கை ரேகையும்
மணல் ஓவியமாகியது.
விழுவதும் எழுவதுமாகிய
வாழ்வியல் நொடிகள்
ரசனையுடன் பதிந்தன.



குறிப்பு: என்னுடைய ப்ளாக்கர் கோளாறு சரியாகிவிட்டதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள இந்த குட்டிக் கவிதை. மீண்டும் தொடர் பதிவு அடுத்தபதிவிலிருந்து தொடரும். ஒரு சிறு விடுமுறை எடுத்துக் கொண்டு. மீண்டும் அடுத்த வாரத்திலிருந்து தொடர்கிறேன். மற்ற பதிவுகளுக்கும் வருகிறேன். அதுவரை மன்னிக்கவும்



திருமணம் என்ற ஒரு திட்டத்தை கண்டுபிடித்த புண்ணியவானே பிரமிக்கும் அளவிற்கு அது முக்கியத்துவம் பெற்றது. அதனை முக்கியத்துவம் பெற வைத்தவர்கள் 'ஆண்கள்' மட்டும் அல்ல, பெண்ணை பெற்ற பெண்களும்தான். முதலிலேயே சொன்னபடி பெண் ஒரு போகப்பொருளாக கருதப்பட்டமையால் பயன் இருக்கும்வரை உபயோகித்துவிட்டு அழிக்கப்படும் பொருளானாள்.  

குடும்பம் என்ற பரிணாம வளர்ச்சி பெண்களையும் ஒரு படி மேல் கொண்டு சேர்த்தது. காதல் என்ற வார்த்தை பலப்படுத்தப்பட்டு ஜென்ம ஜென்மமாக தொடரும் உறவாக மாற்றப்பட்டது. அதன்பின் நல்லபடியாக 'அனுப்பி வைப்பது'வரை கணவன் மனைவிக்கு விதிமுறைகள் விதிக்கப்பட்டன. அவை சுகமாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

அப்போதெல்லாம் வரதட்சினையெல்லாம் கிடையாது. பெண்ணை நல்லபடியாக வைத்துக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை தரக்கூடிய பரிசோதனைகள் மட்டும் நடக்கும். அவன் தேர்வு செய்யப்பட்டால் பெண்ணை கரம்பிடித்து அழைத்துச்செல்லவேண்டியதுதான். மனைவிகளின் எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப்படவில்லை. அது அவரவர் தகுதியை பொறுத்தது. 
    
இதிலும் பெண்கள் வஞ்சிக்கப்படுவதாக தோன்றியது. இன்னும் சங்கிலிப் பிணைப்பை இன்னும் சற்று இறுக்க எண்ணி, பாசம் என்ற வார்த்தையை முன் வைத்து பெண்ணை திருமணம் செய்து தரும்போது அவளுடன் பொருட்கள் தந்தனுப்பும் பழக்கமும் வந்தது. ஒருவேளை அவள் கைவிடப்பட்டாலோ ஆதரவற்று போனாலோ, இவை அவளுக்கு உதவும் என்ற எண்ணமும்தான் இதனை செய்தது. இப்படியாக குடும்பம் அமைக்கும் செலவுகள் ஆணின் கையிலிருந்து பெண்ணிற்கு மாற்றப்பட்டன. புகுந்த வீட்டிற்கு சென்ற பெண்ணும் சங்கடம் ஏதுமின்றி தன்னுடைய பொருட்களை உபயோகித்து வாழப் பழகிக் கொண்டாள்.- ஒவ்வொன்றிற்கும் தடுமாறிக் கொண்டிருந்தால் எதையுமே செய்யத் தெரியாதவள்  என்று அவளை குறைத்து மதிப்பிடும் வாய்ப்பு வந்துவிடலாம் அல்லவா? 'எத்தகைய சிறப்பான பெண் என் மனைவி' என்ற பெருமிதம்தான் ஆணை கட்டிப்போடும் தந்திரம் என்பதும் இதன் ரகசியம் ஆகும். இப்படியாக வரதட்சினை உள்ளே புகுந்தது. 

இப்போது சில கேள்விகளுக்கு விடை கிட்டியிருக்கும்.
1. திருமணம் முடிந்தபின் பெண்தான் கணவன் வீட்டிற்கு செல்கிறாள் (ஆரம்பத்தில் 'கவர்ந்து' கொண்டு சென்ற பழக்கம்தான்)
2. இப்படி பெண் இடம் மாறிவிடுவதால் வயதானவர்கள் ஆண்களின் பராமரிப்பில் இருந்தனர். எனவே பெற்றோரை காக்கும் பொறுப்பு ஆண் மகனை சேர்ந்தது.
3. ஆண் குழந்தை இல்லாதவர்கள் உறவிலேயே பிள்ளைகளை தத்தெடுக்கும் பழக்கம் வைத்துக் கொண்டனர். வாரிசு என்ற உரிமை தந்தனர்.
4. பெண் எந்த கவலையுமின்றி முழு மனதோடு கணவன் வீட்டில் ஒரு மகாராணியைப் போல மதிக்கப்பட வேண்டும் என்ற நல்லெண்ணமே வரதட்சினையின் ஆரம்பம்.
5. நுட்பமான அறிவுடைய பெண் இனம் அறிவில் சிறந்து விளங்கி கணவனுக்கு தகுந்த ஆலோசனைகள் கூறி பொறுப்புமிக்க சமுதாயத்தை உருவாக்கியது. இதற்கு அழியாத உண்மை வரலாறுகளை தன்னகத்து பதிந்துள்ள பழந்தமிழ் இலக்கியத்தில் நிறைய சான்றுகள் உள்ளன.

இதெல்லாம் ஆரம்ப கால சிந்தனைகள்....

.திருமணம் என்பது - தலைவனும் தலைவியும் ஒருவர்மேல் மற்றவர் கொண்டிருந்த நம்பிக்கை மட்டுமே. அதுதான் எல்லாவற்றி
ற்கும் அடிப்படையான அன்பை தந்தது. அந்த நம்பிக்கையின் அளவீடுகள் மாற்றப்பட்டதன் விளைவே விவாகரத்து.

     

எப்போதெல்லாம் திருமணத்தின் அடிப்படை மறுக்கப்படுகிறது.. தவிர்க்க இயலாத காரணங்களாக இவற்றை கூறலாம்.
1. மனநிலை சரியில்லாதவர் - இதில் சைக்கிக் டிஸாடர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
2. குழந்தை பெறத் தகுதியில்லாதவர் (இதில் அனைத்துவிதமான பிரச்சினைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்)
3. திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளை கொண்டிருப்பவர்.



விவாகரத்து - சமீப காலங்களில் அது நிகழும் எண்ணிக்கையினால் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் அது நிகழ்த்தும் பின் விளைவுகளினால் முக்கியத்துவம் பெறுகிறது. இது கலாச்சார சீரழிவிற்கு வழிவகுக்கிறது என்றும் சொல்லலாம்.  கலாச்சாரம் பற்றி பேசும்போது சமூகத்தின் பெரும்பகுதியில் பாதிப்பு ஏற்படுத்தும் என்றால்தான் முக்கியத்துவம் பெறும். மாற்றங்கள் சிறு அளவில் இருக்கும் போது பாதிப்பு ஏற்படுவதில்லை.  இதற்கான  சட்டதிட்டங்கள் உருவாகும் முன்பே இது போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. கிராம பஞ்சாயத்து, குடும்பப் பெரியவர்கள், முக்கியமான சொந்தங்கள் இவர்களின் முன்னிலையில் மணமுறிவு உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. தவிர்க்க இயலாத காரணங்களால் மட்டுமே அவை அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.  இப்போது ஏன் கவலைப்பட வைக்கின்றன எனில் சமூகத்தின் நகர்வுகளை மாற்றியமைக்கக்கூடிய நடுத்தர குடும்பங்களில் இவை அதிகரித்துள்ளதால்தான். 
                 

ஏன் இந்த வளர்சிதை மாற்றம் ஏற்பட்டது? அடுத்த பகுதியில் பெண்கள் சார்ந்த சூழ்நிலைகளை பார்க்கலாம்.

 

ஒவ்வொரு திருமணமும் எப்படி சில கனவுகளை விதைக்கிறதோ அதேபோல விவாகரத்தும் சில கனவுகளை கலைத்துப் போடுகிறது.
---------------------------------------------------------

முதலில் திருமணம் என்ற சடங்கின் தோற்றம் பற்றி ஆராய்வோம்:


ஆதிகாலத்தில் மனிதர்களிடம், மிருகங்கள் போல வெறும் இச்சைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தரப்பட்டு வந்தது.  அந்த நொடியின் தேவைகள்தான் முன்னின்றன. வாழ்தலின் தேவைகளுக்கான தற்காப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வந்தது.  மிருகங்களுக்கும் மனிதனுக்கும் வேறுபாடு இல்லாத நிலையானது அடுத்த கட்டத்திற்கு முன்னேற குழுக்களாக வாழ்தல் என்ற கொள்கை கொண்டுவரப்பட்டது. 

பகிர்தல் என்ற வார்த்தைதான் மனிதனை அடுத்த முன்னேற்றத்திற்கு  கடத்தியது. அறிவு, வீரம், தொழில்செய் தந்திரம் போன்றவை அளவீடுகளாக கொள்ளப்பட்டு பல மட்டங்களாக குழுக்கள் உருவாகின. அதாவது சமூகம் உருவாது.  சற்று பொறுத்து மிருகங்களுடன் இட்ட சண்டைகள் மனிதர்களிடம் தோன்றி அழித்தொழித்தல் ஆரம்பித்தது. அதிலும் பெண்ணுக்காக நடந்த சண்டைகள் பிரசித்தி பெற்றவை.

காட்டிற்கு சென்று வேட்டையாடிவிட்டு திரும்பும் வரை அவன் மனம் கவர்ந்த பெண் அவனுடைய இருப்பிடத்தில் இருப்பாளா என்பதே சந்தேகமாகிவிட்டது. பெண் ஒரு போகப்பொருளாக பார்க்கப்பட்ட அதே வேளையில் இன்னொன்றும் புரிந்தது. அவளுடைய நுட்பமான அறிவு, விவேகமான சிந்தனைகள், வலிமையான மனோதிடம். அந்த சமயத்தில் பெண்ணுக்கும் ஒரு சமூக அங்கீகாரம் தேவைப்பட்டது.  இதன் விளைவாக ஒரு ஒப்பந்தம் போல  திருமணம் என்ற புதிய சடங்கு உருவாக்கப்பட்டது.

பெண்ணை காப்பாற்றும் பொறுப்பு ஆணுக்கும், ஆணுக்கு பாதுகாப்பு தரும் பொறுப்பு பெண்ணுக்கும் பகிரப்பட்டது. ஆண் காட்டிற்கு சென்றுவிட்டு திரும்புமுன் பெண் வீட்டை பாதுகாத்தாள். அவளுடைய நுட்பமான உணர்வுகள் மிருகங்களிடமிருந்தும் எதி
ரிகளிடமிருந்து ஆணை காத்தன. இவனுடய பொறுப்பு இவள் என்ற அங்கீகாரமும் பெண்ணை ஒருபடி உயர்த்தியது. நிம்மதி என்ற வார்த்தையை இருவரும் உணர்ந்தனர். அமைதியான சூழல் தாய்மையை உணர வைத்தது. குடும்பம் உருவானது. முதியவர்களை பராமரித்தல் என்பது பிற்பாடு உருவானதுதான். பிள்ளைகளின் பராமரிப்புதான் முதலில் முக்கியத்துவம் பெற்றது. ஆனாலும் பழங்காலத்தில் காதலுக்கே முக்கியத்துவம் தரப்பட்டது. அதற்கு அடுத்த இடம் நட்பு. இலக்கியங்களில்கூட இவ்விரண்டிற்கும் தரப்பட்ட முக்கியத்துவம் தாய்மைக்கு தரப்படவில்லை. ஏன்?. 


குடும்பம் குடும்பமாக வாழும் நம்முடைய கலாச்சாரத்தின் அடிப்படை எது? அன்பு.... சரிதான். பாசம், நேசம்,பரிவு, நட்பு,கருணை இவையனைத்திற்கும் தாண்டி தலைவனும் தலைவியும் கொண்டிருந்த அன்புதான் - காதல், அனைத்து உறவு பிணைப்புகளையும் பலப்படுத்தியது. இதுதான் ஆரம்பகால சிந்தனை. ஒரு நாகரிகமான சமுதாயத்தில், உறவுகளை பிணைக்கும் அடிப்படை அன்பு காதல் என்றும் சமுதாய பிணைப்புகளை பலப்படுத்துவது நட்பு என்றும் உறுதியாக நம்பப்பட்ட காலம். அதனாலேயே இலக்கியங்கள் இவை இரண்டிற்கும் முக்கியத்துவம் தந்தன என்று கொள்வோமா?.


