மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

      யோசித்துப் பார்த்தால், நாம் கட்டுப்பெட்டித்தனம் என்று நினைக்கும் வரைமுறைகள்தான் நம் ஈகோவை பலப்படுத்தும் காரணிகள் ஆகிறதோ? தனி மனித முன்னேற்றத்தை தடை செய்யும் காரணியாக வரைமுறைகள் இருந்தாலும், நான் இதை கலாச்சரம் சார்ந்த சமூகத்தின் பார்வையிலிருந்துதான் கேட்கிறேன்.  என்னுடைய ஈகோவினால் எனக்குள் ஏற்படும் தயக்கம் பன்னாட்டு நிறுவனங்கள் சார்ந்த தொழில் முறைகளில் என்னை வெற்றிகரமான ஒரு நிலைக்கு கொண்டு செல்லமுடியுமா?. 
        இது முக்கியமான கேள்வி. ஆராய்ந்து பார்க்கும் போது, இன்றைய உலகில் வெற்றியை தயக்கம் தள்ளிப் போடுகிறது. தயக்கம் என்பது சமயம் பார்த்து செயல்படுமாறு கட்டுப்படுத்தும் ஈகோவின் ஆளுமைதான் என்பது நமக்கு புரிந்திருக்கும். இன்றைய சூழ்நிலையில், முந்தினவன் கை மந்திர வாள் என்ற பழமொழிக்கு ஏற்பதான், வாய்ப்புகளும் கைகூடி வரும். எங்கள் கல்லூரிக்கு வளாக நேர்முகத்தேர்வில் பொதுவாகவே தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், தயக்கம் இல்லாமல் சரளமாக பேசக்கூடியவர்கள், பழகக்கூடியவர்கள் ஆகியோர்தான். நவீன கொள்கைகளின்படி நாம் ஈகோவிலிருந்து வெளிவந்தால்தான் தொழில் முறையில் வெற்றிக் காண முடியும். இந்த குணாதிசயம், கண்டிப்பாக ஈகோவை பலவீனப்படுத்தும். ஆனால், நம்முடைய தொழில்முறை பழக்கங்களில் இது போன்ற நடவடிக்கைகள் வெற்றி தேடித்தரும். (360 degree review வில் அனைவரிடமும் சரளமாக பேசுபவர்தான் வெற்றிபெற முடியும்). சரளமாக பழகுபவர்கள் துணிச்சல் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இதே பழக்கம்தான் அலுவலகம் அல்லாத இடத்திலும் வரும். அதனால் என்ன?

       ஒரு முறை நினைவு கொள்வோம். இட் என்பது சூழ்நிலையிலிருந்து கற்றுக் கொள்ளும் ஆசை மனம். ஈகோ என்பது இட்ஐ கட்டுப்படுத்தும். சரியான செயல்பாடுகளை வலியுறுத்தும். ஆனால் ஒரேயடியாக எல்லாவற்றிற்கும் ஒரு கேள்வி எழுப்பி நம்மை தயங்க வைக்கவும் செய்யும். ஈகோவை மீறி நாம் செயல்படுவதனால், அதனை பலவீனப்படுத்துகிறோம், எனவே இட்ஐ வளர்த்துவிடுகிறோம். நமக்குத் தோன்றியபடி (கட்டுப்பாடின்றி?) செயல்படுவோம். இதுதான் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கிறது. இதில், "என்னை புரிந்து கொள்வதில்லை" என்று மற்றவர்கள் மீது புகார் வேறு சொல்வோம். உண்மையில் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தொழில் சார்ந்த பழக்கத்திற்கும் வேறுபாடின்றி போய்விடுகிறது. எனவே இட் ,ஈகோ இரண்டும் தேவைப்பட்ட நேரத்தில் இடத்தில் சரியாக செயல்படவேண்டும். எப்படி?

     இரண்டையும் சரியாக கையாள மூன்றாவதாக ஒன்றின் உதவி தேவைப்படுகிறது. சூப்பர் ஈகோ...? இரண்டிற்கும் இடையே ஒரு இணக்கம் காண சூப்பர் ஈகோவால் முடியும். சூப்பர் ஈகோ மிகச் சரியாக செயல்படும். ஏதோ ஒரு இக்கட்டில் நாம் இருக்கும்போது சட்டென ஒரு யோசனை தந்து , நம்மை காப்பாற்றுவது இதுதான். நிதானமாக நம்முடைய வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை ஆராய்ந்தால், உணர்ச்சி வசப்பட்டு செயல்பட்டது (நாம் கொஞ்சம் அமைதியாக இருந்திருக்கலாமோ ? ) ரொம்பவும் யோசித்து தவறவிட்ட தருணங்கள் ( எதுவோ தடுத்திருச்சு?), நம்மை நாமே மெச்சிக்கொள்ளும் விதமாக எடுக்கப்பட்ட வியத்தகு முடிவுகள் ( உள்ளுக்குள்ள ஏதோ சொல்லுச்சு!) ஆகியவற்றின் போது ஆதிக்கம் செலுத்தியது நம் மனம்தான் என்று நினைத்திருந்த கருத்தினை இப்போது மாற்றிக்கொண்டு நம் மனம் என்பதே மூன்று குணாதிசயங்கள் ஒருங்கிணைந்ததுதான் என்று புரிந்து கொண்டிருப்பீர்கள்.

