நம் மனம் சம நிலையில் இருக்க வேண்டும்.
நிம்மதியை வெளியே தேடாதீர்கள் உங்களுக்குள்ளே தேடுங்கள்.
எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே
நம்மை சுற்றி இருப்பவர்களை நம் பக்கம் இழுக்கப்பார்த்து, முயற்சி செய்து தோற்றுப்போய் தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கும்போது மேலே குறிப்பிட்ட வாக்கியங்கள் கவர்ந்து இழுக்கும். யோகா, தியானம், பஜனை என்று முயன்று ஒரு வழியாக மனதினை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவோம். அதன் பிறகுதான் நான் குறிப்பிடும் விசயம் நடக்கிறது.
சிலர் யோகா, தியானம் போன்றவை பயிற்சி செய்ய ஆரம்பித்த உடனேயே பூமியைவிட்டு அடுத்த மட்டத்திற்கு சென்று விட்டது போல, நல்லது கெட்டது எது நடந்தாலும் ஒரு தெய்வீகப் புன்னகை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். "ஜப்பானில் சுனாமியாமே " என்றால் "எல்லாம் அவன் செயல்" என்பார்கள். "தங்கம் விலை ஏறிவிட்டதாமே" என்றால் -பூலோகத்தில் வாழும் அற்ப மானிடப்புழுவே- என்பதுபோல் பார்க்கின்றனர். சிலர் "எனக்கு வாய்த்தது அவ்வளவுதான் " என்று விச்ராந்தியாய் உள்ளது போல பேசுவார்கள். நம் செயல்கள் அவர்களுக்கு பிடித்திருக்கிறதா? அவர்களுக்கும் நமக்குமான உறவு இணக்கமானதா என்று கூட தெரியாமல் கண்ணை கட்டில் காட்டில் விட்டதுபோல உணர்வோம். யோகா போன்றவை செய்வதால் நாம் உணர்வு பூர்வமாக நம்மை கட்டுப்படுத்திக் கொள்கிறோம் என்பது உண்மையே. ஆனால், மற்றவர்களிடமிருந்து விலகுகிறோமா? என்பது எனக்குள் எழும் கேள்வி. இப்படி நடந்து கொள்வதுகூட ஒரு மாயையோ என்று தோன்றுகிறது.
பரீட்சைக்கு வரும்போது நன்றாக படித்து விட்டு வந்தவன் , சுமாராகப் படித்தவனை ஒரு பார்வை பார்ப்பானே அது போல பார்வை மாற்றம் ஏற்படுகிறது. அவர்களை சுற்றி இருப்பவர்கள் சுவற்றில் முட்டிக் கொள்வதைப்போல உணர்வதுதான் உண்மை. உண்மையில் நாம் நம்மை சுற்றி இருப்பவர்களுடன் எத்தனையோ வழிகளில் தொடர்பில் இருக்கிறோம் - என்னால் உன்னுடன் இணக்கமாக இருக்கமுடியவில்லை, எனக்கு உன்னுடைய இந்த விருப்பம் ஒத்து வராது, ஏன் இப்படி நடந்து கொள்கிறாய், என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை " என்ற வார்த்தைகள் வருத்தப்படவோ கோபப்படவோ வைத்தாலும், "இது தான் என்னுடைய எல்லை" என்று கண்ணுக்குத்தெரியாத ஆனால் உணர்ந்து கொள்ளக்கூடிய வரைமுறையை சுட்டிக்காட்டுகின்றனவே. இந்த எல்லையை சரிவர உணர்த்தாமல் இருப்பது தவறல்லவா? .
உதாரணமாக சிலரிடம் நாம் கேலி பேச முடியும், சிலர் மற்றவர் கேலி பேசினால் பொறுத்துக் கொள்வார்கள், நாம் பேசினால் வேதனையடைவார்கள் இல்லையா?. இதைத்தான் பழகுமுறை எல்லை என்கிறேன். இதை நம்முடன் தொடர்பிலிருக்கும் ஒவ்வொருவருக்கும் உணர்த்த வேண்டியது நம் வேலையல்லவா? இதை சரியாக செய்து விட்டால் தவறான புரிந்து கொள்ளுதல்களும் அதன் விளைவாக நடக்கும் மனதிற்கு ஒவ்வாத காரியங்கள் - முக்கியமாக தற்கொலை முயற்சி போன்றவை - நடை பெறாது அல்லவா? நம்மை சம நிலைபடுத்திக் கொள்வது முக்கியம், அதைவிட முக்கியம் அடுத்தவருடன் நம் நிலையை சமன் செய்வது. எல்லை மீறிய வெளிப்பாடுகள் தரும் அத்தனை கெடுதல்களையும் எல்லையை சுருக்கிக் கொள்வதும் செய்யும். சிரித்து, சண்டையிட்டு, கோபப்பட்டு , மகிழ்ந்து என உணர்வு பூர்வமாக எல்லோருடனும் சேர்ந்து வாழ்ந்து பார்ப்போமே? எப்படி ?.
யாது வரினும்... யாது போயினும் part-2
இனி அடுத்த பதிவில்....