இன்னும் ஆழமாக பார்க்கப்போனால் இரத்த பந்தங்களுக்கு இடையிலான பிணைப்பு தானாகவே வலிமைபடும், ஆனால் ஒரு சமுதாயம் என்று வரும்போது மனிதர் மனிதருடன் ஏற்படுத்திக் கொள்ளும் சங்கிலிப் பிணைப்பு போன்ற தொடர்புகள்தான் முன்னேற்றமான ஒழுக்கமான கலாச்சாரத்தை உருவாக்கும் என்ற ரகசியம் தெரிந்திருந்தது. இதுபோன்ற பிணைப்புகளை இரண்டுவிதமாக பிரிக்கலாம். ஒன்று இரத்த சம்பந்தமான உறவுகளுக்கிடையேயான அன்பு -அம்மா,அப்பா,சகோதரர்..., மற்றது மாற்றாரிடம் உருவாவது. காதல்,நட்பு.. போன்றவை.  நட்பு ஒரு அழகான பிணைப்பை உண்டாக்கினாலும், முக்கியத்துவம் பெற சதவிகிதம் குறைவாகவே இருந்தது. இதே சமயத்தில் ஆணும் பெண்ணுமாக இணைந்து உருவாக்கிய உறவு உறுதியாக இருந்தது. சொல்லப்போனால் ஒருவருக்காக மற்றவர் எடுத்துக் கொண்ட முயற்சியும் உழைப்பும் சமுதாயத்தை முன்னேற வைத்தது. 

வீடு கட்டி வாழ மனிதன் கற்றுக் கொண்டதே தனக்கே உரிமையான பெண்ணிற்கு முழு பாதுகாப்பை தருவதற்காகத்தான் என்ற கருத்தும் உள்ளது. ஆண் பெண்ணின் மேல் வைத்த அன்பு வீரம், விவேகம்,புத்திசாலித்தனம், நாளைய  சிந்தனைகள் பொறுப்புகள் ஆகியவற்றை தந்தது.  எனவே திருமணம் என்பது உயர்திணையாக கருதப்படும் மனிதன் வாழ்வில் மேம்பாடு அடைய உதவிய வினை ஊக்கியாகவே இருந்தது.  தொடர்வோம்....
  


    ஒரு இல்லம் உருவாவது 'அவள்' கையால்தான். அன்பு ஒன்றை மட்டும் நம்பி ஒருவன் கைப்பிடித்து வேறிடம் புகுந்து மூச்சையும் பேச்சையும் மாற்றி உயிர் சுமந்து இல்லத்தின் அடித்தளமாகும் 'அவள்' - யாரோ பெற்றார்கள் யாரோ பாராட்டினார்கள். யுகம் யுகமாக மண்ணையும் மரபையும் காத்து வாழ்ந்து மறைந்த 'அவள்', ஒவ்வொரு மனைவி உருவாகும்போதும் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டேதான் இருக்கிறாள்.

   ஒவ்வொரு மணரத்தும் உண்மையிலேயே மனரத்தைதான் குறிக்கின்றன. ஒரு திருமணம் உண்மையாக மறுதலிக்கப்படுவது பெண் நினைத்தால் மட்டுமே. இல்லத்தை பிரித்து போட்டு இருப்பதையும் இல்லாததாக்கி செல்வது மனைவி நினைத்தால்தான் முடியும்.


நேற்றுவரை மென்மையாக
கடலுக்கு சென்ற தென்றல்
புயலாக மாறியிருந்ததை
தரை தட்டிய ஒரு கப்பல்
சாய்ந்து நின்று சொன்னது
"புரிஞ்சுக்கவே முடியல"

அதேதான். உண்மையில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளவே முடிவதில்லை. முன்பெல்லாம் விவாகரத்து என்றால்  சில தவிர்க்கமுடியாத காரணங்கள் இருப்பதை புரிந்து கொள்ளமுடியும்.  ஆனால் இப்போது நம்பமுடியாத காரணங்கள் எல்லாம் சொல்லப்படுகின்றன.  பத்து பொருத்தங்கள் என்று சொல்லப்படும் காரணங்களின் அடிப்படையானது இந்த தவிர்க்க முடியாத காரணங்களை சுட்டுகின்றன உதாரணமாக கோபம் கொள்கின்ற குணம் எனில் சாந்தமாக இருக்கும் குணாதிசயம் பொருத்தமாக கருதப்படும்.  எதுவும் இல்லாமல் ஏன் இந்த மணப்பிரிவுகள். இதற்கு என்னவெல்லாம் காரணமாகிறது என்று பார்க்கலாம். 

1. பெண்ணின் வாழ்வியல் முறைகள் மாறிப்போனது.
2. பெற்றோரின் எதிர்பார்ப்புகள் திசைமாறியது.
3. நொடிகளையும் பேரம் பேசும்  பொருளாதாரம்
4. எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு தரும் வாழ்வியல் சிந்தனைகள்.

     ஒவ்வொன்றாக பிரித்து பார்க்கலாம்.  எல்லா திசையிலும் அலசினால்தானே ஒரு முடிவிற்கு வரமுடியும். ஒரு விசயம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆண்கள் வாழ்வியல் முறைகள் பற்றி குறிப்பிடவேயில்லை என்று தோன்றுகிறதுதானே. அவர்கள் மாறினாலும் மாறாவிட்டாலும் முடிவெடுப்பதில் அவர்கள் பங்களிப்பு எதுவுமே இல்லை. இந்தத் தொடரின் முடிவில் இதனை நிருபித்துவிடுவேன் என்று நம்புகிறேன். அடுத்த பதிவில் இன்னும் விளக்கமாக...


குழந்தைகள் தினத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர் எல்லையில்லாமல் விரிவடைய வேண்டும் என்று விரும்புகிறேன். என்னை இந்த தொடர் பதிவு எழுத அழைத்த சைலஜா மேடம் அவர்களுக்கு மிக்க நன்றி. இந்த தொடர் பதிவுகள் மனிதச்சங்கிலி போல மனச்சங்கிலியால் பிணைத்து அழுத்தமாக ஒரு விசயத்தை சொல்ல வைக்கின்றன. கடலென விரியும் பதிவுகளில்  நம்முடைய கருத்தை பதிவதிலும் ஒரு மகிழ்ச்சி வரவே செய்கிறது.


இந்த பதிவை எழுத ஆரம்பிக்கும்போது... இதோ வீட்டின் வாசல் கதவு தட்டப்படுகிறது. புரியாத மழலை மொழியில் என்னுடைய ஒன்றரை வயது சினேகிதன் - பக்கத்துவீட்டு சாச்சு - அழைக்கிறான். கதவை திறக்கவுமே உள்ளே வந்து அமர்ந்து கொள்கிறான். வீட்டில் வேறு யார் இருந்தாலும் உள்ளே வரமாட்டான்.  அவன் பாட்டியின் குரலையும் மறுத்துவிட்டு உள்ளே வருகிறான். இனிப்பு வகைகள், ரொட்டி எதுவுமே அவனுக்குத் தேவைப்படாது. அவனுக்குத் தேவை சில படங்கள் அவற்றை பற்றிய விளக்கங்கள். விலங்குகளின் படங்களைக் காட்டி ஒலியை நான் எழுப்பிக் காட்டவும் அவனும் செய்கிறான். சற்று பொறுத்து படத்தை சுட்டிக் காட்டி அவனாகவே ஒலியெழுப்புகிறான். கிளி உறுமுகிறது... சிங்கம் கீச்சிடுகிறது... மீண்டும் என்னை செய்ய சொல்வதுபோல் சைகை செய்ய, நான் சரியாகவே ஒலியெழுப்புகிறேன். தவறாக செய்யும் மக்குப் பையனை பார்ப்பது போல் கேலியாக என்னைப் பார்க்கிறான்.

இது அவனுடைய உலகம். நான்தான் அந்த உலகத்திற்குள் இழுக்கப்பட்டுள்ளேன். இங்கு அவன் சொல்வதுதான் சரியாக இருக்கும். அடுத்த முறை அவனுடைய அலைவரிசைக்கு செல்ல முயற்சிக்கிறேன். இந்த முறை அவனுடைய கோட்பாட்டின்படி நான் சரியாக செய்துவிட்டேன்.  அடுத்த ஒரு மணி நேரம் கழித்து உறக்கம் வந்த கண்களுடன் அவன் சென்றபோது என்னுடைய உலகம் மிகவும் புத்தம் புதியதாக பூத்திருந்தது. அதுதான் அவர்கள் உலகம். அந்த உலகத்திற்குள் செல்ல அவர்களுடன் சேர்ந்து பயணிக்கத் தெரிந்தால் மட்டுமே அனுமதி கிட்டும். அவர்கள் கை நீட்டும் திசையில் பறக்கத் தயாராக இருக்கும் மனம் மட்டுமே அங்கே உயிர்ப்புடன் இருக்கும்.

அதுவும் இப்போது தொலைகாட்சியின் காலத்தில் அதிகம் புரிந்து கொண்டு மழலையின் எண்ணங்களுடன் அவர்கள் சிந்திக்கும் வேகம் இருக்கிறதே மிக அதிகம். நீர் நிறைந்த வாளியில் விழுந்துவிட்ட ஒரு பொம்மையை எடுத்துக் கொண்டு 'செத்துப் போயிட்டியே' என்று மூன்று வயது அம்மு அழுதபோது நானும் சோகமாக அமர வேண்டியதாகிவிட்டது. அவர்களுக்கு அனைத்தும் புரிகிறது. அவர்களுடைய மன நிலையில் அதனை எடை போடுகிறார்கள் முடிவெடுக்கிறார்கள்.

சில சமயம் நம்முடைய உலகம் சுயநலம் கருதி அவர்களை மிகவும் சிரமப்படுத்துவதை உணரும்போது வலிக்கிறது.

    - பள்ளி விழாவில் பாரதி வேடம் போட்ட மூன்று வயது சிறுவன் கூட்டத்தை பார்த்து பயந்து கண்களில் நீர் வழிய நின்றபோது.
    - ஒரு தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியில் அருமையாக மழலையில் பாடிய மூன்று வயது சிறுமி சிவப்பு விளக்கு எரிந்தபோது அழ ஆரம்பித்தது.
    - கடுமையான தட்பவெப்பம் நிலவும் நம் நாட்டில்  பல அடுக்குகளாக உடை உடுத்திக் கொண்டு பொம்மைபோல வலம் வரும் குழந்தைகள் - சொல்ல முடியாமல் சிணுங்கும்போது..
    - வீட்டில்கூட ஹக்கிஸ் அணிந்திருக்கும் குழந்தைகள்
    - பெரியவர்களை தவிர்த்து பொம்மைகளுடன் மட்டுமே ரகசியம் பேசி உறங்கிப் போகும் குட்டி தேவதைகள்..

மழலை உலகம் மகத்தானதுதான். அவர்களுடன் மலை முகடுக்களில் மேகம் போல மிதக்கவும், கைக்கு கிட்டிய கண்சிமிட்டும் விண்மீன்களாக மாறவும், கண்ணை கரிக்காத நீரலைகளாக கால்களை வருடிச்செல்லவும், பூத்தூவல்களாக பனிப்பொழிவுகளை நிகழ்த்தவும் நாம் தயாராக இருந்தால் இருவருக்குமே மகத்தானதுதான்.


துல்லியமான ஒலிகளைக்கூட உணரக்கூடிய மின்தடை ஏற்பட்ட மதியங்களில் சிலவீடுகளில் ஒலிக்கும் மழலையின் சிணுங்கல் குரல்களும் மிரட்டும் அதிகார குரல்களும் எனக்குத் தெரிவிக்கும் செய்தி ஒன்றுதான். வாழ்க்கையின் நிதர்சனங்களால் ஒரு அழகான உலகத்தை விட்டு வெளித்தள்ளப்பட்ட நாம் அவர்களையும் வெளியே இழுக்கப் பார்க்கிறோமா? நம்மை விட விரைவாகவும் அழுத்தமாகவும்..... விளக்குங்களேன்.

உலகம் உயிர்த் துடிப்புடன் இருப்பது குழந்தைகளின் நகர்வுகளால்தான். மிக மெதுவாக இருந்தாலும்.... அது இல்லாத உலகம் வெற்று பூமிதான். இதோ என் கவிதை ஒன்று படியுங்கள்.
 

பூஜ்ஜியங்கள் பூக்குமா? .


நான், டாமி, பொம்மி, அம்மா
குட்டிப்பாப்பா, மிட்டாய்கள்
வண்ண வண்ண பலூன்கள்..
ஏதோ ஒரு நாளில் ....
என் உலகம் கலைந்தது.
கனவு கரைய மனம் கனக்க
ஒன்றுமில்லாத வெறுமையில்
வெற்றிடத்தின் குறியீடாக
பூஜ்ஜியங்கள் பதிக்கப்பட்டன.
நாட்கள், மாதங்கள், வருடங்கள்
கடந்துவிட்ட மற்றொரு நாளில்
குட்டி தேவதையின் பரிட்சயம்
அழுகையிலும் சிரிப்பிலும்
குட்டி விண்மீன் பார்வையிலும்
என்னுள் உயிரற்று இருந்த 
பூஜ்ஜியங்கள் முளைவிட்டு
பூப்பூக்க ஆரம்பித்துவிட்டன.

  சைலஜா மேடம் சொல்லியபடி , இது தொடர்பதிவு என்பதால் 2ஆண்பதிவர்கள் இரண்டு பெண் பதிவர்களை  அழைக்கிறேன். முடிவில் கவிதை ஒன்று எழுதலாம்.! முடிந்தால் புதிர்க்கேள்வியையும்  எழுப்பலாம்.

