குழந்தைகள் தினத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர் எல்லையில்லாமல் விரிவடைய வேண்டும் என்று விரும்புகிறேன். என்னை இந்த தொடர் பதிவு எழுத அழைத்த சைலஜா மேடம் அவர்களுக்கு மிக்க நன்றி. இந்த தொடர் பதிவுகள் மனிதச்சங்கிலி போல மனச்சங்கிலியால் பிணைத்து அழுத்தமாக ஒரு விசயத்தை சொல்ல வைக்கின்றன. கடலென விரியும் பதிவுகளில் நம்முடைய கருத்தை பதிவதிலும் ஒரு மகிழ்ச்சி வரவே செய்கிறது.
இது அவனுடைய உலகம். நான்தான் அந்த உலகத்திற்குள் இழுக்கப்பட்டுள்ளேன். இங்கு அவன் சொல்வதுதான் சரியாக இருக்கும். அடுத்த முறை அவனுடைய அலைவரிசைக்கு செல்ல முயற்சிக்கிறேன். இந்த முறை அவனுடைய கோட்பாட்டின்படி நான் சரியாக செய்துவிட்டேன். அடுத்த ஒரு மணி நேரம் கழித்து உறக்கம் வந்த கண்களுடன் அவன் சென்றபோது என்னுடைய உலகம் மிகவும் புத்தம் புதியதாக பூத்திருந்தது. அதுதான் அவர்கள் உலகம். அந்த உலகத்திற்குள் செல்ல அவர்களுடன் சேர்ந்து பயணிக்கத் தெரிந்தால் மட்டுமே அனுமதி கிட்டும். அவர்கள் கை நீட்டும் திசையில் பறக்கத் தயாராக இருக்கும் மனம் மட்டுமே அங்கே உயிர்ப்புடன் இருக்கும்.
அதுவும் இப்போது தொலைகாட்சியின் காலத்தில் அதிகம் புரிந்து கொண்டு மழலையின் எண்ணங்களுடன் அவர்கள் சிந்திக்கும் வேகம் இருக்கிறதே மிக அதிகம். நீர் நிறைந்த வாளியில் விழுந்துவிட்ட ஒரு பொம்மையை எடுத்துக் கொண்டு 'செத்துப் போயிட்டியே' என்று மூன்று வயது அம்மு அழுதபோது நானும் சோகமாக அமர வேண்டியதாகிவிட்டது. அவர்களுக்கு அனைத்தும் புரிகிறது. அவர்களுடைய மன நிலையில் அதனை எடை போடுகிறார்கள் முடிவெடுக்கிறார்கள்.
சில சமயம் நம்முடைய உலகம் சுயநலம் கருதி அவர்களை மிகவும் சிரமப்படுத்துவதை உணரும்போது வலிக்கிறது.
- பள்ளி விழாவில் பாரதி வேடம் போட்ட மூன்று வயது சிறுவன் கூட்டத்தை பார்த்து பயந்து கண்களில் நீர் வழிய நின்றபோது.
- ஒரு தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியில் அருமையாக மழலையில் பாடிய மூன்று வயது சிறுமி சிவப்பு விளக்கு எரிந்தபோது அழ ஆரம்பித்தது.
- கடுமையான தட்பவெப்பம் நிலவும் நம் நாட்டில் பல அடுக்குகளாக உடை உடுத்திக் கொண்டு பொம்மைபோல வலம் வரும் குழந்தைகள் - சொல்ல முடியாமல் சிணுங்கும்போது..
- வீட்டில்கூட ஹக்கிஸ் அணிந்திருக்கும் குழந்தைகள்
- பெரியவர்களை தவிர்த்து பொம்மைகளுடன் மட்டுமே ரகசியம் பேசி உறங்கிப் போகும் குட்டி தேவதைகள்..
மழலை உலகம் மகத்தானதுதான். அவர்களுடன் மலை முகடுக்களில் மேகம் போல மிதக்கவும், கைக்கு கிட்டிய கண்சிமிட்டும் விண்மீன்களாக மாறவும், கண்ணை கரிக்காத நீரலைகளாக கால்களை வருடிச்செல்லவும், பூத்தூவல்களாக பனிப்பொழிவுகளை நிகழ்த்தவும் நாம் தயாராக இருந்தால் இருவருக்குமே மகத்தானதுதான்.
துல்லியமான ஒலிகளைக்கூட உணரக்கூடிய மின்தடை ஏற்பட்ட மதியங்களில் சிலவீடுகளில் ஒலிக்கும் மழலையின் சிணுங்கல் குரல்களும் மிரட்டும் அதிகார குரல்களும் எனக்குத் தெரிவிக்கும் செய்தி ஒன்றுதான். வாழ்க்கையின் நிதர்சனங்களால் ஒரு அழகான உலகத்தை விட்டு வெளித்தள்ளப்பட்ட நாம் அவர்களையும் வெளியே இழுக்கப் பார்க்கிறோமா? நம்மை விட விரைவாகவும் அழுத்தமாகவும்..... விளக்குங்களேன்.
உலகம் உயிர்த் துடிப்புடன் இருப்பது குழந்தைகளின் நகர்வுகளால்தான். மிக மெதுவாக இருந்தாலும்.... அது இல்லாத உலகம் வெற்று பூமிதான். இதோ என் கவிதை ஒன்று படியுங்கள்.
பூஜ்ஜியங்கள் பூக்குமா? .
நான், டாமி, பொம்மி, அம்மா
குட்டிப்பாப்பா, மிட்டாய்கள்
வண்ண வண்ண பலூன்கள்..
ஏதோ ஒரு நாளில் ....
என் உலகம் கலைந்தது.
கனவு கரைய மனம் கனக்க
ஒன்றுமில்லாத வெறுமையில்
வெற்றிடத்தின் குறியீடாக
பூஜ்ஜியங்கள் பதிக்கப்பட்டன.
நாட்கள், மாதங்கள், வருடங்கள்
கடந்துவிட்ட மற்றொரு நாளில்
குட்டி தேவதையின் பரிட்சயம்
அழுகையிலும் சிரிப்பிலும்
குட்டி விண்மீன் பார்வையிலும்
என்னுள் உயிரற்று இருந்த
பூஜ்ஜியங்கள் முளைவிட்டு
பூப்பூக்க ஆரம்பித்துவிட்டன.
சைலஜா மேடம் சொல்லியபடி , இது தொடர்பதிவு என்பதால் 2ஆண்பதிவர்கள் இரண்டு பெண் பதிவர்களை அழைக்கிறேன். முடிவில் கவிதை ஒன்று எழுதலாம்.! முடிந்தால் புதிர்க்கேள்வியையும் எழுப்பலாம்.
இப்போது நான் அழைப்பவர்கள்...
குழந்தைகளுக்கான வலைப்பூ வைத்திருக்கும் சிறுவர் உலகம் காஞ்சனா மேடம்.
உணர்வுபூர்வமான கவிதைகளை எழுதும் கீதமஞ்சரி கீதா.
மனம் தொடும் கவிகள் எழுதும் வசந்த மண்டபம் மகேந்திரன்
வெவ்வேறு களங்களில் சிந்தனை பதிக்கும் தோழர். சூரியஜீவா
மிக்க நன்றி!