மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்


      தன்னை மறத்தல் பற்றி இப்போது பார்க்கலாம். ஒரு உணர்ச்சி வசப்படும் சூழ்நிலையில், உடனடி செயல்பாடு இட்'ன் பொறுப்பு. அது செயல்படுமுன் அதனை கட்டுப்படுத்துவது. ஈகோவின் பொறுப்பு. சில சமயம் ஈகோவையும் மீறி நம் வெளிப்பாடுகள் இருக்கும். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் சுற்றி இருப்பவரை பொருட்படுத்தாமல் கோபமாக கத்துவது, அழுவது, உடல் நடுங்க கட்டுப்பாட்டை இழப்பது ஆகியன நடைபெறும். சிறு பிள்ளைகள் போல இருக்கும். ஏன் இப்படியாகிறது? பலவீனமான ஈகோவின் செயல்பாட்டை இட் எளிதாக தாண்டிவிடுகிறது. எப்போதெல்லாம் ஈகோ பலவீனமடையும். நமக்குப் பிரியமானவர்கள், நமக்கு நல்லது செய்பவர்கள் முன்னிலையில் ஈகோவின் சக்தி குறைந்து விடும். அவர்களிடம் தன்னை மறைத்தல் தேவையில்லை என்பதால். ஆனால், குறிப்பிட்டவர்களையும் தாண்டி, அனவரிடமும் இது போன்ற வெளிப்பாடுகள் நமக்கு நல்லது செய்யாது. "நான் ஒரு திறந்த புத்தகம்" என்று சொல்லிக் கொண்டு அனைவரிடமும் நம் மன உணர்வுகளை வெளிக்காட்டி கொண்டிருந்தால், தேவையில்லாத சிக்கல்கள் உருவாகும். எல்லோரிடமும் ஒளிவு மறைவில்லாமல் நன்றாக பழகுவது என்ற கொள்கை பலவீனமான ஈகோவை உருவாக்கும். இது நமக்கு ஆபத்தானது. சுதந்திரமாக பழகும் எல்லை என்பது ஒவ்வொருவரிடமும் மாறுபட வேண்டும்.. வீட்டை திறந்து போட்டு விட்டு திருடனை வரச்சொல்லிவிடுவது போல ஆகாதா. இன்றைக்கு நிறைய இளைஞர், இளைஞிகளை சிக்கலில் கொண்டு தள்ளுவது இந்த கொள்கைதானே.


    உண்மையில் எதிரில் இருப்பவர்கள் நம்மை எளிதாக எடைபோட இது ஏதுவாகி விடுகிறது. மேற்குறிப்பிட்ட உணர்ச்சி வெளிப்பாடுகள் அனைத்தும் வேண்டியவர் முன்னிலையில், நம்முடைய இடம் என்று உணரக்கூடிய பாதுகாப்பான எல்லையில் நடைபெறவேண்டும். நம்மை சுற்றி இருக்கும் அனைவரும், நம்முடன் பழகும் அனைவரும் நம்மை புரிந்து கொள்ளவேண்டும் என்ற அவசியம் இல்லை. நம்முடைய பலம், பலவீனம் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. அதனை மீறி நாம் பழக ஆரம்பிக்கும்போது, அந்த மற்றவருக்கு நம்மையும் அறியாமல் ஒரு அனுமதியை அளித்துவிடுகிறோம். நாம் முற்றிலும் அவர்களுடைய கட்டுப்பாட்டிற்குள், மனதளவில் சென்றுவிடுவோம். பிறகு, பலவீனமான சந்தர்ப்பங்களில் - சமயம் பார்த்து நடந்து கொண்டு அவர்கள் எளிதாக நம்மை ஆளுமை செய்ய முடிகிறது. இதுதான், சமூக பாதிப்பிற்கு பெரிய காரணம் ஆகிறது. சாமியார்களின் வெற்றிக்கு இதுதானே காரணம். குடும்பப் பிரச்சினைகளில் அன்னியர்களின் தலையீட்டிற்கு காரணம் குடும்பத்தில் யாரோ ஒருவருடைய பலவீனமான ஈகோதான்.

