மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

           
இது பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்குமானது.


               சிறிய வயதில் ஒருவனுக்கு சூப்பர்மேன் போல தெரியும் தந்தை, அவன் வளர்ந்த பின் நண்பனாக முடியாதா என்ன? முதலில் தேவைப்படுவது நம்மை பற்றி நம் பிள்ளைகள் கொண்டிருக்கும் கருத்து கேள்விக்குறியாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்றைய உலகின் மாற்றங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்தான். அதன் குறை நிறைகளை பிள்ளைகளிடம் பேசலாம். அவர்களையும் பேசவிட வேண்டும் என்பது மிக முக்கியம். இல்லை என்றால் நாம் பேச ஆரம்பிக்கும் முன்பே காதுகளை திறந்து வைத்து இதயத்தை மூடி விடுவார்கள்.

             ஒரு போதும் அதிகாரம் செய்யாதீர்கள். குரலை உயர்த்தி பேசுவது என்பது நம் காலத்திலேயே ரசிக்கப்பட்டதில்லையே!. எப்போதும் ஒரே குரலில் அவர்களிடம் பேசாதீர்கள். வீட்டிற்குள் நுழைந்த உடன் இழுத்து வைத்து பேச வேண்டாம். சில சமயம் பிரச்சினையில் இருப்பதுபோல காட்டிக்கொள்ளுங்கள் . பிறகு அவர்களிடம் பேசும்போது விளக்கம் தந்துவிடுங்கள். இதனால் எந்த பிரச்சினைக்கும் நம்மிடம் தீர்வு இருக்கும் என்று நம்புவார்கள். இனி நாம் செய்யவேண்டியதெல்லாம்,

               ஒரு போதும் உங்களுடைய உறவினர்களை பற்றி  அவர்களிடம் தாழ்த்தி பேச வேண்டாம். முக்கியமாக உங்கள் வீட்டுப் பெரியவர்கள், உங்கள் சகோதரர்கள் பற்றி அவர்கள் முன் குறை பேச வேண்டாம். இது இரண்டு விதமாக பாதிக்கும். ஒன்று நீங்கள் குறை கூறியவரை நேரில் சந்திக்கும்போது பாசமழையை நீங்கள் பொழிந்தால், எப்படி நடிப்பது என்பதை உங்களிடமே கற்றுக்கொள்வார்கள். இரண்டாவதாக தங்களுடய சகோதர்கள், பெற்றோர்களுடன் (உங்களிடம்தான்) இதே கொள்கையை பிற்பாடு கடைபிடிப்பார்கள். உறவுகளிடம் நாம் பழகும் முறைதான் உங்கள் குடும்பப் பெருமையை அவர்களுக்கு உணர்த்தும். இதில் பொருளாதார வேறுபாடுகளும் இடம் பெறாததால் பணம் பிற்காலத்தில் முக்கிய இடத்தை பிடிக்காது. "எனக்கு நீங்கள் என்ன செய்து விட்டீர்கள்?", " நான் சம்பாதிக்கிறேன் உங்களுக்கு அடங்கி நடக்கத் தேவையில்லை" என்பது போன்ற வார்த்தைகள் வருவதில்லை. மேலும் வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை சரிவர எடுக்க இது உதவும். உறவினர்கள் முன் நல்ல பெயர் எடுப்பதன் அவசியமும் அவர்களுக்கு  புரியும்.  
                                  
 
"சரி, ஆனால், என்னுடைய உறவினர்கள் சிலர் நெறிப்படி வாழ்பவர்கள் இல்லை, அவ்வளவு பிரியமானவர்களும் இல்லை எனக்கே எத்தனையோ கெடுதல்கள் செய்துள்ளனர், என் பிள்ளைகள் அவர்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா?" என்கிறீர்களா. கண்டிப்பாக உங்கள் கருத்து சரிதான். நாம் என்ன செய்ய வேண்டுமென்றால் நம்முடைய தரம் இறங்காமல், அவர்களின் தன்மையை உணர்த்த வேண்டும். இது போன்றவர்களை மரியாதை குறையாமல் தூரத்தில் நிறுத்தும் வித்தையை உங்கள் பிள்ளைகளுக்கு உங்கள் செயல்கள் மூலம் கற்றுக்கொடுக்க வேண்டும். எதற்கு இத்தனை சிரமம் எடுக்க வேண்டும்?. புகை வண்டி பெட்டிகளாக நம் பின் வரும் குழந்தைகள் ஒவ்வொருவரும் பிற்காலத்தில் எஞ்சின் போல தலைமை பொறுப்பை ஏற்க வேண்டுமல்லவா? எஞ்சினை தூக்கி தண்டவாளத்தில் நிறுத்திவிட்டால் சின்ன சின்ன சிக்னல்மட்டும் தந்தால் போதும். அவர்களை பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. 


             இன்னும்    அவர்கள்  நம்மைவிட்டு விலகும் சந்தர்ப்பங்களை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். 

                                      நேமித்த நெறிப்படியே - இந்த                                    
                          போமித் தரைகளிலெல்லாம் - மனம்
                                     போல விருந்தாளுபவர் எங்களினத்தார்
                            நெடுவெளி யெங்கணும் நித்தம் உருண்டே
                                                                                - மகாகவி பாரதியார்

குடும்ப உறவில் முரண்பாடுகள் தவிர்ப்பது எப்படி? - பாகம் 3         

0 comments: