மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

அன்புள்ள மகனுக்குக்கு
       ஆசிர்வாதங்களுடன் நான்
நீ அனுப்பி வைத்த அத்தனையும்
       தவறாமல் கிடைத்ததுள்ளன
ஆனால் ஏன் நனைந்துள்ளன
       இனிப்பில் உப்பின் சுவையும்
துணியின் கண்ணீர் கரையும்
        என்னை நினத்து அழுதாயா?

எனக்கு தெரியும் உன் நிலை
     பாவத்தை நினைத்து பயமா?
நீ யாராக இருந்தாலும்
      நீரூற்றி வளர்த்தது நானே
அப்போது பேசியதை மற
     எனக்கு யாரிடமும் கோபமில்லை

இங்கு வந்த பின் புரிகிறது
    அன்பு மட்டுமே சேமிக்கப்படுகிறது
இருளில்லாத வெட்ட வெளியில்
    வெளிச்ச விருட்சத்தின் வேர்
இரக்கம் கருணை பாசம் மட்டுமே
    மற்றவை கற்பூரமாய் கரைந்தன
 

கன்னத்தில் கை வைத்து
     இதயத்திரையில் திரும்பி பார்த்தால்
எண்ண அலைவரிசையில்
     அன்பின் முகவரிகள் மட்டும்
நாம் தந்ததும் பெற்றதும் காவியமாய்
      மனதின் ஒளிப்படமாய்......


வேரறுத்த கிளைக் கதைகளும்
     அவ்வப்போது வந்து நீதி சொல்லி
என்னையே தீர்ப்பெழுத வைக்கின்றன
      எனக்காக என்னிடம் பொய்கூற முடியுமா
நேசிக்க மறந்த சில சமயங்கள்
       மனித நெறியிலிருந்து தவறியுள்ளேன்


உண்மையை சொல்லப் போனால்
     கொதிக்கும் கொப்பரை, நெருப்பு மலை
என்றெல்லாம் இங்கு இல்லை
       மனிதாபிமானம் மட்டுமே நீதி
நம் கதையின் விமரிசகராய்
      நாமே சிரித்து அழுது அவமானப்பட்டு...


  ரகசியமாய் சொல்கிறேன்
 
   மன்னிக்கவும் மறக்கவும் செய்தால்
மனித்தத்துவம் தெய்வமாகிறது
     கடமை தவறாமலிருந்தால்
தெய்வத்தை மனிதனுள் உணரலாம்.

2 comments:

// மன்னிக்கவும் மறக்கவும் செய்தால்
மனித்தத்துவம் தெய்வமாகிறது //

கவிதை அருமை.வாழ்த்துக்கள்

தொடர்ந்து கருத்துரை பதியும் மேலான ஆதரவிற்கு நன்றி