இப்போது நான் அழைப்பவர்கள்...
குழந்தைகளுக்கான வலைப்பூ வைத்திருக்கும் சிறுவர் உலகம் காஞ்சனா மேடம்.
உணர்வுபூர்வமான கவிதைகளை எழுதும் கீதமஞ்சரி கீதா.
மனம் தொடும் கவிகள் எழுதும் வசந்த மண்டபம் மகேந்திரன் 


வெவ்வேறு களங்களில் சிந்தனை பதிக்கும் தோழர். சூரியஜீவா
                                                   மிக்க நன்றி!

டெல்லி விமான நிலையத்தில் நுழைந்தது முதல் விமானத்திற்குள் சென்று இருக்கையில் அமரும்வரை, வசுமதிக்கு எதுவுமே கவனத்தில்படவில்லை. அவள் கணவர் செழியன் அவளிடம் குனிந்து, "மன்னிச்சுக்கோம்மா, நம் இருவருக்கும் அருகருகே இருக்கை கிட்டவில்லை. நான் அந்த இரண்டாவது வரிசையில் சன்னலோரத்தில்தான் அமர்ந்துள்ளேன். சென்னை வரும்வரை, அமைதியாக உறங்க முயற்சி செய்." என்று கூறிவிட்டு சென்றார். ஒதுக்கப்பட்ட இருக்கையை மாற்றிக் கொள்வது இங்கு சற்று நாகரிகம் இல்லாத விசயமாக கருதப்பட்டதால் அதனைச் செய்ய முடியவில்லை போலும். சற்று பொறுத்து, அவளருகே ஒரு வயதான பெண்மணி அமர்ந்ததும் நிம்மதியாகப்பட்டது. இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள். அம்மா...! கண்கள் கலங்கின.

"அம்மாவிற்கு ரொம்பவும் சரியில்லை. சாப்பிட்டு ஒரு வாரமாகிறது. மருத்துவர் நம்பிக்கையாக எதுவும் சொல்லவில்லை." இ
ன்று காலை, அதிசயமாக அவளை அலைப்பேசியில் அழைத்த சுந்தரண்ணா பேசியபோது ஒருவித படபடப்பு உண்டானது. கிட்டத்தட்ட பதினேழு வருடங்கள் கழித்து அண்ணனின் அழைப்பு அவளை பயப்படுத்தியது. அண்ணன் தொடர்ந்து,

"இப்போதும் உன்னை வா என்று அழைக்க எனக்கு விருப்பமில்லை. ஆனால் திடீரென்று கண்கள் விழித்து சுற்றியுள்ளவர்களை பார்வையால் சலித்து ஓய்ந்துபோய் மறுபடியும் கண்களை மூடிக்கொள்வதை பார்த்தால், அவர்கள் உன்னைத்தான் தேடுவதுபோல உள்ளது. எனவேதான்....." என்று கூறியதில் உள்ளம் ஒப்பாமையும், கடந்தகால கசப்பும் தெரிந்தன. விதைத்தவள் அவளே, இப்போது அறுவடை நேரம். கைக்கு கிட்டுவதை மறுக்க முடியாது.

 பதினேழு வருடங்களுக்கு முன், கல்லூரிக்கு சென்ற ஒரு மழை நாளில் செழியனின் கையினை பிடித்துக் கொண்டு உறவுகளை உதறிவிட்டு ஊரை விட்டு வந்துவிட்டாள். இருவர் வீட்டிலும் திருமணத்திற்கு ஒப்புதல் இல்லை என்ற காரணம் மட்டுமே.  செழியன் இராணுவத்தில் இருந்ததும், அவனுக்கு மாமாவின் பெண் தயாராக இருந்ததும் முக்கிய காரணங்கள். கொஞ்ச நாள் கட்டாக்கில் இருந்த பின் டெல்லிக்கு மாற்றம். வினி அங்கேதான் பிறந்தாள். அதுவரை ஒரு குருவிக்கூட்டின் தனிமை போல அவளும் அவள் கணவனுமாக வாழ்ந்த வாழ்க்கையில் வினிகுட்டியின் வருகை, அவளுக்கு அன்னையின் நினைவினை மீட்டுத் தந்தது, அப்போது திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் கழிந்திருந்தன. அவளுடைய பிறந்த வீட்டிற்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்ட போது அம்மாதான் எடுத்தது. வசுவின் குரல் கேட்டதும், மறுமுனையிலிருந்து பதில் எதுவும் கேட்கவில்லையெனினும் தொடர்பு துண்டிக்கப்படாதது புரிந்தது. இறைவனிடம் பாவமன்னிப்பு பெறுவதுபோல் அவள் மட்டுமே பேசினாள். மன்னிப்பு வேண்டினாள். அடுத்தடுத்து அவள் அப்படியே பேசினாள். மாலை வேளையில் விளக்கேற்றி வைத்து இறைவனிடம் மனமுருக பிரார்த்திப்பது போன்ற ஈடுபாட்டுடன் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பேசினாள். அவளை பற்றி, செழியனை பற்றி, வினியை பற்றி சில சமயம் டெல்லியின் வானிலை மாற்றங்களைக்கூட பேசுவாள் - பதில் கிட்டாவிடினும் அவள் நிறுத்தவில்லை.

 "உன்னுடைய அழைப்பு என்று தெரிந்த உடனேயே வீட்டை பூட்டிட்டு கிளம்பியிருக்கப்போறாங்க." என்று செழியன் கேலி செய்த போதும் அவள் விடவில்லை. அவளுக்கு அம்மாவை பற்றித் தெரியும். வசுவுடைய அன்பு பற்றி அம்மாவிற்கும் தெரியும் என்று நம்பினாள். ஒரு மகாசக்தியாக அன்னையை அவள் நினைத்தாள். அம்மாவின் கடந்த கால உழைப்பு தெரியும். அந்த உழைப்பிற்கு அடிப்படை அன்பு என்கிற மந்திரம் மட்டுமே. செழியனுக்காக எதை வேண்டுமானாலும் விட முயன்ற வசுவால் அன்னையின் அன்பை விலக்க முடியவில்லை. தொடர்ந்து முயற்சித்தாள். எப்போதாவது கோபம் குறையுமல்லவா?

இறைவனுக்கு என்மேல் கோபம் என்று மனிதன்தான் நினைக்கிறான். இறைவன் எப்போதும் தன் குழந்தையின் அன்புக் குரலுக்காக காத்திருக்கிறான், அது போலத்தான் அன்னையும். தன் கை வருடலில் இல்லாத குழந்தைக்காக பரிதவிக்கிறாள் என்பதை ஒரே ஒரு தொலைப்பேசி அழைப்பு புரிய வைத்தது.. அது ஒரு அக்டோபர் மாதம். அன்றைக்கு டெல்லியில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருந்தது. .வசுவிற்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது.. வழக்கம்போல அமைதி பாராட்டாமல், "எப்படி இருக்கே. குழந்தை நல்லாயிருக்கா? மாப்பிள்ளை எங்கேயிருக்கார்?" பதற்றத்துடன் ஒலித்த அம்மாவின் குரலுக்கு பதில் சொல்ல, இந்த முறை அவளால் முடியாமல் போய்விட்டது. கலங்கிய குரலில் பாதுகாப்பான நிலையை விவரித்தாள். அதற்குப்பிறகு ஒரு பக்கமாக மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருந்த தொலைப்பேசி போக்குவரத்து இரண்டுபுறமும் தொடர்ந்தது. அண்ணனின் திருமணம், பேரன் பிறந்தது என பிறந்த வீட்டை பற்றிய செய்திகள் அவளுக்கு கிட்ட ஆரம்பித்தன. ஆனால் வேறு யாரும் அவளிடம் பேசவில்லை. ஒரு தண்டனைபோல அவளும் அதனை ஏற்றுக் கொண்டாள். அம்மாவிடம் பேசாமலிருப்பது, அம்மாவிற்கே தண்டனையாகிவிடும் என்பதால்தான் மௌனம் கலைத்தது. 
 

ஆயிற்று பதினைந்து வருடங்கள் கடந்தபின் , சமீபத்தில்தான் ஒரு முறை அண்ணி பேசினாள். அம்மாவிற்கு உடல் நலமில்லை என்று மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் தெரிவித்தாள். அதன் பிறகு இன்று காலைதான் அண்ணன் பேசினார். வசுமதியின் பதட்டத்தை புரிந்து கொண்ட செழியன் உடனடியாக சென்னைக்கு விமானத்தில் செல்ல ஏற்பாடுகள் செய்தார்.

விமான நிலையத்தில் காத்திருந்த இடைப்பட்ட நேரத்தில் வசுவின் எண்ணங்கள் அன்னையை சுற்றியே வந்தன. "அவங்களுக்கு சந்தோஷமா ஒரு வேளை சாப்பாடுகூட போடவில்லையே, செழியன். இங்கே வரவச்சு காசிக்கு
கூட்டிட்டு போகணும்னு நினச்சேனே. எதுவுமே முடியாமல் போய்விடுமோ? எனக்காக இன்னும் கொஞ்ச நாள் கடவுள் அவர்களை உயிருடன் வைத்திருந்தால், என்னோட ஆசைக்கு அவங்கள கூட்டிட்டு வந்து சீராட்டுவேனே". பதினெட்டு வருடங்களுக்கு முன் தன் வாழ்க்கையே முக்கியம் என்று சொல்லித்தந்த மனம் இப்போது வேறு பாட்டை பாடியது.

செழியனை மட்டும் ஏற்றுக் கொண்டிருந்தால் விலைமதிக்க முடியாத அன்பினை இழந்திருக்க மாட்டாளே? அப்படியென்ன காதல் மிக முக்கியமாக போய்விட்டது. இதனை செழியனிடமே சொல்லி வேறு புலம்ப, பதில் பேச முடியாமல் அவள் தலையினை வருடிக் கொடுத்தார்.. "ஏம்ப்பா, அப்புறம்கூட அம்மாவிடம் பேச ஆரம்பித்தபின் அவங்கள பார்க்க போகணும்னு தோணலியே. ஏன்?." என்றாள். அவளே தொடர்ந்து "அவங்க கூப்பிடனும்னு எனக்கு ஒரு திமிர் இருந்திருக்கும்போல. அவங்க கூப்பிட்டா போகலாம்னு ஈகோ இருந்திருக்குமோ? ஆனால், அவங்களும் கூப்பிடலையே?".

"இல்லைடா, அண்ணன், அப்பா எல்லோரையும் கலந்துதானே அவங்க முடிவெடுக்க முடியும். குடும்ப நிம்மதி முக்கியமில்லையா?" என்று பதில் கூறினார். மேலும் அவளை புலம்ப வைக்காமல் விமானம் வந்துவிட, இருக்கையில் அமர்ந்தவுடன் அமைதியானாள்.

"சீட் பெல்ட் போட்டுக்கம்மா" அருகிலிருந்த பெண்மணியின் குரலில் நினைவுகள் கலைந்து நிமிர்ந்தாள். பெல்ட்டை அணிந்து கொண்டு மௌனமாக இருந்தவளிடம் "சென்னைக்கா? அங்கிருந்து வேறு எங்காவது செல்ல வேண்டுமா?" புன்சிரிப்புடன் கேட்டார் அவர். அவரை நிமிர்ந்து பார்த்தவளுக்கு மிகவும் பழக்கப்பட்ட முகமாக அவர் தெரிந்ததால் தயக்கமின்றி பதிலளித்தாள். "சென்னைக்குதான். செயிண்ட் தாமஸில் அம்மா வீட்டிற்கு செல்ல வேண்டும்" அவளிடம் மிகவும் பிரியமாக நடந்து கொண்ட யாரையோ நினைவுப்படுத்திய முகச்சாயல் அவரிடம் இருந்தது - அது அவளுடைய கணித ஆசிரியையின் சாயல்…!

"நான் சென்னை சென்று காஞ்சிபுரம் செல்ல வேண்டும்." அவள் கேட்காமலேயே கூறினார். "அம்மாவிற்கு உடல் நலமில்லையா? " வசு, 'அம்மாவீடு' என்று உச்சரித்த போது வந்த தடுமாற்றத்தை கவனித்ததால் சரியாக கேட்டுவிட்டாரோ? அவள் தலையசைத்து ஒப்புக் கொள்ளவும்,

"எத்தனை வயதிருக்கும்?" என்றார். கணக்கிட்டு "அறுபது இருக்கும் " என்றாள்.

"உடல் நலமில்லையா?"  மேற்கொண்டு அவர்களிடையே பேச்சு தொடர்ந்தது. வசுவின் முட்டாள்தனம், வேண்டுதல், புலம்பல் அத்தனையும் கேட்டபின் அவர் சொன்ன  விசயம் அவளுக்குப் புரியவில்லை.