      சிலர், இது போன்ற போலியான வலை வீசல்களில் மயங்கி கற்பனை காதலுக்குள் இறங்கி விடுகின்றனர். தாய் தகப்பனை மறக்க வைத்த காதல்(?), கணவன்/மனைவியையும் மறக்க வைக்கிறது. பல குடும்பங்களின் சிதைவிற்கு இதுதான் காரணம் அல்லவா? இது பெண்களுக்கு மட்டும் பொருந்தும் என்று தள்ளிவைக்க வேண்டாம். முட்டாள்தனமாக தன்னுடைய மன பலவீனம் அத்தனையும் புரிந்து கொள்ளும்படி நடந்து கொண்டு, பெண்களிடம் தன்னுடைய வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கும் ஆண்களுடைய நிலைக்கும் பலவீனமான ஈகோதான் காரணம். ( மனைவியை பற்றி அன்னியப் பெண்ணிடம் பகிர்ந்து கொள்தல், கணவனின் கெடுபிடிகளை மற்ற ஆண்களுடன் பிரஸ்தாபித்தல்)

    யோசித்துப் பார்த்தால், நாம் கட்டுப்பெட்டித்தனம் என்று நினைக்கும் வரைமுறைகள்தான் நம் ஈகோவை பலப்படுத்தும் காரணிகள் ஆகிறதோ? தனி மனித முன்னேற்றத்தை தடை செய்யும் காரணியாக வரைமுறைகள் இருந்தாலும், நான் இதை கலாச்சரம் சார்ந்த சமூகத்தின் பார்வையிலிருந்துதான் கேட்கிறேன். என்னுடைய ஈகோவினால் எனக்குள் ஏற்படும் தயக்கம் பன்னாட்டு நிறுவனங்கள் சார்ந்த தொழில் முறைகளில் என்னை வெற்றிகரமான ஒரு நிலைக்கு கொண்டு செல்லமுடியுமா?. அதே சமயம், என்னுடைய ஈகோவை பலவீனப்படுத்தும் நவீன கொள்கைகளைத் தாண்டி இல்லற வாழ்க்கையில் வெற்றி காண முடியுமா?
                                                                                                                       - அடுத்த பதிவில்
 
 தன்னை மறத்தல்அல்லது  மறுத்தல்-4                                                                                                        -

10 comments:

மிகச் சரி
மன பலவீனம் புரிந்து கொள்ளும்படி
நடந்து கொண்டு அதனால்
அடுத்தவர்களை
லெட்சுமணக்கோட்டை தாண்டி உள்ளே நுழையவிட்டு
அதனால் வரும் அவதிகள்தான்
மிக அதிகம்
நல்ல தெளிவினைத் தரும் பதிவு
ஆவலுடன் தொடர்கிறோம்
தொடர வாழ்த்துக்கள்

பாராட்டுக்களுக்கு நன்றி திரு.ரமணி.

நல்லா உபயோகமா இருக்கு பதிவு, தொடருங்கள்...

சூப்பர்...

//நல்லா உபயோகமா இருக்கு பதிவு, தொடருங்கள்...//
தொடர்கிறேன். நன்றி திரு.மனோ

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு.சௌந்தர்

மிகவும் பயனுள்ள பதிவு.

உண்மைதான்.பலவீனமான ஈகோவினால்
சில சமயங்களில் சிக்கல்கள்தான் உருவாகும்.
பாதுகாப்பான, மிக நெருக்கமான உறவுகளன்றி தன்னிலை மறத்தல் ஆகாது.
கட்டுப்பெட்டித்த்னம் என் நினைப்பவை ஈகோவை பலப்படுத்தும் காரணிகள்தான்,
ஆனால் ஒட்டு மொத்தமாக தனி மனித முன்னேற்றத்தை தடை செய்பவை என தள்ள முடியாது.
அதன் அளவு, எல்லை தெரிந்து நாம் செயல் பட்டால் அப்பொழுதும் பலப்பட்டிருக்கும் நமது ஈகோ
தொழில் முறைகளிலும் நம்மை வெற்றிப்பாதைக்கு நகர்த்தும் என்பது எனது கருத்து.

ஈகோவை பலவீனப்படுத்தும் நவீன கொள்கைகளை நாம் ஆள வேண்டும்.அப்படி
இருப்பின் இல்லறம் சுகமே.அதை தவிர்த்து அது நம்மை
ஆள விட்டு விட்டோமானால் இல்லறம் என்ன, சுற்றி உள்ள எல்லாமே சங்கடம்தான் அல்லவா?

//நாம் கட்டுப்பெட்டித்தனம் என்று நினைக்கும் வரைமுறைகள்தான் நம் ஈகோவை பலப்படுத்தும் காரணிகள் ஆகிறதோ? தனி மனித முன்னேற்றத்தை தடை செய்யும் காரணியாக வரைமுறைகள் //இப்படி சொல்லித்தான் பலவீனமான ஈகோவை உருவாக்கி சிலர் குளிர்காய்கின்றனர். நன்றி ராஜி.

நீங்க உளவியல் படித்தவரா சகோதரி ? இத் ,ஈகோ ,சூப்பர் ஈகோ எல்லாம் நினைவுபடுத்தி விட்டீர்கள் நன்றி

மேனேஜ்மென்ட் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கிறேன். மேலும்பொதுவான கவுன்சிலிங்க் பயிற்சி சென்று இருக்கிறேன். நன்றி திரு.சண்முகவேல்.