        சூப்பர் ஈகோ சரியாக செயல்படும்போது நம்முடைய சிக்கல்களுக்கு விடை எளிதில் கிடைத்துவிடும். இட்ஐ வளர்ப்பது நாம் உள்வாங்கும் சாமான்ய விசயங்கள்தான். ஈகோவை வளர்ப்பது நல்ல விசயங்கள், நல்ல சூழ்நிலைகள் ஆகியன. சூப்பர் ஈகோவை யாரும் வளர்க்க வேண்டியதில்லை. இயல்பாகவே நம்மை அறியாமலே உள்ளிடப்பட்ட விசயங்கள் அதனை பலப்படுத்துகின்றன. நாம் மௌனமாக இருக்கும் நிலையில் சூப்பர் ஈகோ அருமையாக செயல்படும். எப்போதெல்லாம் மௌனமாக இருப்போம்? தியானத்தில் , அமைதியான சூழ்நிலையில் , தனிமையில், ஏதோ ஒரு வேலையில் கவனமாக இருக்கும்போது - பொறி தட்டியது போல சில விசயங்கள் புலப்படும் இதெல்லாம் சூப்பர் ஈகோவின் இருப்பினை உணர்த்தும். தூசு படிந்த கண்ணாடியில் உருவம் தெரியாது என்பது போல மாசு படிந்த மனதில் இது செயல்படாது. தூய்மையான எண்ணங்கள் மூலம் சூப்பர் ஈகோவை பலப்படுத்துவோம்.


இனி சில சிந்தனைகள்:

1. தனித்திரு விழித்திரு பசித்திரு என்ற வாக்கியத்தின் விளக்கம் சூப்பர் ஈகோவை பலப்படுத்துகிறதா?
2. மலைக்கு செல் அல்லது கடலுக்கு செல் மனதுடன் பேசலாம் என்பதும் அதுதானோ? நிறைய வழிபாட்டுத்தலங்கள் கடற்கரையிலும் மலையிலும் அமைய இதுதான் காரணமோ.
3.அனத்து மதத்தின் வழிபாட்டு முறைகளும் சூப்பர் ஈகோவை பலப்படுத்துகின்றனவோ?
  - ஒரு இஸ்லாம் நண்பர் சொன்னது - ஆகாயத்தினை நோக்கிய பார்வையில் மானசீகமாக  உலகத்தைவிட்டு வெளிக்கிளம்பி பூமியை தொலை நோக்கு பார்வையில் பார்க்கமுடிந்தால் குறிப்பிட்ட மந்திரத்தை 300 முறை சொன்ன பலன் கிட்டும்.  இது போன்ற தருணத்தில் நம்மால் தெளிவாக சிந்திக்க முடிகிறதுதானே.

தன்னை மறத்தல் அல்லது மறுத்தல-3

13 comments:

சுடுசோறு எனக்கே.....

அருமையான பதிவு....

பெண் எழுத்து எழுதிவிட்டேனே கவனிக்க வில்லையா ? பதிவு நன்று

வடை என்பீர்கள் மாறிவிட்டதா? வருகைக்கும் கருதுரைக்கும் நன்றி திரு.மனோ

நன்றி திரு.சண்முகவேல்

நீங்கள் இறுதியாக எழுப்பியுள்ள
கேள்விகள் மிக ஆழமானவை
குரானை கொடுத்தருளியவரும் சரி
கீதையைக் கொடுத்தவரும் சரி
பைபிளை அருளியவரும் சரி
காடு மலைகளோடுதானே
இன்னும் குறிப்பாகச் சொன்னால்
இளம் வயதில் மனிதர்களோடு
அதிகம் சம்பத்தப்படாமல்
கால் நடைகளோடுதானே
சம்பத்தப்பட்டிருந்தார்கள்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

இன்றைய உலகில் வெற்றியை தயக்கம் தள்ளிப் போடுகிறது.//
.அனத்து மதத்தின் வழிபாட்டு முறைகளும் சூப்பர் ஈகோவை பலப்படுத்துகின்றனவோ?//
Sure.

நல்ல பகிர்வு...

தனிமை எங்கு கிடைக்கும் ? வழக்கமான இடங்களில் கிடைக்காது . பொதுவாக நீங்கள் எப்பொழுதும் இருக்கும் இடத்திலேயே இருந்தால் உங்கள் சிந்தனை வழக்கமான வேலைகளையே சுற்றி வரும். அதற்க்கு மாறாக வேறு இடத்திற்கு சென்றால் உங்கள் சிந்தனையின் ஓட்டம் மாறும்

//இளம் வயதில் மனிதர்களோடு
அதிகம் சம்பத்தப்படாமல்// தனிமையின் மோனத்தில் இயற்கையோடு இயைந்தது நின்றால் கடவுளை பிரத்தியட்சமாய் காணலாம். கடவுளின் அவதாரமும் இப்படி ஒரு மௌன யாகம் செய்துதான் ஆக வேண்டும் போல். எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது. நன்றி.திரு.ரமணி.

ஒத்த கருத்துரைக்கு நன்றி ராஜேஸ்வரி.

நன்றி திரு.பிரகாஷ்

சரிதான். வேற்றிடம் தேடிப்போவதும் எளிதான வழி. நன்றி திரு.எல்.கே