"நாம் விரும்பும் ஒன்று நம்மைவிட்டுப் போகப்போகிறதே என்ற நிலை வரும் போதுதான் மனம் அடித்துக் கொள்ளும். இதைச் செய்திருக்கலாமோ? அதைச் செய்திருக்கலாமோ என்று புலம்பும். நம்முடைய நட்டக்கணக்கை பெரிதுபடுத்திக் காட்டும். ஆனால் நமக்கு ஒருவரிடம் உண்மையான அன்பு இருக்கும் பட்சத்தில் அவர்களை வருத்தப்படுத்த விரும்பமாட்டோம். நம்முடைய வேண்டுதல்கள் எல்லாம் அதன்பின் மாறிவிடும். அவர்களின் உண்மையான நிலையை புரிந்து கொள்ள முயற்சி செய்யம்மா. சில சமயத்தில் நம்முடைய சுயவிருப்பத்தை அழித்து, விட்டுக் கொடுப்பதுகூட ஒரு தவம்தான் அதுவே அன்பிற்குரியோருக்கு தரம் வரமாகும்" என்றார். அதற்கான சரியான விளக்கத்தை தெரிந்து கொள்ளும் முன் சென்னை வந்து விட்டது.

 வசுமதிக்குத்தான் வயதாகிவிட்டது சென்னைக்கு வயது இறங்கிவிட்டிருந்தது. அது இளைய தோற்றம் பெற்றிருந்ததை அவளுடைய மனநிலை சரிவர கவனிக்க விடவில்லை. அம்மா வீட்டின் முன் தோற்றம் கூட மாறிவிட்டிருந்தது. வீட்டின் வாசலிலேயே சுந்தரண்ணா  நின்றார்.

"வாம்மா, வாங்க" என்று உள்ளே அழைத்து சென்றார்.   அம்மா படுத்திருந்த  அறைக்கே உடனடியாக சென்றனர். வாயில் துண்டை பொத்திக் கொண்டு வெளியேறிய அப்பாவின் நடையில் தளர்வு இருந்தது. செழியன், சட்டென அவரை நோக்கி கை நீட்ட தயக்கம் ஏதுமின்றி பற்றிக் கொண்டார். இருவரும் வெளியேற படுக்கையின் அருகிலிருந்த நாற்காலியில் அவளை அமர சொன்ன சுந்தரண்ணன் "அவங்க பக்கத்திலேயே அமைதியா இரு..  கண் முழிச்சு பார்க்கறப்போ பேசு." என்றார்.

தலையசைத்துவிட்டு, அன்னையின் அருகில் அமர்ந்து கைகளை மென்மையாக பிடித்துக் கொண்டாள். வாய்விட்டு பேசாவிடினும் மனம் பேசியது "அம்மா, நல்லாயிருக்கியாம்மா?. நான் நல்லாயிருக்கேன். செழியன்கூட சொல்வார் உங்கம்மா உன்னை நல்லபடியா வளர்த்திருக்காங்கன்னு. எல்லாம் நீ கற்றுக் கொடுத்ததுதாம்மா? எங்கிட்ட பேசும்மா" அந்த இடத்தில் இறுக்கமான அமைதி மட்டுமே நிலவியது.

சற்று பொறுத்து உள்ளே வந்த ஒருவர் "வாம்மா, நீதான் டெல்லியிலிருக்கிற பொண்ணா? அம்மாட்ட பேசுனியா?" என்று விசாரித்தார். " அம்மாவை செக் பண்ணனும், வெளியே சற்று காத்திரம்மா" என்று கூறிவிட்டு தன் பரிசோதனையை ஆரம்பித்தார்.

"வா வசு. காபி குடி." என்று அழைத்த நடுத்தர வயது பெண்மணிதான் அண்ணி என்று புரிந்து கொண்டாள். அனைவரும் முன்னறையில் அமர்ந்திருந்தனர். அதற்குள் செழியன் அனைவரிடமும் தயக்கமின்றி உரையாட ஆரம்பித்துவிட்டது புரிந்தது. அப்பாவின் அருகில் அமர்ந்திருந்த செழியன் பேசுவது அவளுக்கு கேட்டது. "எப்போதும் அவளுக்கு உங்களுடைய நினைவுகள்தான். மாமா. அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி என்று சொல்லிக் கொண்டேயிருப்பாள். ரொம்பவும் அன்பு வைத்திருக்கிறாள். உங்களுக்கு ஒரு முறை உடல் நலமில்லாமல் போனபோதுகூட மலைக்கோவிலில் வேண்டிக்கொண்டு விரதம் இருந்தாள். இப்போதுகூட அத்தைக்காக நிறைய வேண்டுதல்கள் செய்து இருக்கிறாள். நான்தான் ஒரு அழகான குருவிக் கூட்டை பிரித்துவிட்டேனோ என்று கவலைப்படுகிறேன்"

"இல்லை அத்தான், நான்தான் பிடிவாதமாக இருந்துவிட்டேன். உங்களை பார்க்கவும்தான் எனக்கு அது புரிகிறது. எங்களை வேண்டாம் என்று ஒதுக்கியவள்  முகத்தில் எப்படி விழிப்பேன் என்று கூறியே கெடுபிடி செய்தேன், இப்போது பாருங்கள் நாம் சந்தித்துக் கொள்வது அவ்வளவு ஒன்றும் கடினமாக இல்லை. அம்மாவிற்கு வசுவென்றால் மிகவும் பிரியம்." இது சுந்தரண்ணாவின் பதில். வசுவிற்கு சட்டென மனம் வலித்துப் போயிற்று. அதேபோல்தான் அவளும் கடக்க முடியாத சந்தர்ப்பம் என்று அதனை நினைத்திருந்தாள். அவள் நினைத்ததை செழியன் கூறிக் கொண்டிருந்தார்.

"இத்தனை வருடம் கழிந்த பின்பும் பிரியம் இருப்பதை புரிந்து கொள்ளமுடிகிறது. ஒரு நெருப்பு வளையத்தை தாண்ட பயந்து நெருப்பிற்குள்ளேயே வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்திருக்கிறோம். இடையில் வினி பிறந்த பின்பாவது வந்திருக்க வேண்டும். எது நடந்தாலும் அதனை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. நிறைய அழகான சந்தர்ப்பங்களை இழந்துவிட்டோம்" செழியன் கூறியதை ஆமோதித்து அவள் அப்பா தலையசைத்தார். "பாவம், மீனாட்சி. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல், எங்களுடைய கோபம் கண்டு அன்பை மறைத்து.. " ஒரு இறுக்கம் மெல்ல விடைபெற்ற சமயம் மருத்துவர் வந்தார்.

"சுந்தர், ரொம்பவும் உடல் ஒத்துழைக்க மாட்டேங்கிறதுப்பா. ஊசி மருந்தை ஏற்றுக் கொள்ளாமல் வெளித்தள்ளுகிறது" உதட்டை பிதுக்கிய வேகத்தில் புரிந்து போனது. அவசரமாக சுவற்றிலிருந்த முருகனை பார்த்த வசுவின் தோளில் கை வைத்து "வேண்டாம் வசு, வேண்டிக் கொள்ளாதே" என்ற அண்ணனை, வியப்பாக பார்த்தாள்.

மருத்துவர் சென்றபின் அவளை முன்வாசலுக்கு அழைத்து வந்து, "வசு, இது ரொம்பவும் மோசமான நிலையம்மா. அப்பாவிற்கே புரிந்துவிட்டது பார். நீ அம்மாவிற்கு விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. இதற்குமேல் அந்த உடல் தாங்காது. அவங்களை நல்லபடியாக அனுப்பி வைக்க வேண்டும்மா. மனதை தேற்றிக் கொள்" என்றார். மௌனமாக வசு நிற்கவும் சுந்தரண்ணாவே தொடர்ந்தார்.

"அவங்க நல்லா வாழ்ந்தவங்க, வசு. எந்த வேதனையும் இல்லாமல் அவங்களை அனுப்ப வேண்டியது நம்முடைய கடமைம்மா. நமக்கும் ஆகாதவங்க என்று சிலர் இருக்காங்க. மீனாட்சியம்மாவுக்கு பத்து நாளா இழுத்துக்கிட்டே இருக்காம். என்ன பாவமோ என்றெல்லாம் பேசறாங்க வசு. உனக்கே தெரியும் எத்தனை சிரமத்திலும் நம்மை நல்லபடியா வச்சிருந்தாங்க. அவங்களை சிரமப்படுத்த வேண்டாம். மனதை தேற்றிக் கொள்ளம்மா?" என, அவருடைய பேச்சு வசுவிற்கு அதிர்ச்சியளித்தது. மௌனமாக நின்றாள்.
                         ------------------------------             ---------------------            --------------------------

மேலும் இரண்டு நாட்கள் கழிந்துவிட்டன. அம்மாவின் உயிர் ஊசலாடியது புரிந்தது. எப்போதாவது கண் விழிக்கும்போதும் அருகிலிருந்த வசுவை கண்டு கொள்ள முடியாமல் போனது. உணரும் நிலையிலும் அவர் இல்லை. அண்ணன் அவளை வெளியே வரச்சொல்லி சைகை செய்ய அறையை விட்டு வெளியே வந்தாள்.

"வசு, ஜோசியர் என்ன சொல்றாருன்னா நளைக்கு பிரதோசமாம், தயிர் சாதம் அன்னதானம் செய்துவிட்டு சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டால்..." மேற்கொண்டு அவர் சொல்ல வருவதை தடுத்து "என்ன சொல்லனும்ண்ணா? எங்கம்மாவை கூட்டிட்டு போன்னா? அதுக்குத்தான் ஊரிலிருந்து வந்தேனா?” குமுறினாள்.

"வசு, உடல் இதற்கு மேல் தாங்காதம்மா.  நிலமையை புரிந்து கொள்ளம்மா. நாம் இருவரும் வேண்டிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். தயவு செய்து..." பதில் பேசாமல், சட்டென அறைக்குள் சென்றுவிட்டாள். அம்மாவை அனுப்பி வைப்பதற்கு, அவளுடைய ஒப்புதலையும் பெறுவது சாஸ்திரத்திற்குத் தேவைபடுகிறதுபோல. அதற்குத்தான் அவளை வரவழைத்திருக்கிறார்கள். ஒரு போதும் அவளால் முடியாது.

அம்மா அவளுக்கு சக்தி வடிவம்தான். அவளுடைய குடும்பம், விவசாயம் பொய்த்துப்போய் கிராமத்திலிருந்து நகரத்திற்கு குடிபெயர்ந்தபின் ஒரு மாடிவீட்டின் ஓரறையில் குடித்தனம் இருந்தது. அப்படிப்பட்ட வசுவின் குடும்பம் நகரத்தில் சொந்த வீடு வாங்கும் அளவிற்கு திட்டமிட்டு உயர்த்தியது அம்மாதான். தன் உழைப்பு மட்டுமல்லாது கணவனின் உழைப்பையும் வீண் செய்யாமல் எதிர்கால முன்னேற்றத்திற்கான படிகட்டுகளாக மாற்றியதும் அவள்தான். அன்பு மட்டுமே அவளின் ஆயுதம், மூலதனம், உயிர் மூச்சு. அப்படிப்பட்ட அம்மாவை விட்டுக் கொடுக்க வசுவால் முடியாது.

தீர்மானமாக நினைத்துக் கொண்டு அம்மாவின் அருகில் அமர்ந்திருந்தவளின் பார்வையில் அன்னையின் உடல் நீல நிறமாக மாறுவது தெரிந்தது. அவசரமாக அவள் அழைப்பில் உள்ளே வந்த அண்ணன் "உடல் தன்னுடைய வாழ்நாளை முடித்துக் கொள்ளுவதன் அறிகுறி. கொஞ்சம் கொஞ்சமாக அழுக ஆரம்பிக்குதுடா." என்றார்.  அழுகுவதா? இனி என்ன ஆகும்.... திகைத்து பார்த்த அவள் விழிகளில் தந்தையின் இறைஞ்சுதல் பார்வை பட்டது. எல்லாமே கைவிட்ட நிலையில் இறுதி கட்ட போராட்டம் புரிந்தது "சரி, அண்ணா" என்றாள்.

அதன்பின் அம்மாவின் அறையிலேயே அமர்ந்துவிட்டாள். வாழ்வதற்கு போராடிய அம்மா, இறப்பதற்கும் போராடுகிறாள். ஒரு விசயம் புரிந்தது. வசுமதி தன்னுடையதாக நினைக்கும் ஒரு விசயம் அம்மாவுடையது. முடிவு எடுக்கும் உரிமையும் அம்மாவுடையதுதான். அவளுடைய மௌனம் கூக்குரலாக அம்மாவிற்கு புரிகிறது. பாலிற்கு அழும் கன்றைவிட்டு செல்ல மறுக்கும் தாய் பசுவைப்போல, வசுவை விட்டு செல்ல முடியாமல் தவிக்கிறாள்.  விமானத்தில் உடன் வந்த பெண்மணி சொன்ன "சில சமயத்தில் சுயவிருப்பத்தை அழித்து, விட்டுக் கொடுப்பதுகூட ஒரு தவம்தான்" வார்த்தையின் விளக்கம் புரிந்தது.

ஆனாலும் தாயின் மரணத்திற்காக வேண்டி நிற்பது, பெற்ற குழந்தையை கூர்வாளால் வெட்டச் சொன்னபோது தாய் மனம் பட்டபாட்டிற்கு சற்றும் குறைந்தது இல்லையே? வேண்டுதலினாலோ அல்லது வேறு ஒன்றினாலோ இறுதி மூச்சு நின்றாலும் காலமெல்லாம் அவள் இதயத்தில் ஆணியடித்து நின்று இரத்தம் வழிய வைக்காதா?. இது அவளுக்கு  ஆயுள் தண்டனையாகிவிடாதா? அந்த பூஜையில் அமர்வது கூரிய முட்படுக்கையில் அமர்வதற்கு ஒப்பாதோ?


எண்ணங்களின் வலுவான தாக்குதல்களை தாங்க முடியாமல், அறையைவிட்டு வெளியேறி பூஜையறைக்குள் வசுமதி சென்றாள். வேலோடும் மயிலோடும் நின்று கொண்டிருந்த முருகனிடம் "என்னால் எப்படி சொல்லமுடியும் முருகா?. எங்கம்மாவை விட்டுத்தர என்னால் முடியாது. எதிரிக்கு கெடுதல் செய்வதையே ஒப்பாத மனம், எப்படி இதனை வேண்டும்?. இப்போதைக்கு அது சரியாக இருந்தாலும் காலமெல்லாம் என் வேண்டுதல் மனதில் கத்தி போல அறுக்குமே. பட்டணத்தார் சொன்னது போல கொன்று கொன்று தின்றேனா?  அல்லது தின்று கொன்றேனா? என் பாவம் இன்னும் தீரவில்லையா?' என்று கதறினாள்.  சற்று நேரத்தில் அவளுடைய கதறலையும் மீறி அம்மாவின் அறையிலிருந்து அழுகுரல்கள் எழுந்தன. ஒரு உயிர்ப் பறவையின் விடுதலையை அது கூறியது.  இறந்தபின்பும் தன் மகவிற்காக துடிக்கும் தாய்மை, வசுவின் வலியை புரிந்து கொண்டதோ? உணவாகவோ பாலாகவோ மட்டுமல்ல தன் மரணத்தை வரமாக தந்துகூட குழந்தையை சீராட்ட தாயால்தான் முடியும்.




முகச்சுளிப்புடன் வெளியான
சில வார்த்தைகளின் கசப்பு
அறையில் நிரம்பி வழிந்து
வானம் வரை நிறைக்கிறது.
விழி உயர்ந்த பார்வையில்
கூச வைக்கிறது வெறுப்பு !
மேக தேவதை கை வீசி
மழை பொழிய வைக்க,
சில வார்த்தைகள் கரைந்து
வீட்டின் மேலேயே விழ
முடிந்துபோன அத்தனையும்
மறுபடியும் ஆரம்பிக்கும்
பயம் வர, நல்ல வேளையாக
சேமிக்கப்படாத மழை நீர்
குழாய் வழியாக வழிந்து
வீதியில் ஓடி கலக்கிறது.

இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு வலைச்சரத்தின் பொறுப்பாசிரியராக பணியேற்கிறேன். அங்கே சந்திப்போம்.

வலைச்சரத்தின் தலைப்பு

 
வழக்கம் போலவே உங்களுடைய ஆதரவினை எதிர்பார்த்து செல்கிறேன்.



ஒரு வாரம் கழித்து சந்திப்போம். நன்றி.
அன்புடன்
சாகம்பரி

உயிரை பற்றிய கவலை
தனிமையில் தொக்கி நிற்க
இருட்டு மூலையில்
மனம் மாயசக்தி தேடி
மரணத்தை வென்றிடவே
மன்றாடி வேண்டி நின்றது..
அபயம் கிட்டும் நொடிக்காக
கால்வலிக்க காத்து நின்றது.
இப்படியே போன ஒரு நாளில்
எதுவுமே இல்லாத சூன்யத்தில்
இறுதி நியாயம்  உரைத்தது
'இனி நான் மட்டும்தான்'

எனக்கான என்னுடைய
போராட்டம் ஆரம்பித்திட
உயிர் வாழ்தலின் தத்துவ
ரகசியம் புரிய வருகிறது.
எதுவும் நிலையானதுமில்லை
எதுவும் கிட்டாததும் இல்லை.
ஏனெனில்
ஒன்றை அடித்து
மற்றொன்று உயிர்வாழும்
உயிர் சங்கிலியில் நான்
முதலிடத்திலும் இல்லை
கடைசி இடத்திலும் இல்லை..


வெற்றியோ....! தோல்வியோ.....!
ஏனோ சில சிறிய பயணங்களை
உலகம் கவனப்படுத்துவதில்லை!


மழைவிட்ட  பகல் வேளையில்
சாலையை கடக்க யத்தனிக்கும்
இரயில் பூச்சியின் முயற்சியாக
வாழ்க்கையின் மறுபக்கம் தேடிட
ஊர்தலின் வேதனை தொடங்கியது.
விதவிதமான சக்கரங்கள் உருள
உராய்வின் சூடு பரவி பதிந்த
பாதையில் பயணம் ஆரம்பித்தது.

அது மறுபக்கம் சேர்ந்திடலாம்...
ஆற்றங்கரையோர நாகரிகமாக
புதிய வாழ்விடம் சேரலாம்..!
அல்லது
ஒரு அசூசையான பொருளாக
சக்கரத்தில் ஓட்டி கொண்டு
வாழ்நாளின் பாதியிலேயே
முற்றும் போட நேரிடலாம்!
மற்றொரு மழை நாளிலோ,
வாகனத்தை கழுவும்போதோ,
எஞ்சிய பாகங்கள் கிட்டலாம்
அல்லது
மறுபக்கம் சென்று சேர்ந்ததும்
யார் பார்வையிலும் படாமல்
பூமியினுள் புதைந்திருக்கலாம்.

எதுவானாலும்....
தேடலின் நிமித்தங்கள்தான்
வாழும் உலகின் எல்லையை
மாற்றி அமைக்கின்றன.


காற்றுக்கும் காற்றுக்கும்
வெள்ளி சுவரெழுப்பியே
இறகு பந்தாகி துள்ளிட,
சூரியனின் தூரிகையில்
ஏழு வர்ணம் கொண்டு
பளபளத்து பறக்கிறேன்.
இலக்கின்றி செல்கையில்
மிதத்தலின் சுகம் புரிகிறது


நான் செல்லும் பாதை
தெளிவாக இருக்கும்வரை
வழியில் சிறு குண்டூசியின்
தலையீடுகூட இல்லாதவரை
சம பலம் பலவீனத்துடன்
மற்றொரு குமிழ் வந்து
என் மீது மோதாதவரை
வெடித்து சிதறிப்போகாமல்
பத்திரமாக மிதக்கலாம்.

குறுஞ்சிரிப்பில் மலரும்
பார்வைகளில் ஊக்கமுற்று
பின்விளைவின் பயமின்றி
காற்றொடு கை கோர்த்து
வருவது வரட்டும் என்று
சித்தாந்த சிந்தனையுடன்,
பரந்து விரிந்த உலகின்
அடிப்படை அன்பு தேடி
கள்ளமின்றி மிதக்கிறேன்
ஏனெனில் என்னுள் இருப்பது
ஒரு குழந்தையின் மூச்சு !






நமக்குத் தெரிந்து அல்லது தெரியாமல் ஒரு தவறிழைத்துவிட்டு அதன் பின் விளைவை உணர்ந்தபின் ஏதோ ஒரு சொல்லவொன்னாத துயரத்தில் ஆழ்ந்திருக்கும்போது நம் நெஞ்சம் படும் வேதனை சொல்ல முடியாது. அதிலும் தன் தவறான செயல் எண்ணித் தவித்து அதனால் மேலும் ஏதாவது துன்பம் விளையுமோ என்ற அச்சமும் சேர்ந்து கொண்டால் 'ததியுறு மத்தில் சுழலும் என் ஆவி' என்று அபிராமி பட்டர் பாடியதுபோல அமைதியிழந்து அலைகழித்துவிடும்.  இதனைத்தான் குற்றமுள்ள நெஞ்சம் என்று சொல்கிறார்களோ?

வாழ்க்கையில் முதல் முறையாக தவறிழைக்கும்போது ஒருவித எதிர்ப்பு நம் உள்ளுக்குள்ளிருந்து வரும். அதை அலட்சித்து சில செயல்களை செய்துவிட்டு.  பிறகு அதை நினைத்து வருத்தப்படுவோம். ஷேக்ஸ்பியரின் மெக்பெத் கதையில் லேடி மெக்பெத் தன்னுடைய கைகளில் இரத்தக்கறை இருப்பதுபோன்றே ஒரு வித மாயையில் சிக்கி அடிக்கடி கையை கழுவிக் கொண்டே இருப்பாள் - ஏனெனில் ஏற்கனவே அவள் பல கொலைகளை செய்திருப்பாள். நம் பண்டைய இலக்கியங்களில் இது போன்ற செய்திகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. குற்றத்தை உணர்ந்த மறு நிமிடமே உயிர்த்தியாகம்தான் - மதுரையின் பாண்டிய நெடுஞ்செழியன் செய்ததுபோல்- செய்துவிடுவார்கள்.

தற்காலத்தில் நீதி நெறிமுறைகள் சற்று தளர்ந்துவிட்டாலும், குற்றமுள்ள நெஞ்சம் பேசுக் கொண்டேதான் இருக்கிறது. அதன் பிடியில் இருந்து தப்பிக்கும் வழியறியாமல் நோயின் பிடியில் சிக்கிக் கொள்வதும், இனிய குடும்பத்தை மனதளவில் பிரிவதும் தவிர்க்க முடியாததாகிவிட்டன. ஒரு உண்மை எண்ணவெனில் நம்மை பாதுகாக்கும் சக்திகளாக திகழ்வது அன்புள்ளவர்களின் அருகாமையும், தூய்மையான இதயமும்தான். மேலே நான் குறிப்பிட்ட சூழலில் இவை இரண்டையும் நாம் இழந்துவிடுவோம். விளைவு, மனிதன் என்ற நிலையிலிருந்து தாழ்ந்து விலங்கின் போர்வையை போர்த்துக் கொள்ள வேண்டி வரும்.

என்னைப் பொறுத்தவரை குற்றமுள்ள நெஞ்சம் பேசுவதும் பேசிக் கொல்வதும் மென்மையான இதயங்களில் மட்டுமே. ஒரு முறை அதன் பிடியில் சிக்கியவர்கள் வெளி வரத்தெரியாமல் தன்னுடைய இனிமையான சூழலை விட்டு விலகுவதும்,  அதனால் மேலும் அதே தவறினை செய்து புதை சேற்றில் சிக்கிக் கொண்டு தன்னை தொலைத்தவர்களும் உண்டு. என்றைக்காவது தனிமை கிட்டும்போது தன்னை பற்றிய நினைவு வரும்போது கண்ணில் வரும் நீர் துளிகள் மன்னிக்க முடியாத வார்த்தைகளை தெரிவிக்கும். எனவே இது போன்ற மாய வலைக்குள் சிக்கிக் கொள்ளும் முன் மீளும் முனைப்பு முதல் திருப்பத்திலேயே வந்துவிட வேண்டும். அப்படி வரும்போது மீளும் வழிகளை தெரிந்து கொள்ளுவது முக்கியமான விசயமாகிவிடுகிறது அல்லவா? 

                                       - அடுத்த பதிவில் இன்னும் விளக்கமாக பார்ப்போம்.




தடுப்பார் யாருமின்றி பற்றற்று
ஒரு காற்றாக நான் திரிந்தேன்
சேருவதற்கு இடமில்லாமல்
ஆகாயத்தில் தனித்து திரிந்தேன்

நெருப்புடன் சேர்ந்து பார்த்தேன்
சுற்றியிருப்பவற்றை கொளுத்தி
சிறிய தீயை தூண்டி அழித்தது
காற்றுதான் என்று ஏசினார்கள்


கடலுடன் சேர்ந்து பார்த்தேன்
ஆழிப்பேரலையாகி ஆடினேன்
உயிர் பலிகொண்ட கருவியான
பழிச்சொல்தான் மிச்சமானது.

இனம் இனத்தோடு சேரலாமே
காற்றோடு சேர்ந்து பார்த்தேன்
சூறாவளியாகி சுழன்று வீசிட
மிச்சமும் மீதியின்றி பறந்தது.

வெறுத்துப்போன வேளையில்
சுழன்றாடும் சோழியை பிரித்து
பல்லாங்குழி ஆடுவது போல்
சீற்றம் குறைத்து தணிந்தேன்

சிறிது சிறிதாக பிரிந்து ....
மூங்கிலில் புகுந்து இசையாகி
சந்தன வாசத் தென்றாலாகி
முகை நறுமணம் சுமந்தோடி
சிறிதே பிரணவம் கொண்டு நான்
மூச்சு காற்றாகி உயிரானேன்.

மூச்சுக் காற்றை சுமந்தே...
வெற்று வெளியில் மிதந்து
ஏதோவொரு தடையாலோ
மற்றொன்றுடன் மோதியோ
உடைந்து மறையும் குமிழாக
அழிந்து போக விருப்பமில்லை.


மற்றொன்றுடன் மோதினாலும்
உடைந்து சிதறிப் போகாமல்
மோதியதை பலவாறாக்கும்
உள் புகுந்து அணு பிளக்கும்
கூரிய வினைதிட்பம் உள்ள
ஒரு பௌதீகத்தின் வழியாக
மோதல்களினால் பயனுற்று
அதீத ஆற்றல் கொள்கிறேன்
தொடர்ந்து வரும் பிளவுகளும்
கடி விசையுறும் துகள்களும்
சக்தியின் பிரவாகமாக மாற
உலகத்தை உயிர்ப்பிக்கிறேன்


எப்போதாவது....
ஒரு அணு உலையைப் போல்
வெடித்து சிதறிவிடாமலிருக்க
வெதுவெதுப்பான வெப்பத்தில்
பஞ்சுப்பொதியின் பரிவுடன்
உள்ளுக்குளேயும் குளிர்விக்கும்
தாய்க்கோழியின் மென்சிறகு
அணைப்பை வேண்டுகிறேன்.
 


வணக்கத்திற்கும் பெருமதிப்பிற்கும் உரிய ஐயா திரு.ரத்னவேல் அவர்களின், அழைப்பிற்கினங்க இந்த தொடர் பதிவினை பதிவிடுகிறேன். இது போன்ற அழைப்புகளை பதிவுலத்துடன் என்னை இணைக்கும் பாலங்களாக கருதுகிறேன். எனவே இதற்கு சந்தர்ப்பம் அளித்த ஐயா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

1.     நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்.
       1. பால்வெளியை பார்க்கக்கூடிய தனிமையில் இரவு வானம்
       2. விருந்தோம்பல் - இது என் கணவருக்கும் மிகவும் பிடித்த விசயம்.
       3. சிக்கல்கள் - அதுதான் என்னை உலகத்துடன் இயைந்து உயிர்ப்புடன்
           செயல்பட வைக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒரு புதிய விசயத்தைக்
           கற்றுக் கொள்கிறேன்.
                       

2..       நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்.         
            1. தலை வலிக்க வைக்கும் தற்பெருமை பேச்சுக்கள்.
                இதில் முகஸ்துதியையும் சேர்த்துக் கொள்ளலாம்.
            2. முதியவர்களையும், குழந்தைகளையும் துன்பப்படுத்தும் செயல்கள்.
            3. அதிக சத்தமிடும் எதுவுமே பிடிக்காது.  
   

3.     பயப்படும் மூன்று விஷயங்கள்.
         1. யாரையும் வருத்தப்பட வைக்கக்கூடாது .
         2. விபத்து. அது பற்றிய செய்திகளை கேட்கக்கூட மாட்டேன்
         3. வீண் பழிச்சொல்
 

4.      உங்களுக்குப்  புரியாத மூன்று விஷயங்கள்.
       1. தீவிர நண்பர்கள் யாரும் இல்லாத காரணம் . நன்றாக பழகுவார்கள், நான் யாரிடமாவது பேசிவிட்டால் அத்துடன் பேச்சை நிறுத்திக் கொள்வார்கள்.
       2. எல்லோரையும் போலவேதான் - எனக்கு மட்டும் சிறு தவறுக்கும் பாடம் கற்பிக்கும் ஏதோ ஒன்று( கடவுளோ, மனசாட்சியோ..) , நிறைய பேரிடம் ஏன் அமைதியாகிவிடுகிறது.     
       3. அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும் வாழ்க்கை.(நிறைய கற்றும் தருகிறது.)   
   

5.      உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்.
          1. இணையத் தொடர்புடன் கூடிய மடிக்கணினி,
          2. மாணவர் நலனுக்காக சிறப்பாக பணியாற்றியதற்கான ஒரு விருது.
          3. 'வெற்றி என்பது  நாம் எத்தனை பேரை நம்முடன் சேர்த்து உயர்த்தியுள்ளோம் என்பதே' என்ற வாசகம் உள்ள ஒரு ஃப்ரேம்.

6. உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயங்கள் அல்லது மனிதர்கள்.
       1. குழந்தைகள்தான் -. மூக்கைத் தூக்கிக் கொண்டு மூச்சை இழுத்துக் கொண்டு மழலை நியாயம் பேசுவது மிகவும் பிடிக்கும்.
       2. பாடம் நடத்தும்போது வெளியுலக சஞ்சாரத்தில் இருக்கும் மாணவர்களின் முகபாவனைகள்
       3. வீட்டிற்குள்ளேயே நடக்கும் சின்ன சின்ன கலாட்டாக்கள். முக்கியமாக புதிதாக நான் கற்றுக் கொண்ட உணவை செய்யும்போது.
   
7.  தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்:
       1. நண்பர்களுடன் சேர்ந்து மேலாண்மை படிப்பிற்காக ஒரு கல்வி நிறுவனம் ஆரம்பிக்க முயற்சிக்கிறேன்.
       2. ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன்- ஒரு தனி மனிதனின் கொள்கைகளுக்கும், அவன் வேலை செய்யும் நிறுவனத்தின் கொள்கைகளுக்குமான வேறுபாடு,  அந்த மனிதனின் வாழ்க்கைத் தோல்விக்கான காரணமாகிறதா? - Behavioural Ethics
       3. கூடிய மட்டும் என்னை சுற்றியிருப்பவர்களுக்கு -வீட்டிற்கு வெளியிலும்தான் - இருக்கும் மனோவியல் சிக்கல்களை தீர்க்க முயற்சிக்கிறேன் - .


8.   வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்.
       1. ஒரு இனிய முதியோர் இல்லம்.
       2. திருகைலாய யாத்திரை
       3. என்னுடைய கட்டுரைகளை புத்தகமாக வெளியிடுவது.    

9.   உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்:
       1. புத்தகம் வெளியிடுவது
       2. கல்வி நிறுவனம் ஆரம்பிப்பது
       3. முதியோர் ஓய்வு இல்லம் ஆரம்பிப்பது.
    

10. கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்:
       1. யாரையாவது குறை சொல்லும் சொற்கள்.
       2. தீர்க்கவே முடியாத சிக்கல் என்று ஒன்றை வருணிப்பது
       3. தன்னம்பிக்கையை குலைக்கும் வார்த்தைகள்.

11) பிடிச்ச மூன்று உணவு வகை?
        1. பருப்பு உருண்டை குழம்பு
        2. பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம்
        3. திருவையாறு அல்வா எனப்படும் அசோகா (இனிப்பு வகைகள் அனைத்தும் பிடிக்கும் என்றாலும் , இதற்கு 1% மார்க் அதிகம்)

12) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
        1. நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா - பாம்பே ஜெயஸ்ரீ - இது ஒரு ஆன்மீக பாடலாகவே எனக்குத் தோன்றுகிறது.
        2. எங்களுக்குக் குறையும் உண்டு - வீரமணிதாசன் - 'மனம் தூங்க வேணும்' என்ற வரிக்காக.
        3. பொன்னை விரும்பும் பூமியிலே - டி.எம்.எஸ் - அவருடைய பாடல்களிலேயே இதை மட்டும்தான் என்னுடைய குரலுக்கு பாடமுடிகிறது.

13) பிடித்த மூன்று படங்கள்?
        1. பாண்டவர் பூமி - அடுத்த தலைமுறைக்கு நம்முடைய நினைவுகள்தான் பெரிய பொக்கிசம். அதற்கு ஒரு வீடு அவசியம் என்று புரிய வைத்தது.
        2. தாரே ஜமீன் பர் - மக்கு என்ற வார்த்தையே  சொல்லிக் கொடுப்பதின் குறைபாடுகளை மறைக்கும் ஆயுதம்தான், என்று நான் எப்போதும் சொல்வேன். இந்தப் படமும் அதைத்தான் சொன்னது.
        3. வீரபாண்டிய கட்டபொம்மன்- நாம் நிற்கும் சுதந்திர பூமி எத்தனையோ துயரங்களைத் புதைத்துக் கொண்டுள்ளது. அதனை மறக்கவே கூடாது.    


14) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்றுவிஷயம்?
        1. இறை பக்தி - இது இல்லையென்றால் அடுத்த அடியை எடுத்து வைக்கும் தெம்புகூட இருக்காது என்று நம்புகிறேன்.
        2. என்னுடைய  குடும்பத்தின் நலம் - இது என் மனோ தைரியத்தை பாதுகாக்கும் மந்திர சாவி
        3. உறவுகளின் தொடர்பு   - நிலச்சுமையென நான் வாழவில்லை என்பதற்கான அத்தாட்சி.
             


15) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?

 1. அரைகுறையாக விட்ட வீணை வாசிப்பு
 2. ஆயில் பெயிண்டிங்
 3. இன்னும் கொஞ்சம் மனோவியல்

16. இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?
     1. தமிழ் உதயம் - திரு.ரமேஷ்
     2. வசந்த மண்டபம் - திரு மகேந்திரன்
     3. சில மணித்துளிகள்-  பிரணவன்


     நன்றி

நொடிக்கொரு முறை எந்தன்
கண்ணிமைகள் துடிக்கும்போது
ஒரு நிழற்படம் பதியப்பட்டது...
என்னுடைய தொகுப்பாக நீயும்,
உந்தன் பதிவுகளில் நானுமாக
கணக்கின்றி சேமித்தோமே....!

சூரியபிரகாசமான தாய்மையில்
என்னை நீ அழகாக பதிந்தாய்
விழிகளின் ஓரத்தின் கண்ணீரில்
உன் சிரிப்பைத் தவிர வேறேது?
நெஞ்சில் வைத்துக் கொண்டாடி
தோளில் சாய்த்து வருடினேன்
உறக்கம் வந்த வேளையில்கூட
கண் சிமிட்டலின் புன்னகையில்
முத்தத்துடன் ஒரு அன்புப்பதிவு.

வளர்ந்தபின் மறந்துவிட்டாய்
என்னைத் தேடும் உன் தேடுதல்
மெல்ல மெல்ல பழங்கதையாக,
இருளுக்குள் ஓடி ஒளிந்திட்டாய்.
சாளரத்தின் வெளியே ஒளியில்
உன் மழலை முகத்தின் சாயல்
உன்னைதான் நான் தேடுகிறேன்!

வயிற்றிலிருந்து மடியிலும் ...
மடியிலிருந்து ஏந்தி கைக்கும்....
கையிலிருந்து தோள்களுக்கும்,
மாற்றியே உன்னை சுமந்தேனே
உயிரை உருவி வேற்று பூமிக்கு 
அனுப்பித் தொலைத்தேனா?
ஆனால் நீ மட்டும்.......?


பிரச்சினை இருப்பதை புரிந்து கொண்டாயிற்று. இனி, என்ன செய்வது என்பதை இரண்டு விதமாக அணுகலாம். பிரச்சினை நமக்கு என்றால் என்ன செய்வது?. நம்முடைய நெருங்கிய உறவினருக்கு என்றால் என்ன செய்வது? என்று பார்க்கலாம்.

நமக்குத்தான் பிரச்சினை:
 1.  தொழில், வேலை அல்லது குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சினகளுக்கு உடனடி முடிவு எதுவும் எடுக்க வேண்டாம். மாற்றி யோசிக்கும் மனோபாவத்தினை செயல்படுத்தும் நம்முடைய ஆழ்மனது தற்சமயம் குழம்பி உள்ளதால் சரியான தீர்வு கிட்டாது. எளிதாக முடிக்கவேண்டிய விசயங்கள் சிக்கலாகிவிடலாம், எனவே, அமைதியாக இருக்க முயற்சியுங்கள்.

2.  யோகாசனம் செய்யலாமே என்று நினைத்தால் புதிதாக ஆரம்பிக்க முயற்சிக்க வேண்டாம். உண்மையில் யோகா போன்றவற்றை பழக்கத்தில் வைத்திருப்பவர்க்கு இது போன்ற பிரச்சினை வராது.  புதிதாக ஆரம்பிக்க நினைத்தால் முயற்சி இந்த சமயத்தில் கைகூடாது.

3.  உடல் சோரும் போது என்ன செய்வோம்? தற்காலிக ஓய்வு தருவோம். உடலுக்கு சிரமத்தை விளைவிக்கக்கூடியவற்றை தவிர்ப்போம். தெம்பாக இருப்பதற்குத் தேவையான உணவினை உட்கொள்வோம். தொல்லை இல்லாத உறக்கத்தை நாடுவோம். இது அத்தனையும் மனதிற்குத் தரவேண்டும்.

4. மனதை தெளிவுபடுத்த எங்கேயாவது சுற்றுலா செல்லலாம். கிளம்புமுன் உங்களை  குழப்பத்தில் ஆழ்த்திய முக்கிய பிரச்சினையை ஒரு தாளில் எழுதி பூஜை அறையில் வைத்துவிடுங்கள். அல்லது ஒரு சிறிய பெட்டியில் வைத்து மானசீகமாக அதனை அங்கேயே விட்டுச் செல்வதாக மனதிற்குள் சொல்லிக் கொள்ளுங்கள். சுற்றுலா செல்லுமிடத்தில் போய் எந்த யோசனையும் செய்யாமல் சுற்றிலும் நடப்பதை ரசித்து உணர்ந்து நேரத்தை அனுபவியுங்கள். சுற்றுலா செல்லுமிடம் மலை பகுதியாக இருக்கலாம் அல்லது கடல் சார்ந்த பகுதியாக இருக்கலாம். கண்ணுக்குத் தெரிந்தவரை ஒரே வண்ணம் இருப்பது மனதை அமைதிபடுத்தும் -ஹீலிங் செய்யும். புதிய மனிதர்கள், புதிய இடங்கள் மற்றும் புதிய காட்சிகள் ரசனையை தூண்டிவிட்டு மனதிற்கு தெம்பூட்டும். நமக்கு சம்பந்தமில்லாத காட்சிகளில் பார்வையாளராக மட்டுமே இருப்பதால் சிந்திக்கத் தேவையில்லாமல் மனம் உறக்கம் நாடும்.

     -- மனதின் உறக்கம் ஒரு அருமையான புத்துணர்வினை தரும். நாம் உடல் ரீதியாக விழித்துக் கொண்டுதான் இருப்போம்.. ஆனால் நமக்கு தொடர்பில்லாத சூழ்நிலைக்குள் செல்லும்போது நம்முடைய கட்டுபாட்டை சூழ்நிலை எடுத்துக் கொள்வதால் சிந்திக்கத் தூண்டும் மூளையின் செல்கள் சற்று ஓய்வெடுத்துக் கொள்ளும். சுற்றுலா செல்லுமிடத்தில் பொறுப்பை யாரிடமாவது தந்துவிட்டு அவர்கள் போக்கில் போக வேண்டும். அலையை எதிர்த்து நீச்சல் அடிப்பது ஒருவகை என்றால், கடல் ஓரமாக முழங்கால் அளவு தண்ணீரில் அமர்ந்து கொண்டு அலையின் போக்கிற்கு ஆடிகொண்டேயிருப்பது ஒரு வகை. பின்னதில் மனதிற்கு வேலையில்லை, அனுபவிக்க மட்டுமே செய்தால் போதும். இவையெல்லாம் மனதிற்கு ஓய்வு தரும் வேலைகள்.

   - சிலர் சுற்றுலா திட்டமிட்டு குடும்பத்தையே அழைத்துக்கொண்டுபோய், வழக்கம்போல தலைமை பொறுப்பை தன் கையில் வைத்துக் கொண்டு கர்னல் ஒரு மிலிட்டரி படையினை வழி நடத்தி செல்வதுபோல நடந்து  கொண்டு கத்தி குவித்து இன்னும் சிக்கலாக்கிக் கொண்டு வந்து சேருவார்கள். எனவே இதனை கவனமாக செய்ய வேண்டும்.

5.  புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைவது, இசை கருவிகள் வாசிக்க கற்றுக் கொள்வது போன்ற புதிய கலை முயற்சியில் ஈடுபடலாம். இவை வெற்றி பெற்றால் நாம் உள்ளுக்குள்ளேயே பாராட்டி மெச்சிக் கொள்வோம். சரியாக வராமல் தவறாகி விட்டாலும் ஒரு சுவைமிக்க அனுபவம் கிட்டும்.
 
6. எல்லாவற்றிற்கும் மேலாக நமக்கென்று ஒருவர் இருக்க வேண்டும். நம்முடைய தனித்துவம் உணர்ந்து நமக்காக சிந்திக்கும் ஒருவரை இத்தனை நீண்ட வாழ்க்கையில் தேடுவது கடினம் அல்லவே. அவர்களை மதிப்பதும் பெருமைபடுத்துவதும் நமக்கு நல்லது. அப்படி ஒருவர் உங்களுக்கு ஏற்கனவே இருந்தால், கவனித்துப் பாருங்கள் அவரிடம் நமக்கான நேர்மறை சிந்தனைகள் அதிகம் இருக்கும். 
 
7. இது போன்ற மனக்கொந்தளிப்புகள் ஆண்களுக்குத்தான் அதிகம் வரும். பெண்களுக்கு மிகக்குறைவுதான். ஏன் என்றால், கட்டுப்படாத சூழ் நிலையினை உணர்ந்து பெண்கள் கட்டுப்பாட்டு விசையினை ஆண்களிடம் விட்டுவிடுவார்கள். "ஏன், ஒரு கருத்தும் கூறாமல் இருக்கிறாய்?" என்றும், "நீங்களே சொல்லுங்களேன் என்னவென்றாலும் சரிதான்" என்ற  கழண்டு கொள்ளும் பதில் உரையாடலும் நடக்கும் நிலையது. ஆண்களுக்கு இயல்பான ஈகோ இருப்பதால் புலிவாலை பிடித்து விடுவார்கள் (புலியினை அடக்கவும் தெரியாது, புலி வாலைவிடும் தைரியமும் வராது.) ஆக நம்பிக்கைக்குரிய ஒருவர் நம்முடன் இருப்பது நல்லதுதானே, இது போன்ற சமயங்களில் பயன்படும் (மனைவி, தந்தை மற்ற பெரியவர்கள்). குறைந்தபட்சம் ஆலோசனை கேட்கவாவது குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களை நாடலாம்.
                        
                               
                                               - அடுத்து,  தொடரின் கடைசி பகுதியில் சந்திப்போம்


        இது போன்ற சூழ்நிலை எப்போது? ஏன் உருவாகிறது?  குறிப்பிட்ட  உடல் நலக் கோளாறு ஏற்படும்போது - உதாரணமாக பித்தப்பை பாதிப்பு, வயிற்றுப் புண், மூளையில் சுரக்கும் திரவத்தில் (ஆனந்தமைடு) ஏற்படும் மாற்றங்கள் போன்ற வெளிப்படையாக தெரியாத கோளாறுகள் - சிந்திக்கும் திறனை பாதிக்கும். இவை நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தும்போது வெளிப்படையாகவே உடல் நலமில்லை என்று நமக்குப் புரிந்துவிடும். மருத்துவ ஆலோசனை பெறுவோம். ஆனால் ஏதோ ஒரு சிறிய நெருக்கடியில் சட்டென ஏற்படும் ரசாயன மாற்றங்கள் பெரிய பாதிப்புகளாக தெரிய வராது. இது ஒரு குறுகிய கால பாதிப்புதான். சில நாட்களில் தானாகவே சரியாகிவிடும். ஆனால் அந்த குறுகிய காலத்திற்குள் நாம் அடுத்தடுத்த தவறுகளை செய்து  இடியாப்ப சிக்கலை உருவாக்கிவிடுவோம். இதனால் குடும்பத்திற்குள் ஏற்படும் குழப்பங்கள் வரையறுக்க முடியாது.

      சரி,  இது போன்ற சந்தர்ப்பங்கள் எல்லோருக்கும்  ஏற்படக்கூடியதுதான், மற்ற வீடுகளிலும் இது போன்ற குழப்பங்கள் இருப்பதில்லையே என்று கேட்பீர்கள். உண்மைதான், மனதை பாதிக்கும் ஒரு சம்பவம் நடந்தால், உடன் இருப்பவர்கள் அவருக்கு தகுந்த ஆலோசனை கூறி சமன் செய்துவிடுவார்கள்.  உதாரணத்திற்காக சொல்கிறேன், எங்கள் வீட்டில்  ஏதோ ஒரு விசயத்திற்காக சிறியவர்கள் பயந்துவிட்டால் அல்லது அதிர்ச்சியடைந்தால் கொழுமோர் செய்து சட்டென குடிக்கத்தருவார்கள் அல்லது ஒரு ஸ்பூன் சீனியை வாயில் போடுவார்கள்.  இது உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களை  சீர் செய்துவிடும். உடல் நலம் பாதிக்காது. ஆனால், குடும்பத்தினை முன்னேடுத்து  நடத்திச் செல்லும் முக்கிய பொறுப்பில் நாம் இருக்கும்போது நமக்கு அடுத்தவர் ஆலோசனை சொன்னாலும் பிடிக்காது, நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாக  சொல்லவும் அவர்களுக்குத் தோன்றாது. . எனவே சூழ இருப்பவர்கள் உணர்ந்த  "சம்திங் ராங்" என்கிற விசயம் நமக்கு தெரியாமல் போய்விடும். இந்த நிலை கண்டிப்பாக மற்றவர்களையும் பாதிக்கும். ஒரு சறுக்குப்பாதையில் நாம் பயணிப்பதையும் அதன் முடிவு மூச்சு திணறவைக்கும் ஒரு இருள் குகை என்பதும் பயணத்தின் ஆரம்பத்தில் தெரியாது. உடன் இருப்பவர்களுக்கும் இது பற்றி புரிந்து கொள்ளமுடியாது.


     ஒரு மலை பாதையில் பயணிப்பவர் தனித்து செல்லும்போது ரொம்பவும் ஜாக்கிரதையான உணர்வுடன் காலடிகளை எடுத்து வைப்பார்கள். அதுவே ஒரு குழுவாக செல்லும்போது தலைமை ஏற்றிருப்பவர்மீது நம்பிக்கை வைத்து அவர் சொல்படி செய்வார்கள். தலைமை பொறுப்பில் உள்ளவர்களும், சரியான பாதையை தேர்வு செய்து வழி நடத்துவார்கள். முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று, தலைமைக்கு கட்டுப்பட்டு இயங்குவதால் அவர் வழிகாட்டுதலை மட்டுமே தொடர்வதால் தனக்கென்று ஒரு சிந்தனை இருக்காது. ஏதோ ஒரு இடத்தில் தலைமை பொறுப்பேற்றவர் தவறிவிட்டால், அதனை கவனித்து சரி செய்யவும் தோன்றாது. முடிவு மொத்த குழுவிற்கும் தோல்விதான் கிட்டும். இதேபோலத்தான், குடும்பத்தில் முக்கியமான பொறுப்புகளை தன்வசம் வைத்திருக்கும் ஒருவர் தவறாக சிந்திக்கும்போது அதன் பாதிப்பு மொத்த குடும்பத்திற்கும்தான். ஏன் தெளிவான முடிவுகளை நம்மால் எடுக்க முடியவில்லை என்று கேள்வி தோன்றினாலும் எடுத்து சொல்லத்தயங்குவார்கள். தப்பித்தவறி  சொன்னாலும் கடுமையான பதில்தான் கிட்டும் என்று அவர்களுக்குத் தெரியும்.  நாமும்தான் தவறான சிந்தனைகளினால் ஒரு இணக்கமான நிலையினை தவிர்த்து விலகி இருப்போம். நாம் சொல்வதை மறுத்துப்பேசிய தற்சமய சூழ்நிலையை கருத்தில் கொண்டு  கழிவிரக்கத்தினால் இன்னும் அவர்களைத் தவறாக நினைக்க ஆரம்பிப்போம். ஒரு சத்தியமான உண்மை என்னவென்றால், நம் மீது நம்பிக்கை வைத்து இருப்பவர்களை நாம் நம்பிக்கை வைத்து இருப்பவர்களையும் விலக்க ஆரம்பிக்கும்போதுதான் நம்முடைய தோல்விக் கதையின் முதல் வார்த்தை எழுதப்படுகிறது. 
 
    ஒரு வெற்றி பெற்ற தொழிலதிபர். சிறிய வயதில் வாழ்க்கையை வெறுங்கையுடன் ஆரம்பித்தவர். கடுமையான உழைப்பினால் உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டார். அருமையான மனைவி, வளர்ந்த பிள்ளைகள் என அத்தனை பேரும் அவர் சொல்லை தட்டமாட்டார்கள். வயதாகி விட்டது. அரசாங்கத்தின் கொள்கை மாற்றங்களின் காரணமாக ஒரு நெருக்கடி வந்தது. வெற்றியையே சந்தித்து பழகியவரால் இதனை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. உள்ளுக்குள்ளேயே சில மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதுகிறேன். தன் விசயத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத அவர் சிந்தனை குழப்பத்தால் தவறான முடிவுகளை எடுக்கிறார். ரொம்ப நாள் கழித்து முதல் தோல்வி. பிள்ளைகளுக்கு தந்தை மேல் இருக்கும் நம்பிக்கை ஆட்டம் காண்கிறது. அவரின் தவறான முடிவுகளை விமர்சிக்கின்றனர். இது மேலும் அவரின் உடல் நிலையினை பாதிக்கிறது. விட்டதை பிடிப்போம் என்கிற நம்பிக்கையில் அதிரடி முடிவுகளை எடுக்கிறார். அதுவும் சிக்கல்.  குடும்ப சிக்கல் மனதை ஓய்த்துவிட்டது. பொருளாதார சிக்கல் ஆரம்பிக்கிறது. மொத்த குடும்பத்தையும் பாதிக்கும் என்று நான் சொன்னது இதனைத்தான்.
 
                                                                          - மீதி அடுத்த பதிவில் தொடரலாமா?


என்னுடனேயே பிறந்தாய்..
       கைப் பிடித்து  நடந்து ஓடி
ஒன்றாய் கூடி  கதை பேசி
       ஒரு குடம் தண்ணி ஊற்றி
பூப்பூவாக  பூத்து குலுங்கி
       அன்னை தந்தை கொஞ்சி
குவித்த அத்தனை பாசமும்
     கிள்ளி வைத்து பங்கு பிரித்து
கள்ளமின்றி ஆடித் திரிந்தோம்!
இன்று....
ஏனடி பொய்யாக கதைக்கிறாய்?
    எதையோ அடிமனதில் மறைத்து
பார்வையிலிருந்து மறைகிறாய்!
    சிறு சிறு பழியினை சுமத்தி விட்டு
உன்னை தொலைத்து ஓடுகிறாய்!
     வெறுப்பை வலிந்து கேட்கிறாய்!



ஏனென்று எனக்குத் தெரியும்!
    உன் 'வீட்டு' தோல்விக் கதை
அத்தனையும் புரியும்... ...
     உயிரோடு உறவு தொலைத்த
என் வேதனையின் வலியை
    உனக்குத்தான் தெரியாது ..!
ஒன்று மட்டும் சொல்லுவேன்....
     என் வேண்டுதலின் பரிசாக
உன் தலை நிமிர்ந்து நிற்கும்
     வெற்றி நாள் ஒன்று வரும்
என்னை பார்த்து சிரிப்பாய்..
   

     அன்று ஓங்கியொரு அறைவிட்டு
தொலைந்த  கதை கேட்பேன்....
     அது வரை என் கேள்வியின்
எல்லைக்குள் வராமல்
      அந்தி வானத்தின் அடியில்
ஒளிந்து கொண்டு இருந்துவிடு.

தடையில்லாத  ஒரு பயணம்
  எங்கும் யோசிக்க வைப்பதில்லை!
கால்கள் வலிக்காத வரையில்....
  ஒரு முட்டுச்சந்தின் முனையில்
முடிவற்ற நிலைக்கு  வரும்வரை..
   இருள் பாதையை மறைக்கும்வரை,
சுற்றுப்புறம் கவனிக்கப்படுவதில்லை!


அடிக்கடி ஒளிந்து மறைந்தோடி

   தொலைந்து மீளும் வெள்ளி நிலவு!
எதையோ தேடித்தேடி நித்தம்
   தோற்று மறையும் மேற்குச்சூரியன்!
இரவின் மின்மினி விண்மீன்கள்!
   அடிவானத்து வெளிச்ச சிதறல்கள்!
வரைந்த தூரிகை காயும் முன்
    கலைந்திடும் நீலவெளி வானவில்!
பிள்ளை பிராய கதை சொல்லும்
     மழைக்காலத்து மண்வாசனை!
நெருங்கி திரிந்து இணைந்து ஓடி
      சிற்பியாகும் கவின் மேகங்கள்!
எதுவும் கவிதையாவதில்லை.....

ஆனால்....
ஏதோவொரு திடீர் தேக்கத்தில்...
   தடைபட்ட நிற்கும் பயணத்தில்...
மீண்டும் வரும் நினைவுகள்,
   மயிலிறகில் மை தீட்டித் தீட்டி
கடந்து போன கவிதைகளை
   வரிவரியாக சொல்லிக்காட்டும்!
அத்தனையும் அழகாய் நிகழ்த்தும்
   மகா சக்தியின் இருப்பை காட்டும்!
தேங்கி மதியிழந்திருந்த மனம் 
    சிறகு முளைத்த பறவையாய்
ஆகாயத்து பால் வெளியில்
    பறந்து திரிந்து அமிர்தம் பருகி
புதிய சூரியோதயத்தை தேடும்.



   
    இந்தப் பதிவுத் தொடர் எழுத மனோ மேடம் அழைத்து சில நாட்களாகிவிட்ட நிலையில் இப்போதுதான் எனக்கு கணிப்பொறியினை தொடும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் தொடர்கிறேன். மேலும் பதிவுலக நட்பு வட்டாரத்தில் என்னை இணைத்துக் கொள்ளும் எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் நான் தவிர்க்க விரும்பவில்லை, என்னுடைய பணியின் காரணமாக தள்ளிப் போடப்பட்டுள்ளது என்பதை சிறு மன்னிப்புடன் விளக்கி இந்த தொடரை தொடர்கிறேன்.


    முன்னுரை  அல்லது முகவுரை ஒரு படைப்பினை எடை போடும் எழுத்துக்களாக இல்லாமல், படைப்பினோடு ஒன்றிய படைப்பாளியின் மனச்சித்திரங்களை விளக்கக் கூடியதாக இருப்பதுதான் எனக்கு விருப்பமானது. முன்னுரை என்பது அம்மா குழந்தையை தூக்கிக் கொண்டு நிலாச்சோறு ஊட்டுவது போலவோ , இல்லை அப்பா கை பிடித்து நடத்திச் செல்லும் ஒரு மாலை நேர நடையாக இருப்பதும் சிறப்பு. தமிழ் மொழியில் எழுதப்பட்டதோ வேற்று மொழியில் எழுதப்பட்டதோ எந்த படைப்பையும் சினேகித்துத் தொடர இந்த முன்னுரைகள் உதவுகின்றன. ஏற்கனவே எழுதப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் தேர்வு செய்ததால், குறிஞ்சிமலர் தவிர மற்ற நூல்கள் அந்த அளவிற்கு வாசகரை சென்று அடைந்திருக்காதவையாக இருக்கும். இவை என்னை ஒரே விசயத்தை எப்படி பல்வேறுபட்ட அணுகுமுறைகளுடன் சிந்திக்க முடியும் என்று கற்றுக்கொடுத்தவை.


1. குறிஞ்சி மலர்:  காதாசிரியர் நா.பார்த்தசாரதி - எழுத்து கூட்டி வாசித்ததற்கும் மேல் வாழ்க்கை பற்றிய சிந்தனைகளை விதைத்த இந்த நூலிற்கு முதல் வணக்கம். 

   ஒரு தமிழ்ப்பெண் எப்படியிருக்க வேண்டும் .... கோபுரம் போல் உயர்ந்து, வானம் போல் பரந்து, மதிகடல் போல் ஆழ்ந்த சிறப்புடையது தமிழ் பெண் குலம்.தமிழ் பெண் குலத்தின் வளை ஒலிக்கும் கைகளில்தான் வீரமும், ஈரமும், வெற்றியும், வாழ்வும் பிறந்து வளர்ந்திருக்கின்றன. அக்கைகளின் வளையோடு தமிழும் வளர்ந்தது. தமிழொடு தமிழ் பண்பும் வாழ்ந்தது. தமிழ்ப் பண்போடு தமிழ் குடியும் வளர்ந்தது.


  இன்றும் நம்மை விட்டு விலகிவிடாமல் காத்துவரும் பண்பையும் , ஒழுக்கத்தையும் தமது குருதியோடு குருதியாகக் கலந்து நிற்கும் அறத்தையும் இப்படி நித்தியமாய் நிரந்தரமாய் நிர்மலமாய் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்படி அளித்தவள் எந்த தமிழ் பெண்ணோ அவளுடைய பொன்னார்ந்த செந்தாமரைத் திருவடிகளை வணங்கிவிட்டு இந்தக் கதையினை எழுதத்தொடர்கிறேன். இங்கே இந்த வாக்கியத்தை எழுதி முடிக்கும்போது மெய் சிலிர்த்து கண்களில் நீரரும்புகிறது. கோயிலுக்குள் நுழைவதுபோல் மமும், உடலும் புலன்களும் தூய்மையை உணருகின்றன.


     தாயின் வார்த்தைகளைப்போல பதின் வயதில் எனக்குள்ளே பதிய வைக்கப்பட்ட இந்த வார்த்தைகள் இன்றைக்கு படித்தாலும் பெருமைகொள்ள வைக்கின்றன. இது போன்ற எழுத்துக்கள் இப்போது இல்லாததும் பெண்களின் பாதுகாப்பற்ற நிலைக்கு காரணமோ என்பதும் ஒரு கேள்வியாகிறது.


2. The Algebra of infinite justice - ARUNDHATI ROY  புக்கர் பரிசு பெற்ற பெண் எழுத்தாளர்.  இந்த நூலிற்கு முகவுரை எழுதியவர் ஜான் பெர்ஜர்.  சர்ச்சைக்குரிய எழுத்துக்களை துணிச்சலுடன் எழுதும் இந்த எழுத்தாளர் இந்த நூலில் பயங்கரவாதம் பற்றியும், அதன் மறுமுகம் பற்றியும் அதனை மக்களிடம் சரிவர கொண்டு சேர்க்காத எழுத்தாளர்களின் தார்மீகபொறுப்பு பற்றியும் எழுதியிருக்கிறார். அணு ஆயுதம், பொக்ரேன் சோதனை, சர்தார் சரோவர் அணை பிரச்சினை, தீவிரவாதம் பற்றியும் வேறுபட்ட கருத்துக்களை முன்வைக்கிறார். இந்த கட்டுரை தொகுப்பில் சில வரிகளை ஜான் பெர்ஜெரின் வார்த்தைகளை எழுதுகிறேன்.


ஒன்றுமறியாத அப்பாவிகளை கொலை செய்யும் ஒரு பயங்கரவாத செயல் - மதத்தின் பெயரால் செய்யப்பட்டாலும், தீவிரவாத இயக்கம் செய்தாலும், மக்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கையாக இருந்தாலும், போர் என்ற பெயரில் செய்யப்பட்ட செயலாக இருந்தாலும் அதனை மன்னிக்கவோ நியாயப்படுத்தவோ முடியாது .


பயங்கரவாதம் ஒருவருடைய இறப்பின் கடைசி நிமிடங்களை வாழும்போதே எப்போதும் நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கிறது என்பதை விவரிக்கும் வரிகளை இவ்வாறு குறிப்பிடுகிறார். உயிரோடு இருக்கும் ஒருவருடைய நினைவும் கனவும் உயிர் வாழ்தல் பற்றியே இருக்கவேண்டும். இறப்பினை பற்றிய கனவுகள் இறந்தபின் வேண்டுமானால் வரட்டும்.
இதற்கு என்னதான் விடிவு -- To love and To be loved....


3. மொழி வரலாறு - மு.வரதராசன் . அவரது இலக்கிய படைப்புகள் தமிழ் மொழியை தின்மையுற பெருமை பேசுகின்றன. தமிழின் பெருமையினை மறந்துவிட்ட இக்காலத்தில் இது போன்ற நூல்கள் புத்தக அலமாரியின் அடித்தட்டில்தான் உள்ளன. அவருடைய முன்னுரையில்,


மொழி வரலாறு,   மொழியியல் என்னும் இரு துறைகளும் சென்ற நூற்றாண்டில் வளர்ந்தனவாகும். அன்று முதல் நேற்றுவரையில் இவ்விரு துறையிலும் கருத்துபூசலும் குழப்பங்களும் மறைந்து கருத்துவேறுபாடுகள் மட்டுமே உள்ளன. அவற்றை குறித்து கவலைப்படாமல் உண்மை உணரும் வேட்கையுடன் அறிய முயல்வோர்க்கு, இவ்விரு துறைகளும் பயனுள்ளனவாக விளங்குகின்றன.

இந்த நூலில் தமிழ்  மொழியின் எழுத்து வடிவம் அதன் ஒலிவடிவம் அது உருவான விதம் என்று ஆரம்பித்து கொஞ்சம் அடிப்படை இலக்கணம் மரூஉ போன்ற மறந்துபோன விசயங்களை தீவிரமாக எடுத்துச்சொல்கிறார். குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுதல் போலன்று உலகளாவிய மொழிகளுடன் ஒப்பீடு செய்து தமிழை பெருமைபடுத்துகிறார். 


4. Awakening the Mind , Lightening the Heart - His Holiness The Dalailama. இது ஆன்மீகத் தேடலுக்கான விளக்கங்கள் கிடைக்கப்பெற்ற நூலாகும். அவரது முன்னுரையில்


நம்முடைய மனம் தெளிவுபெற வேண்டுமெனில் தியானம் மட்டுமே அதனை பெற்றுத்தரும். தியானம் மட்டுமே மனமாற்றங்களை உருவாக்கி சிக்கல் என்ரு நினைப்பவற்றை சாதகமாக மாற்றித்தரும் திறமையை தரும் என்கிறார்.


இவர் இந்த நூலில் புத்தமத சம்பிரதாயங்களைவிட தியானம் பற்றியே பேசுகிறார். அதையும் சிறப்பாக சொல்கிறார். ஒரு துறவியின் எழுத்தாக இதனை டிக்கும்போது வாழ்க்கையின் தெளிவு பெறாத ஆன்மீக விசயங்களுக்கு விளக்கம் கிட்டுகிறது. இந்த நூலை மனவள கட்டுரைகளின் தொகுப்பாகவே பார்க்கமுடிகிறது.


இரண்டாவதும் நான்காவதும் ஆங்கில மொழியில் எழுதப்பட்டவையாக இருந்தாலும் இந்த பதிவினை படிக்கும் சிலருக்கு இந்த நூல்களை அறிமுகப்படுத்த எண்ணியே சேர்த்துள்ளேன். பொறுத்தருள்க.


இந்த பதிவுத்தொடரை எழுத அழைக்கப்படுபவர்கள் ( கிட்டத்தட்ட வரிசையின் கடைசியில் இருக்கிறேன். ஏற்கனவே எழுதியிருப்பவரை அழைத்திருந்தால் மன்னிக்கவும்.)
1. கீதமஞ்சரி கீதா - இவருடைய எழுத்துக்கள் பரந்த வாசிப்பு தன்மையை பறைசாற்றுவதால் அழைக்கிறேன்.
2. சில மணித்துளிகள் - பிரணவன் - ஏதாவது ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டேயிருக்கும் தீவிர இலக்கிய சமர்த்து.
3. மதுரை சரவணன் -  ஆசிரியர் என்பதால் தீவிர வாசிப்பு இருக்கும் என்பதால் சிறப்பான பதிவை எதிர்பார்த்து அழைக்கிறேன்.

4.கூட்டாஞ்சோறு- சிசு - பதிவுலக நண்பர். சிறப்பான பதிவுகள் தருபவர்.
                                                                                                     -  Sagampari